மோனலிசா
இளையர்களிடம் தமிழ்மொழி புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழ் இளையர் விழாவுக்கு வளர்தமிழ் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. 'புத்தாக்கம்' என்னும் கருப்பொருளைக் கொண்டு நடைபெறும் இவ்விழா நாளை செப்டம்பர் 3ஆம் தேதிமுதல் 11ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
தமிழ்மொழியை நேசிக்கவும் பேசவும் வீட்டில் அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் வலியுறுத்தும் இவ்வாண்டின் விழாவில் 12 நிகழ்வுகளை 12 பங்குதாரர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர். 35 வயதிற்கு கீழுள்ள மாணவர் மற்றும் இளையர்களுக்காக நடத்தப்படும் இவ்விழாவில் நிகழ்வுகள் நேரிலும் ஸூம், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய மெய்நிகர் தளங்கள் வாயிலாகவும் நடைபெறும்.
வகுப்பறைக்கு அப்பாற்பட்டு தமிழ்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இளையர்கள் புத்தாக்க வழிகளை ஆராய ஊக்குவிக்கும் வகையில், இவ்விழாவில் இலக்கிய நிகழ்வுகள், கலைப் போட்டிகள், பரதநாட்டியம்வழி சிலப்பதிகாரத்தை விளக்கும் நிகழ்வு, வானொலி நாடகப் பயிலரங்கு உள்ளிட்ட மொழிசார் பயிலரங்குகள் போன்ற பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்விழாவின் ஓர் அங்கமாக 'கதைப்போமா' என்னும் நிகழ்வில் தமிழ் இளையர்கள் பற்றிய பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றுவர். மேலும், பட்டப்படிப்புக்கு பின்னர் தமிழ்மொழி பயன்பாட்டின் நிலை குறித்தும் இளையர்கள் கலைத்துறையைத் தொழிலாக தேர்ந்தெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்படும்.
"புத்தாக்கம்' என்பது தொழில்நுட்பம் சார்ந்ததாக மட்டுமல்லாமல் வாழ்வின் பன்முகங்களையும் மக்களின் மனநிலையையும் மொழியின் ஆளுமையை உணரும் பல அம்சங்களையும் உள்ளடக்கிய பரந்த கருப்பொருளாக அமையும். சிங்கப்பூரில் இளையர்கள் மத்தியில் தமிழ்மொழியை ஊக்குவிக்கும் நோக்கில் 2021ல் இம்முயற்சி தொடங்கப்பட்டது. எங்கள் இயக்கத்தில் உள்ள இளம் உறுப்பினர்களின் பார்வையை அறிந்து இளையர்களின் தேவைகளையும் ஈடுபாடுகளையும் கருத்தில்கொண்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன," என்று வளர்த்தமிழ் இயக்கத்தின் தலைவர் மனோகரன் கூறினார்.
"பள்ளிக் காலத்திற்குப் பிறகு தமிழ்மொழியின் பயன்பாடு இளையர்கள் மத்தியில் வெகுவாக குறைந்து விடுகிறது. தமிழ் மொழியின்பால் இளையர்களின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தைத் தூண்டும் விதமாக பல்வேறு இளையர் அமைப்புகளுடன் இணைந்து இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன," என்று வளர்த்தமிழ் இயக்கத்தின் துணைச் செயலாளர் இர்ஷாத் முஹம்மது கூறினார்.
வளர்த்தமிழ் இயக்கத்தின் உறுப்பினரான அஷ்வினி செல்வராஜ், "இளையர்கள் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் பல்வேறு பயிலரங்குகளும் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் தமிழ்மொழி பற்றிய தொன்மையான கருத்துகளை இளையர்களிடமும் மாணவர்களிடமும் புத்தாக்க முறையில் கொண்டு செல்கிறோம். தமிழில் கேலிச்சித்திரம், வரை தமிழ் போன்ற பல திறன்களை வளர்க்கும் அங்கங்கள் இவ்விழாவில் உள்ளன," என்று கூறினார்.
சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை மறுநாள் செப்டம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 'படைப்பாளராக ஒரு நாள்' என்னும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க tinyurl.com/ston2022 என்ற இணையத்தள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.
இந்நிகழ்வுகள் குறித்த கூடுதல் தகவல்களை வளர்தமிழ் இயக்கத்தின் இணையத்தளத்திலும் www.tamil.org.sg அல்லது ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கத்திலும் காணலாம்.