அமைச்சர்: மக்கள் ஆயுள் முழுவதும் போட்டித்திறனுடன் திகழ்வதை அரசு உறுதிசெய்யும்
சிங்கப்பூரர் ஒவ்வொருவருக்கும் எந்த நேரத்திலும் எங்கும் பலனுள்ளவற்றைக் கற்றுக்கொள்ள உதவும் கருவிகள் கிடைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நவீன கைப்பேசிகள் போன்ற கருவிகளை அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். பொருளியலைப் பலப்படுத்துவதற்காக ஆற்றல்மிகுந்த வெளிநாட்டினரை சிங்கப்பூர் கவர்ந்து ஈர்க்கிறது.
அதேவேளையில், சிங்கப்பூரர்கள் தாங்கள் வேலை பார்க்கும் காலம் முழுவதும் தொடர்ந்து போட்டித்திறனுடன் திகழ்வதை உறுதிப்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அப்படி அரசாங்கம் செயல்படும் வழிகளில் இதுவும் ஒன்று என்று அமைச்சர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பெரியவர்களான சிங்கப்பூரர்கள் முயற்சிகளை மேற்கொண்டால், அவர்களுக்கு வளங்கள் கிடைக்கும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்று கூறிய அமைச்சர், அத்தகைய சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை மீண்டும் பள்ளிக்கூடத்திற்குத் திரும்புவது என்பது சிரமமாக இருக்கும் என்றார்.
பணப் பிரச்சினைகள், குடும்பப் பொறுப்புகளை அவர்கள் எதிர்நோக்குவார்கள் என்பதே இதற்கான காரணம் என்றார் அவர்.
சிங்கப்பூரர்கள் தொடர்ந்து போட்டித்திறனுடன் திகழ்வதை உறுதிப்படுத்தும் வகையில் முயற்சிகளை எந்தெந்த வழிகளில் முடுக்கிவிட அரசாங்கம் கருதுகிறது என்பது பற்றி அடுத்த வரவுசெலவுத் திட்டம் வரைப்பட்ட காலகட்டத்தில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும். மேலும் பல முயற்சிகளும் இடம்பெறும் என்றாரவர்.
சிங்கப்பூரர்கள் தொடர்ந்து போட்டித்திறனுடன் திகழ்வதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அமல்படுத்தும் உத்தி பற்றியும் அவர் விளக்கினார்.
மாணவர்களை, அவர்களின் முதல் 15 ஆண்டுக் காலத்தில் பேணி உருவாக்குவது, பள்ளிக்குப் பிறகு அடுத்த 50 ஆண்டுகளில் மேலும் மேலும் தொடர்ந்து அவர்களை வளர்ச்சியடைய உதவுவதுதான் அந்த உத்தி என்றாரவர்.
இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வாழ்க்கைத்தொழில் உரை நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்தலாம். மனநல ஆதரவு வழங்கலாம் என்று திரு சான் கூறினார்.
அரசாங்கம் சமூகத்துடன் சேர்ந்து மேலும் பலவற்றை இந்த வழியில் செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
பிரபலமான பல பள்ளிகள் மிக வலுவான முன்னாள் மாணவர் கட்டமைப்பைப் பெற்று இருக்கின்றன. அத்தகைய கட்டமைப்புகள் ஆசிரியர்களுக்கு உறுதுணையாகத் திகழக்கூடிய ஆற்றலைக் கொண்டு இருக்கின்றன என்று அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.