மாணவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வெளிப்புற சாகசக் கல்வியை மேம்படுத்துவதற்காக புதிய மன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.
சாகசக் கல்வியின் செயல்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் தேசிய தரநிலையை நிர்ணயிப்பது மன்றத்தின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரிபப்ளிக் பலதுறைத் தொழில்கல்லூரியில் நேற்று நடைபெற்ற வெளிப்புறக் கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு எட்வின் டோங் பேசினார்.
வெளிப்புற நடவடிக்கைகளுக்கு தேவை அதிகரித்துள்ளதால் அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மன்றம், 18 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஆண்டுக்கு சுமார் 218,000 மாணவர்கள் வெளிப்புற சாகசக் கல்வியில் பங்கேற்று வருகின்றனர்.
கல்வி அமைச்சு, சிங்கப்பூர் வெளிப்புற சாகச நடவடிக்கை நிலையம் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை கூட்டாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வரு வதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தேசிய இளையர் மன்றம் தெரிவித்தது.
பள்ளிகளுக்கான வெளிப்புற நடவடிக்கைகளையும் மலையேறுதல், படகோட்டுதல் போன்ற சாசக நடவடிக்கைகளையும் நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வர்த்தகரீதியில் நடத்தி வருகின்றன.
சிங்கப்பூரின் வெளிப்புற சாசகக் கல்வியின் தேசிய தரநிலையையும் தொழில்நுட்ப அம்சங்களையும் மன்றம் மேற்பார்வையிடும்.
வெளிப்புற நடவடிக்கைகளை வடிவமைத்து நடத்துவது, வசதிகளை நிறுவுவது, பராமரிப்பது, உள்கட்டமைப்பு, அதற்குரிய சாதனங்களுக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றுக்கும் அது வழிகாட்டும்.
உள்ளூர் பயிற்றுவிப்பாளர்களுக்குத் தேவையான முக்கிய திறன்கள், தொழில் சான்றிதழ்களையும் மன்றம் பரிந்துரைக்கும்.
இதன்மூலம் பொதுமக்களுக்கு வெளிப்படையான, நிலையான, பாதுகாப்பான வெளிப்புற நடவடிக்கைகள் உறுதி செய்யப்படுகிறது.
"வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மாணவர்கள் நன்கு வளர முடியும். சவால்களைச் சந்திக்கும் திறன்களையும் அவர்கள் பெறுவர். குழுப்பணியில் ஈடுபட்டு நம்பிக்கையோடு வாழ்க்கையை அவர்கள் எதிர்நோக்குவார்கள்," என்று மன்றத்தின் இணைத் தலைவரான இணைப் பேராசிரியர் டான் லாய் யோங் தெரிவித்தார்.
வெளிப்புற நடவடிக்கை பொருத்தமானதாக இருக்கவும் பாதுகாப்புடன் அனைவரும் பங்கேற்கவும் பயிற்றுவிப்பாளர்களுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கைத் தொழிலை வழங்கவும் வெளிப்புற நடவடிக்கைகளில் தொழில்முனைவர்களை உருவாக்கவும் மன்றம் விரும்புகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.