எஃப்1 கார் பந்தய வாரயிறுதியை முன்னிட்டு ஏராளமான பேராளர்கள் வருகை
கொவிட்-19க்கு முந்தைய நிலைக்கு சிங்கப்பூர் திரும்பும் வேளையில், நூற்றுக்கணக்கான தலைமை நிர்வாக அதிகாரிகள், மின்னிலக்க நாணய முதலீட்டாளர்கள், போலிவுட் நடிகை ஆலியா பாட் உள்ளிட்டோர் இந்த வாரம் சிங்கப்பூர் வரவுள்ளனர்.
சிங்கப்பூர் கிராண்ட் பிரீ எஃப்1 கார் பந்தயம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. அதை முன்னிட்டு பெரிய அளவிலான பல்வேறு சந்திப்புகள், ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள், மாநாடுகள், கண்காட்சிகள் நடைபெறவிருக்கின்றன.
அக்டோபர் 2ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் நடைபெறும் 'டைம்100' தலைமைத்துவக் கருத்தரங்கும் அவற்றில் அடங்கும்.
அதைத் தொடர்ந்து, 'டைம்100 இம்பெக்ட் விருது'களுக்கான சடங்கு ஒன்று நடைபெறும். தங்கள் தொழில்துறைகளின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அசாதாரண பணிக்காக தனிமனிதர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
இது குறித்து சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் கூறுகையில், "இந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்துவதில் சிங்கப்பூர் மகிழ்ச்சி அடைகிறது. எதிர்காலத்தைச் சீரமைக்கும் தலைவர்களை இது கௌரவப்படுத்துகிறது. ஆசியாவில் வர்த்தகத்துக்கான மையப் பகுதியாக நமது நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது," என்றார்.
எஃப்1 கார் பந்தயம் நடைபெறும் காலத்தில் ஏறக்குறைய 25 நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட 90,000 பேராளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக பயணத்துறைக் கழகம் கடந்த மாதம் கூறியிருந்தது. இந்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை, கொவிட்-19க்கு முந்தைய நிலையுடன் ஒத்து இருப்பதைக் கழகம் சுட்டியது.
நேரடியாகச் சந்திப்பதற்கான தேவை அதிகரித்ததால், அவற்றில் சில நிகழ்ச்சிகள் ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூருக்கு இடமாறின.
அவற்றில் ஒன்றான 'சூப்பர் ரிட்டர்ன் ஏஷியா' இந்த மாதம் 19 முதல் 22ஆம் தேதிவரை சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாதனை அளவாக 1,500 பேர் கலந்துகொண்டனர். 2019ல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 800 பேர் எண்ணிக்கையைவிட இது கிட்டத்தட்ட இருமடங்காகும்.
இந்த வாரம் 'ஏஷியா கிரிப்டோ வீக்'கின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 'டோக்கன்2049' எனும் கிரிப்டோ மாநாட்டை இது மையமாகக் கொண்டுள்ளது. நாளையும் வியாழக்கிழமையும் அது நடைபெறுகிறது.
சாதனை அளவாக 7,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை தாங்கள் எதிர்பார்ப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேற்று கூறினர். அண்மைய ஆண்டுகளில் அதிகமானோர் கலந்துகொண்ட கிரிப்டோ, மின்னிலக்க நாணயத் தொழில்துறையின் ஆகப்பெரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.
20வது ஃபோர்ப்ஸ் குளோபல் சிஇஓ மாநாடு, ஒன்பதாவது 'மில்கன் இன்ஸ்டிடியூட் ஏஷியா' மாநாடு போன்ற பெரிய அளவிலான நிகழ்ச்சிகளும் இந்த வாரம் நடைபெறுகின்றன.
உலகம் முழுவதிலிருந்தும் 400 தொழிலதிபர்கள் பங்கேற்கும் ஃபோர்ப்ஸ் மாநாடு, ரிட்ஸ்-கார்ல்டன் மில்லெனியா சிங்கப்பூர் ஹோட்டலில் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் உடனான கலந்துரையாடலும் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் முக்கிய உரையும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.