புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன் வளர்ப்பதில் முழுமூச்சு
தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்துவந்துகொண்டே இருக்கும் பட்சத்தில் அந்தத் துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களின் திறன்களைப் புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டும் மேம்படுத்திக் கொண்டும் இருக்கவேண்டியுள்ளது. அத்தகைய நிலையில் குறிப்பிட்ட சில துறைகள் மற்ற துறைகளைவிட மேலும் கவனமாகவும் வருமுன் தயாராகவும் இருக்கவேண்டியுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை மக்கள் தழுவும் முன்னரே வல்லுநர்கள் அதற்குத் தயாராக இருக்கவேண்டும்.
அதுபோன்ற ஒரு துறைதான் காணொளித் தயாரிப்புத் துறை. அத்துறையில் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு கிட்டத்தட்ட 45 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ள நிறுவனம்தான் விசினிட்டி ஸ்டூடியோ.
சிறிய நிறுவனமாகத் தொடங்கி, ஓரிரு ஊழியர்களை மட்டுமே கொண்ட நிறுவனமாக 2017ஆம் ஆண்டு இந்நிறுவனம் சிறிய வர்த்தகமாக காலடி எடுத்துவைத்தது. தொடக்கத்தில் வணிக நிறுவனங்களுக்கு அதன் நிறுவன காணொளிகளைத் தயாரிப்பதையாக அதன் முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தது.
படிப்படியாக முன்னேற்றப் பாதையில் நிறுவனர் கெவின் எங் இந்த நிறுவனத்தை இட்டுச் சென்றார். ஐந்து, பத்து ஊழியர்களாகப் பெருகியது. பின்னர் புத்தாக்க ஊடக, பதிப்பாளர் சங்கத்தில் ஈடுபட்டு தொழிற்சங்க உறுப்பு நிறுவனமாகப் பரிணாமம் எடுத்தது.
உறுப்பினர்கள் தற்காலத் தேவைக்கேட்ப பொறுத்தமான திறன்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யும்வண்ணம் அந்த வளர்ந்துவரும் திறன்களை நிறுவன பயிற்சிக் குழுவின் மூலம், புத்தாக்க ஊடக, பதிப்பாளர் சங்கமும் விசினிட்டி ஸ்டூடியோவும் அடையாளம் கண்டுள்ளன என்று கூறினார் புத்தாக்க ஊடக, பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் டேவிட் டியோ.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் ‘இ2ஐ’ பயிற்சி நிதி ஆதரவுடன், செயல்பாட்டு தொழில்நுட்ப வரைவுத் திட்டம் போன்ற தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் பயிற்சி, பணியமர்த்தும் முறையின் வளங்களும் சேர்ந்து நிறுவனத்திற்குக் கட்டமைப்புடனான திட்டத்தை மேம்படுத்த உதவியது என்றும் திரு டியோ குறிப்பிட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ‘எஸ்ஜி யுனைடெட்’ (SGUnited) பயிற்சித் திட்டத்தின் பலன்களை இந்நிறுவனம் பெற்றது. அதன்மூலம் பல பயிற்சியாளர்களை இணைத்துகொண்டது.
தொழிற்சங்கத்தின் மூலம் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் நிறுவன பயிற்சிக் குழுவின் பயிற்சித் திட்டத்தில் ஈடுபட்டு அதில் முதல் இரண்டு ஊழியர்களைப் பங்கெடுக்க வைத்தது.
கடந்த ஓராண்டு ஏழு மாதமாக விசினிட்டி ஸ்டூடியோ நிறுவனத்தில் படைப்பாக்க மேலாளராகப் பணிபுரியும் ஜேசன் மொக், 29, தலைமைப் படைப்பாளராக ஓராண்டு 10 மாதம் பணியாற்றிவரும் 33 வயது ஷெர்லின் எங் இருவரும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
“எதிர்கால வர்த்தக முறைகளுக்கு ஏற்ப நிறுவனம் திட்டமிடுவதற்கு ஏதுவாக இந்தப் பயிற்சி அமைந்தது,” என்று கூறினார் ஷெர்லின்.
“புதிய தொழில்நுட்பம் வர வர அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டியுள்ளது. புதிய வகைகளில் மக்கள் தகவல் பெற விரும்புகின்றனர் என்றால் அதற்கு ஏதுவாக நாங்கள் உடனடியாக சேவை வழங்கவேண்டும்,” என்றார் அவர்.
தற்போது நிறுவனங்களுக்கு விளம்பரங்கள், எழுத்துபூர்வ விளம்பரச் செய்திகள், காணொளிகள், உருவகக் கலை வடிவங்கள், ஓவியப் படைப்புகள், மின்னிலக்க வடிவமைப்புகள், புகைப்படச் சேவைகள் என பலதரப்பட்ட சேவைகளை நிறுவனம் வழங்கிவருகிறது. பிரதான நிறுவனங்களை அதன் வாடிக்கையாளர்களாகத் தற்போது கொண்டுள்ளது.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் மே தின விருதுகளில் இவ்வாண்டு பாராட்டுக் கேடயத்தை வென்றது விசினிட்டி ஸ்டூடியோ.
அதன் நிறுவன பயிற்சிக் குழு திட்டத்தின்வழி செயல்பாட்டு தொழில்நுட்ப வரைவுத் திட்டத்தை நடைமுறைபடுத்தி 42 பேர் கொண்ட நிறுவனமாக உருமாற்றியுள்ளனர்.
