சிங்கப்பூரில் வேலை செய்யும் 40 விழுக்காட்டு ஊழியர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு அனுமதி இல்லாவிட்டால் அந்த வேலை வாய்ப்பை நிராகரிப்பர் என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆயிரம் ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் நீக்குப்போக்கான வேலை நேரத்துக்குத் தாங்கள் முக்கியத்துவம் தருவதாகக் கூறினார். பங்கேற்றோரில் 41 விழுக்காட்டினர் தங்களுக்கு ஏதுவான நேரத்தில் வேலை செய்ய இயலாவிட்டால் அந்த வேலை வாய்ப்பை ஏற்கமாட்டோம் என்று கூறினர்.
'ராண்ட்ஸ்டாட்' நிறுவனம் நடத்திய ஆய்வில் 18 வயது முதல் 67 வயது வரையிலான ஊழியர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 27 விழுக்காட்டினர் நீக்குப்போக்கான வேலை நேரம் இல்லாததாலும், வீட்டிலிருந்து வேலைசெய்ய இயலாததாலும் வேலையை விட நேர்ந்ததாகக் குறிப்பிட்டனர்.
ஆய்வில் பங்கேற்ற 52 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் முதலாளிகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் தெரிவை வழங்கியிருப்பதாகக் கூறினர். வேலை நேரம் தொடர்பில் நீக்குப்போக்குத் தன்மை கடைப்பிடிக்கப்படுவதாக 60 விழுக்காட்டினர் கூறினர்.
மனமகிழ்ச்சியின்றி வேலை செய்வதைக் காட்டிலும் வேலை இல்லாமல் இருப்பதே மேல் என்று 41 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையூறாக விளங்கினால் வேலையை விட்டுவிடுவோம் என்று 52 விழுக்காட்டினர் இந்த ஆய்வில் கருத்துரைத்தனர்.