காயத்திரி காந்தி
'சிங்கப்பூர் இந்திய நாடக மற்றும் திரைப்பட ஆர்வலர்கள்' (சிட்ஃபி) அமைப்பின் ஏற்பாட்டில் 'குரல்' என்னும் குறும்படத் திரையிடல் நிகழ்ச்சி இம்மாதம் 21ஆம் தேதியன்று 'ஸ்கேப் கேலரி'யில் நடைபெற்றது. தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு மற்றும் ஸ்கேப் ஆகியவற்றின் ஆதரவில் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில், உள்ளூர் படைப்பாளர்களான கெவின் வில்லியம், டான் அரவிந்த், பவித்ரன் நாதன், விக்னேஸ்வரன் சில்வா, முஹம்மது ரிஃபாத் ஆகியோரின் குறும்படங்கள் திரையிடப்பட்டன.
அனைத்துலக அளவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து வெளியிடப்படும் இந்திய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான தூதராக இருப்பதே 'சிட்ஃபி' அமைப்பின் தொலைநோக்குப் பார்வையாகும்.
'சிட்ஃபி' அமைப்பு 'இந்த்பாக்ஸ் எஸ்ஜி' (Indbox SG) என்னும் குறும்படக் காப்பக இணையத்தளத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து இந்தியக் குறும்படங்களும் திட்டத்தின்கீழ் இடம்பெறும்.
"உள்ளூர் படைப்புகளையும் குறும்படங்களையும் ஒருங்கிணைக்கும் தளத்தை உருவாக்க வேண்டும் என்பதையே 'இந்த்பாக்ஸ் எஸ்ஜி' அதன் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு படைப்பிலும் ஒரு தனித்தன்மை வாய்ந்த குரல் அடங்கியிருக்கும். எனவே, திரைப்படத் தயாரிப்பில் ஆர்வமுள்ள இளையர்களை ஊக்குவிப்பதற்காகவும் இளையர்களின் குரலைச் சமூகத்திற்குக் கொண்டு செல்வதற்காகவும் இந்த முயற்சியை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்," என்றார் சிட்ஃபி அமைப்பின் இயக்குனர் சலீம் ஹாடி.
"எனக்கு 14 வயதில்தான் இந்த துறையில் ஆர்வம் உண்டானது. திரைப்படத் தயாரிப்பில் ஆர்வமுள்ள இளையர்கள், ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளை வேறு வடிவத்தில் வழங்குவதைவிட, சமுதாயத்தில் ஒலிக்க வேண்டிய ஒரு குரலாகத் தங்களின் கதைகளை வடிவமைக்க வேண்டும்," என்று கூறினார் உள்ளூர் படைப்பாளர் மற்றும் இயக்கு நரான டான் அரவிந்த்.
சமுதாயம், குடும்பம் சார்ந்த முக்கிய கருத்துகளை எடுத்துரைப்பவரான டான் அரவிந்த் இயக்கத்தில் உருவான 'சில்க்' குறும்படம், இந்நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.
"சிறு வயதிலிருந்தே எந்த திரைப்படத்தை பார்த்தாலும் அதன் திரைக்கதை, ஒளிப்பதிவு போன்ற நுணுக்கங்களைப் பகுத்தாய்வது எனது பழக்கம். திரைப்படங்களை அலசி ஆராய்வதைத் தாண்டி, குறும்படம் எடுக்க விருப்பப்படும் இளையர்களுக்குப் பொறுமை அவசியம்," என்று கூறினார் தேசிய இளையர் திரைப்பட விருது விழாவில் இருமுறை சிறந்த இயக் குநருக்கான விருது பெற்ற செ.விக்னேஸ்வரன். நிகழ்ச்சியில் இவரின் 'டார்க் லைட்' திரையிடப்பட்டது.
"சரியான தருணத்திற்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சிறப்பான, கருத்துள்ள கதைகளை மாறுபட்ட கோணத்தில் எழுதுங்கள்," என்று இளையர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறார் 'வரைத்தோள்' குறும்பட இயக்குநர் பவித்ரன் நாதன்.