தங்களின் மனநலனைப் பாதுகாக்க ஆசிரியர்கள் உட்பட கல்வித் துறை ஊழியர்களுக்குப் புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மனநலனைப் பாதுகாக்கும் வழிகள், வேலை தொடர்பிலான கவலைகளைக் கையாள்வது, சோர்வை எதிர்கொள்வது, வேலைப்பளுவைச் சமாளிப்பது உள்ளிட்டவற்றின் தொடர்பில் கல்வித் துறை ஊழியர்கள் உத்திகளையும் அறிவுரையையும் பெற்றுக்கொள்ளலாம்.
'மைண்ட்லைன் அட் வொர்க் ஃபார் எம்ஓஇ' எனப்படும் அத்தளத்தைக் கல்வி அமைச்சும் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்றத்திற்கான சுகாதார அமைச்சின் அலுவலகமும் இணைந்து உருவாக்கிஉள்ளன.
கல்வித் துறை ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவதோடு பள்ளிகளில் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டும் கலாசாரத்தை உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகளில் இது அடங்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
பாலஸ்டியர் வட்டாரத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் புதிய மரபுடைமை நிலையம் ஒன்றின் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தாம் ஆற்றிய தொடக்க உரையில் திரு சான் ஆசிரியர்களைக் கௌரவித்துப் பேசினார். குறிப்பாக கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் கல்வித் துறை ஊழியர்கள் ஆற்றிய பங்கை சமூகம் உயர்வாகப் பார்க்கிறது என்று அவர் கூறினார்.
"நல்ல வேளையாக கொள்ளைநோய்ப் பரவலால் சிங்கப்பூர் மிக மோசமாக பாதிக்கப்படவில்லை," என்பதைத் திரு சான் சுட்டினார்.
"கடமை உணர்வுடனும் பணி மீது அதிகப் பற்றும் உள்ள ஆசிரியர்கள் நம்மிடம் இருப்பது அதற்குக் காரணம். மாணவர்களுக்குக் கற்றுத் தருவதில் தங்கள் இலக்கை அடைவது மட்டுமின்றி மோசமான நெருக்கடி காலத்திலும் தொடர்ந்து புத்தாக்க முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்," என்றும் அமைச்சர் சான் குறிப்பிட்டார்.