'முன்னேறும் சிங்கப்பூர்' கருத்துத் திரட்டு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, கல்வி, வாழ்நாள் கல்வி ஆகிய அம்சங்கள் குறித்துக் கருத்துரைக்கும்படி சிங்கப்பூரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்பில், 'எக்யுப் பில்லர்' எனும் சிறப்பு துணை இணையத்தளத்தைக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்றுத் தொடங்கி வைத்தார்.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியின் 70க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் பங்கேற்ற மாணவர்கள், விருப்பத்தை அடையக் கூடுதல் வாய்ப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய சமூகம், வெற்றிக்கான நவீன வரையறை போன்ற அம்சங்களைத் தங்கள் விருப்பங்களாக இந்தக் கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டனர்.
இது மற்றவர்களுக்குக் கருத்துரைப்பதோடு கடமை முடிந்தது என்றில்லாமல், அனைவரும் இணைந்து எதைச் சாதிக்க விரும்புகிறோம் என்பதைத் தொடர்ந்து பதிவுசெய்யும் தளமாக விளங்கவேண்டும் என்று அமைச்சர் சான் தமது உரையில் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு சிங்கப்பூரரும் இதற்கு எவ்வாறு பங்களிக்கிறார் என்பது முக்கியம் என்றார் திரு சான்.
முன்னேறும் சிங்கப்பூர் கருத்துத் திரட்டு நடவடிக்கையை, சென்ற ஜூன் மாதம் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைத்தார். சிங்கப்பூரர்களிடையே, சமூக நன்மைக்காக ஒத்துழைக்கும் உணர்வைப் புதுப்பிப்பது இதன் இலக்கு.
இதன் 'எக்யுப்' பிரிவிற்கு அமைச்சர் சான், தற்காப்புத் துணையமைச்சர் ஸாக்கி முகமது, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹோ ஆகியோர் தலைமை தாங்குவர்.