சிறார் கொடுமைக்குத் தீர்வுகாண உதவும் காணொளி
சிறார் கொடுமை தொடர்பிலான புதிய காணொளி வெளியிடப்பட்டு உள்ளது. அந்தப் பிரச்சினைக்குப் பாலர் பள்ளிக் கல்வித் துறையினர் சிறந்த முறையில் தீர்வுகாண அந்தக் காணொளி உதவும்.
தங்களுக்கு அத்தகைய பிரச்சினைகள் வரும்போது அதுபற்றித் தங்கள் ஆசிரியர்களிடம் சிறார் சொல்வார்கள். இது பொதுவான ஒரு நிலவரம். நெருக்கடி காலத்தில் மாதருக்கும் சிறாருக்கும் புகலிடம் அளிக்கும் சேவையை வழங்கும் 'காசா ருத்ரா' என்ற அறப்பணி அமைப்பு அந்தக் காணொளித் திட்டத்தை நேற்று தொடங்கியது.
'காசா ருத்ரா' அமைப்பு வெளியிட்டு உள்ள காணொளி, இளம்பருவ பாலர் மேம்பாட்டு முகவை அமைப்பின் கட்டமைப்பில் இருக்கும் 1,000க்கும் மேற்பட்ட பாலர் பள்ளிகளுக்குக் கொடுக்கப்படும்.
ஷங்ரிலா ஹோட்டல்களின் இணையத்தகவல்களில் ஊடுருவல்
ஷங்ரிலா ஹோட்டல் குழும கணினித் தகவல்களை சட்டவிரோதமாக ஊடுருவல் பேர்வழிகள் எட்டி இருக்கிறார்கள். சிங்கப்பூர், ஹாங்காங், சியாங் மாய், தைப்பே, தோக்கியோவில் இருக்கும் இந்தக் குழுமத்தின் ஹோட்டல்களில் தங்கி இருந்திருக்கும் விருந்தினர்களின் சொந்த தகவல்கள் கசிந்து இருக்கக்கூடிய ஆபத்து இதன் மூலம் தலைகாட்டி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட விருந்தினர்களுக்கு இதுபற்றி மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் நடுவில் மிகவும் கைதேர்ந்த அதிநவீன ஆசாமி ஒருவர் எப்படியோ ஷங்ரிலா தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பை வெளியே தெரியாதபடி எட்டி சட்டவிரோதமான முறையில் அதில் கைவைத்து இருக்கி றார் என்று அந்தச் செய்தியில் ஹோட்டல் குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் பிரைன் யூ தெரிவித்துள்ளார்.
என்றாலும் யாருடைய தகவலும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை; மூன்றாம் தரப்புகளால் வெளியிடப்படவில்லை என குழுமம் உறுதி அளித்துள்ளது.
'தடை அகலும் தேதி உறுதியாகும்
வரை கோழி உற்பத்தி இல்லை'
சிங்கப்பூருக்கான இப்போதைய கோழி ஏற்றுமதித் தடை எப்போது அகலும் என்பது பற்றி தெளிவாகத் தெரியும்வரை தாங்கள் உற்பத்தியை அதிகமாக்கப்போவதில்லை என்று மலேசிய கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தடை அகலும் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியை பெருக்கி, ஆனால் தடை நீட்டிக்கப்பட்டு அதனால் இழப்பு ஏற்படக்கடிய சூழல் ஏற்பட்டுவிடலாம் என்று பண்ணையாளர்கள் அஞ்சுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூரில் தேவையை ஈடுசெய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை என்று சொல்லி சிங்கப்பூருக்கான கோழி ஏற்றுமதிக்கு கடந்த ஜூன் 1ஆம் தேதி மலேசியா தடை விதித்தது. அந்தத் தடை ஜூலையில் அகல இருந்தது. ஆனால் ஆகஸ்ட், பிறகு அக்டோபர் என்று அது நீண்டுகொண்டே போகிறது. தடை எப்போது அகலும் என்பதற்கான தெளிவான தேதி தெரியவில்லை.
இதனிடையே, மளிகைப் பொருள்கள், காய்கறிகளில் மறைத்துவைத்து மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் கோழி இறைச்சியை சிலர் கொண்டு வருவதாக மலேசிய கடைக்காரர்கள் சிலர் கூறுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இணையப் பாதுகாப்பும் கவலையும்
சிங்கப்பூரில் இணையப் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முறையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன என்று பத்தில் மூன்று பெற்றோர் கருதவில்லை. இங்கு சொந்த கைப்பேசியை வைத்துள்ள சிறாரின் சராசரி வயது 10ஆக இருக்கிறது.
ஆனால் இணையப் பாதுகாப்பு பற்றி போதிப்பதற்கான பிள்ளைகளின் சராசரி வயது 13ஆக இருக்கிறது.
இணையப் பாதுகாப்பு பற்றி தங்கள் பிள்ளைகளுடன் பேசி இருப்பதாக 10ல் ஏழு பெற்றோர் கூறினர்.
கூகல் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த நிலவரங்கள் தெரியவந்தன. அந்த ஆய்வு முடிவுகள் நேற்று நடந்த சிறார் இணையப் பாதுகாப்புப் பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டன.