சிங்கப்பூரின் பசுமைப் பயணம் நேற்று புதிய மைல்கல்லை எட்டியது. 1963ஆம் ஆண்டில் முதல் மரம் நடும் இயக்கத்தை சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ தொடங்கிவைத்து 59 ஆண்டுகள் கழித்து, பொங்கோல் நீர்வழிப் பூங்காவில் நேற்று 50 மரங்கள் நடப்பட்டன. தனது அமைச்சின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.
பொருளியல் வளர்ச்சி மற்றும் சமுதாய உள்ளடக்கத்துக்கும் சுற்றுப்புறப் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்கள் முனைந்ததாக திருவாட்டி ஃபூ கூறினார்.
நீடித்த நிலைத்தன்மை குறித்த விவகாரங்கள் உலகளாவிய நிலையில் அக்கறைக்குரிய விவகாரமாகும் முன்பே சிங்கப்பூரில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அவர் சுட்டினார்.
"சுற்றுப்புற மாசு, சுற்றுப்புற சுகாதாரம் போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள சுற்றுப்புற அமைச்சை உருவாக்கிய முதல் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று," என்று அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.
சிங்கப்பூரில் சுற்றுப்புற அமைச்சு 2020ஆம் ஆண்டில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சாகப் பெயர் மாற்றம் கண்டது. நீடித்த நிலைத்தன்மை, பருவநிலை மாற்றம் குறித்து அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"சிங்கப்பூர் ஆற்றை தூர்வாரியது முதல் தூய்மையான, பசுமையான சிங்கப்பூர் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது வரை சிங்கப்பூரின் பசுமைத் திட்ட முயற்சிகள் சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரத்தைப் பெரிதும் மேம்படுத்தியுள்ளன.
"நியூவாட்டரை நாம் சாத்தியமாக்கியுள்ளோம். சுத்தமான தண்ணீர் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நீர் உள்கட்டமைப்பில் முதலீடு செய்தோம்," என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
சிங்கப்பூரைப் பசுமைப்படுத்தும் பணிகளுடன் நீர் சுத்திகரிப்பு ஆற்றலும் மீள்திறனும் தொடரும் என்றார் அவர்.
நேற்று நடைபெற்ற மரம் நடும் விழாவில் 100 அரசாங்க ஊழியர்களும் அரசு அலுவலக அதிகாரிகளும் 50 மரங்களை நட்டனர்.
நடப்பட்ட ஒவ்வொரு மரமும் ஒன்மில்லியன் ட்ரீஸ் இயக்கத்துக்குப் பங்களிப்பதாக அமைச்சு தெரிவித்தது.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரெங்கும் ஒரு மில்லியன் மரங்களை நட்டு நாட்டை 'இயற்கையில் நகரம்' என உருமாற்ற இயக்கம் இலக்கு கொண்டுள்ளது.