மொத்தம் $74 மில்லியன் பெறுமானமுள்ள கொவிட்-19 மீட்பு மானியம்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அது தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 300,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை இவ்வாண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு
நீட்டிக்கத் திட்டம் ஏதுமில்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில்
பொருளியல் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று அது கூறியது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வேலை இழந்த அல்லது கட்டாய, சம்பளமில்லா விடுப்பு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு கொவிட்-19 மீட்பு மானியம் மூலம் தற்காலிக நிதி ஆதரவு வழங்கப்பட்டது.
மானியத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மானியம் கிடைக்க தகுதி உடையவர்கள் பெறக்கூடிய தொகை இரண்டிலிருந்து மூன்று மடங்காக உயர்த்தப்பட்டன.
கிட்டத்தட்ட 1,135 பேர் இன்னமும் இம்மானியம் மூலம் நிதியுதவி பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவரான திருவாட்டி ரோஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19 மீட்பு மானியத்தை சில முறை பெற்றுவிட்டார்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் துணைப் பாட வகுப்புகள் நடத்துவதன் மூலம் கிடைக்கும் அவரது வருமானம் இவ்வாண்டு மார்ச் முதல் மே மாதம் வரை பாதியாகக் குறைந்து விட்டதால், இவ்வாண்டு ஜூலை முதல் இம்மாதம் வரை அவருக்கு மாதம் $460 கொவிட்-19 மீட்பு மானியமாக வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை அவருக்கு மாதம் $260 மானியமாகக் கிடைத்தது. கடந்த ஆண்டு ஜூனில் தற்காலிக கொவிட்-19 மீட்பு மானியமாக அவருக்கு $500 கிடைத்தது.
தமது கணவர், மகளுடன் நான்கறை வீட்டில் வசிக்கும் அந்த 62 வயது மாது, கொவிட்-19 பெருந்தொற்றால் கடும் நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கினார்.
பெருந்தொற்று காலத்துக்கு முன் துணைப் பாட வகுப்புகள் நிலையம் மூலம் அந்த மாதுக்கு மாதம் $2,000லிருந்து $3,000 வரை வருமானம் கிடைத்து வந்தது.
பெருந்தொற்றால் தனது வர்த்தகம் பாதிக்கப்பட்டதிலிருந்து அவரது துணைப் பாட வகுப்புகளில் பதியும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதனால் அவர் மாதம் சில நூறு வெள்ளியை மட்டுமே ஈட்ட முடிந்தது.
பெற்றோர்களில் வெகு சிலரே தங்கள் பிள்ளைகளை இணையம் வழி துணைப்பாட வகுப்புகளில் சேர்த்துவிட தயங்கினர் என்றும் சிங்கப்பூரில் உள்ள அனைத்துலக மாணவர்கள் இங்கு துணைப் பாட ஆஇசரியர்களிலன் சேவையை நாடுவதில்லை என்றும் அந்த மாது பகிர்ந்துகொண்டார்.
தமது 73 வயது கணவர், வயது முதிர்வு காரணமாக மீண்டும் வேலைவாய்ப்பு பெற சிரமப்பட்டார் என்றும் அதன் காரணமாக அவர் கிராப் வாகன ஓட்டுநராக வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் திருவாட்டி ரோஸ் கூறினார்.
பெருந்தொற்று காலத்தில் கணவர் கணினி மென்பொருள் பொறியாளர் வேலை இழந்தார்.
மானியம் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு தமது துணைப் பாட வகுப்புகள் பற்றி விளம்பரப்படுத்தி வரும் அந்த மாது அதன் மூலம் மாணவர்கள் கிடைத்து தனது வர்த்தகத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க நம்பிக்கையுடன் இருக்கிறார்.
கொவிட்-19 மீட்பு மானியம் நீட்டிக்கப்படுவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று அறிந்து கவலையுறும் திருவாட்டி ரோஸ், அரசாங்கத்தின் இதர திட்டங்கள் வழி உதவி பெற காத்திருக்கிறார்.