சிங்கப்பூர் சாலைகளில் இப்போது இருப்பதைவிட இன்னும் அதிகமான மின்சார மோட்டார்சைக்கிள்கள் ஓடுவதை விரைவில் காண முடியும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் இரண்டு பரிசோதனை திட்டங்களைத் தொடங்கவிருக்கிறது.
அத்தகைய மோட்டார்சைக்கிள்களில் இருக்கும் மின்கலமை பயண வழியில் மாற்றிக்கொள்வதை மேலும் எளிதாக்குவது அப்பரிசோதனைகளின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்தும் இதர துறைகளும் கரிமக் கரிவு குறைந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
நிலப் போக்குவரத்து ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ள அந்த இரண்டு பரிசோதனை முறைகளும் இந்த மாதம் தொடங்கி 12 மாத காலம் நடப்பில் இருக்கும்.
‘நிலப் போக்குவரத்து தொழில்துறை நாள்’ நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அதில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இந்த அறிவிப்புகள் இடம்பெற்றன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களைக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு மேலும் ஆதரவாக புதிய பயிற்சி மற்றும் சான்றிதழ் பயிற்சிப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை பற்றி இந்த ஆண்டு மே மாதம் முதன்முதலாக அறிவிப்பு வெளியானது.
தொழில் நுணுக்கர்கள் மானியத்துடன் கூடிய பயிற்சிப் படிப்புகளில் சேர்ந்துகொள்ளலாம்.
அந்தப் படிப்பை முடித்து அவர்கள் சான்றிதழைப் பெறலாம்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் இயக்கம் உருவாக்கி இருக்கும் ‘ஊழியர் தேர்ச்சித் தர திட்ட ஏற்பாட்டின்கீழ் அந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.