ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு இரண்டுமே உடைய மாணவர்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பாடத்திட்டத்தின் வழி பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்காங் வட்டாரத்தில் உள்ள 'ஃபெர்ன்வேல் கார்டன்ஸ்' பள்ளியில் அறிமுகம் காணும் இந்தப் பாடத்திட்டம், இக்குறிப்பிட்ட பிரிவினரின் தேவைகளை மேலும் சிறந்த முறையில் கையாள்வதுடன் பள்ளி வளாகத்தில் ஆட்டிசம் உள்ள மாணவர்களுக்கு உகந்த இடங்களும் ஏற்படுத்தித் தரப்படும்.
அண்மைய ஆண்டுகளாக ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு இரண்டுமே கொண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் போக்கைக் கவனித்துவந்ததாகவும் அறிவுசார் குறைபாடு மட்டுமே கொண்டவர் எண்ணிக்கை குறைந்துவருவதாகவும் பள்ளி தெரிவித்தது. 'மைண்ட்ஸ்' எனப்படும் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிங்கப்பூர் அமைப்பின்கீழ் இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் குறித்து மைண்ட்ஸ் நேற்று அறிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான முன்னோடித் திட்டத்தால் சுமார் 50 மாணவர்கள் பலனடைந்துள்ளதாகக் கூறப்பட்டது. அடுத்த ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டத்தை அனைத்து மாணவர்களுக்கும் நடைமுறையாக்கத் திட்டமிடப்படுகிறது.
பள்ளியில் ஏழு முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். புதிய பாடத்திட்டத்தின் மூலம் இன்னும் இளம் வயதிலேயே தங்களின் ஆர்வத்தை மாணவர்களால் கண்டறிய கூடுதல் வாய்ப்புகள் அமைத்துத் தரப்படும் என்றும் நாளடைவில் தங்களின் ஆற்றலை மாணவர்கள் மேலும் வலுவாக்க முடியும் என்றும் ஃபெர்ன்வேல் கார்டன்ஸ்' பள்ளி முதல்வர் மேத்யூ அவ் கூறினார்.
விளையாட்டுகள், காண் கலைகள், தகவல்தொடர்பு தொழில்நுட்பம் போன்ற அம்சங்களில் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது சாத்தியமாகலாம்.
முன்னதாக எண்ணறிவு, தினசரி வாழ்க்கை தொடர்பான செயல்பாட்டுத் திறன்களில் பாடங்கள் கவனம் செலுத்தியதாக திரு அவ் தெரிவித்தார்.
இனி, ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திலும் குழுநிலையில் கற்றல், பலங்களை அறிதல், சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றிலும் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் கவனம் செலுத்தும் என்றார் அவர்.
இதற்கிடையே, ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு இரண்டுமே உள்ள மாணவர்களைக் கையாள்வதற்குக் கடந்த ஆண்டுகளில் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுவருவதாகவும் கூறப்பட்டது.
ஆட்டிசம் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற அம்சங்கள் பொருந்திய இரண்டு வகுப்பறைகள், மனதுக்கு இதமளிக்கும் வண்ணங்கள் கொண்ட பள்ளிச் சுவர்கள் என பள்ளியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று ஃபெர்ன்வேல் கார்டன்ஸ் பள்ளிக்கு வந்திருந்தார்.