யுகேஷ் கண்ணன்
தொடக்கக்கல்லூரி மாணவர்களின் தமிழ் மொழி, இலக்கியப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள 'நாடோடிகள்', 'எண்ணங்கள் நிலையானவை அல்ல' ஆகிய இரண்டு சிறுகதைகளைக் குறும்படங்களாக இயக்கி வெளியிட்டுள்ளனர் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் தமிழ்மொழி விருப்பப்பாட மாணவர்கள்.
தம் மாணவர்களுக்குத் தமிழ் மொழி, இலக்கிய பாடத்தின் மீது ஆர்வத்தை வளர்க்கும் நோக்குடன் இம்முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறினார் அப்பள்ளியின் தமிழாசிரியர் திரு வீரமுத்து கணேசன்.
அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரிலுள்ள மற்ற தொடக்கக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வகையில், இக்குறும்படங்களைக் கற்றல் வளங்களாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்விரு சிறுகதைகளையும் இராம கண்ணபிரான், மா இளங்கண்ணன் ஆகிய உள்ளூர் எழுத்தாளர்கள் எழுதியுள்ளதால் குறிப்பாக இவற்றைக் குறும்படங்களாக இயக்க மாணவர்களை ஊக்குவித்ததாக அவர் கூறினார்.
மாணவர்களுக்குக் குறும்படத் தயாரிப்பில் உதவுவதற்காக, சிங்கப்பூர் ஊடகத்துறையில் 1999ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றிவரும் சலீம் ஹாடி உதவியுடன் பயிலரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.
மாணவர்கள் இயக்கிய குறும்படங்கள், இம்மாதம் 18ஆம் தேதியன்று ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் அப்பள்ளி முதல்வர் திரு மனோகரன் சுப்பையாவின் தலைமையில் வெளியிடப்பட்டன.
சிறுகதைகளைப் படித்து அவற்றிலிருந்து கற்றுக்கொண்டவற்றைத் திரைக்குக் கொண்டுவருவது எளிதான பணியல்ல என்று கூறினார் 'நாடோடிகள்' குறும்படத்தை இயக்கிய தொடக்கக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் சௌந்தரபாண்டியன் ஸ்ரீராம்.
"படித்த சிறுகதைகளுக்கு, காட்சியமைப்பு, வசனம், திரைக்கதை போன்ற அனைத்து அம்சங்களையும் நாங்கள் சுயமாகச் சிந்தித்து வடிவமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது," என அவர் தெரிவித்தார்.
அத்துடன் கருத்துகள் நிறைந்த கதையை குறும்படமாக படைக்கும்போது சில காட்சிகளை அதன் தன்மை மாறாமல் சுவாரசியப்படுத்த வேண்டிய கட்டாயமும் இருந்ததாக அவர் பகிர்ந்துகொண்டார்.
சவால்கள் பல இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட தனக்கு ஆர்வமாக உள்ளதாகவும் ஸ்ரீராம் கூறினார்.
குறும்படத் தயாரிப்புக்காக அதிக செலவு செய்யவில்லை என்று கூறினார் 'எண்ணங்கள் நிலையானவை அல்ல' குறும்படத்தின் இயக்குநரும் தொடக்கக் கல்லூரி முதலாமாண்டு மாணவருமான ப அ ரகுநந்தன்.
நண்பர்களின் இல்லங்கள், பெற்றோரின் கடைகள், பள்ளியில் அமைந்துள்ள பொது இடங்கள், சிங்கப்பூரின் பூங்காக்கள் ஆகியவை அவர்களது படப்பிடிப்புக்குப் பின்னணியாக மாறின.
"ஜூன் மாத விடுமுறையில் படப்பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டதால் அரையாண்டுத் தேர்வுகளுக்காக படிப்பது சற்று சிரமமாக இருந்தாலும், குறும்பட வேலைகளை வெற்றிகரமாக முடித்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றது மறக்க முடியாத ஓர் அனுபவம்," என்று கூறினார் ரகுநந்தன்.
இரண்டு குறும்படங்களையும் 'ASRJC TLEP' யூடியூப் பக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.