அந்த வரைவுத் திட்டமானது வர்த்தகத்தையும் ஊழியரணியையும் உருமாற்றும் மூவாண்டு பணித்திட்டம். ஊழியர்களின் ஆற்றல் உருவாக்கத்தையும் தொழில்நுட்பத்தைத் தழுவும் ஆற்றலையும் கருத்தில்கொண்டு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மூன்று பிரதான வழிகளை வகுத்துள்ளது.
புத்தாக்கம், விளம்பரம், வாடிக்கையாளர் நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் புதிய, தற்போதைய ஊழியர்களில் மேம்பாட்டுப் பாதையை உருவாக்குவது முதலாவது வழி.
மனிதவளம் சார்ந்த பணிகளையும் ஊழியர் நலனையும் பார்த்துகொள்ளவும் ஒருவரோடு ஒருவர் சந்தித்து குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களது நலனைப் பேணுவதையும் மனதில் கொண்டு மனிதவள ஆற்றலை மேம்படுத்துவது இரண்டாவது வழி.
இறுதியாக சமூக சேவை, வர்த்தக துறைகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிய விற்பனைத் துறை ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பது.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னிலக்க திரைப்படம், தொலைகாட்சி துறையில் பட்டயக் கல்விப் பயின்ற 26 வயது நூர் அமீரா முகமது ரிப்பின், பல்வேறு திறன்வளர்ச்சிக்கான பயிற்சிகளை இந்நிறுவனம் வழங்கிவருவதைப் பாராட்டினார். முந்தையப் பணியை விட தற்போது இந்த நிறுவனத்தில் சேர்ந்த பிறகு தாம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதை அவர் உணர்ந்துவருவதாகக் கூறினார்.
பயிற்சித் திட்டங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், வெவ்வேறு கண்ணோட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது மேலும் சிறப்பான அம்சம் என்றார். தற்போது பகுதிநேரமாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தொடர்பு, மின்னிலக்கத் துறைகளில் தமது பட்டக்கல்வியை நூர் அமீரா தொடர்கிறார்.
மனிதவளத்தை வலுவாக்க முதலீடு செய்வதில் நாட்டம்
மாறிவரும் வர்த்தகச் சூழலில் மனிதவளத்தை அதற்குத் தக்கவாறு மாற்றி அமைப்பது மட்டுமல்லாமல் இருக்கும் மனிதவளத்தைத் தேவைக்கேட்ப மறுபயிற்சி செய்வதில் பெரும் முதலீட்டைச் செய்துவருகிறது ஒன் எனும் ஓஷன் நெட்வொர்க் எக்ஸ்பிரஸ் (Ocean Network Express) நிறுவனம்.
சிங்கப்பூரைத் தளமாகவும் தலைமையகமாகவும் கொண்ட இந்த உலகளாவிய கொள்கலன் கடல்வழி போக்குவரத்துச் சேவை வழங்கிவரும் இந்நிறுவனம் கிட்டத்தட்ட 500 பேரை இங்குப் பணியில் அமர்த்தியுள்ளது. அவர்களில் ஆண்டுக்கு 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே வேலையை விட்டுச் செல்கின்றனர். இது அத்துறையில் உள்ள மற்ற நிறுவனங்களைவிடக் குறைவான விகிதமாகும்.
அதற்கு முக்கிய காரணம் அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டிற்காக நிர்வாகம் பெரிய முதலீட்டைச் செய்வதுதான் என்கிறார் உலகளாவிய மனிதவளப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் குமாரி டே ஐ லின். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனிதவள நிர்வாகத்தில் ஈடுபட்டு வருபவர் குமாரி டே. ‘ஒன்’ நிறுவனத்தின் ஒருங்கிணைப்புக் குழுவில் பங்குவகித்த அவர், மனிதவளப் பிரிவின் செயல்பாடுகளைத் தயார்நிலையில் வைத்திருப்பதை முக்கியப் பணியாகச் செய்துவந்தவர்.
நிறுவனத்தின் கொள்கைகளை மையமாகக் கொண்டு நீடித்த நிலைத்தன்மையுடனான உற்பத்தித் திறனை நிறுவனத்தில் அனைவரும் தழுவவேண்டும் என்ற வேட்கையில் உள்ளவர் அவர்.
முழுமையான வகையில் ஊழியர்களை ஈர்த்து, தக்கவைத்து, தொடர்பில் கொண்டு, நீண்ட காலத்திற்கு அவர்களை இருக்க செய்வது நிறுவனத்தின் விருப்பம்.
ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் வெள்ளியை பயிற்சிக்கும் ஊழியர்களின் மேம்பாட்டிற்கும் இந்த நிறுவனம் செலவிடுகிறது.
வேலைகளைச் சுவாரசியமாக வைத்திருப்பதும் சிறிய அளவிலான பயிற்சித் திட்டங்களை எளிமையான முறையில் ஊழியர்கள் கற்றுகொள்ளவும் வழியமைக்கிறது ஒன் நிறுவனம்.
கடந்த ஜூலை மாதம் ‘ஒன் அகாடமி’ எனும் இணையக் கற்றல் தளத்தை உருவாக்கிய நிலையில் இதுவரை ஊழியரணியின் பாதி பேர் அதைப் பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.
தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப நிர்வாகம் அதன் உத்திபூர்வ திட்டங்களை வகுக்கும்போதெல்லாம், அதற்குத் தகுந்தவாறு ஊழியர்கள் திறன்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்வதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
உதாரணத்திற்கு மின்னிலக்க மயத்தைத் தழுவ திட்டங்கள் வகுத்தபோது அதற்குத் தேவையான வேலைவாய்ப்புகள் உருவாகின. அதற்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மற்றொரு முறை பசுமைப் பாதையில் நிறுவனம் செல்வதற்குத் திட்டமிட்டபோது, அதற்கான வேலைவாய்ப்புகள் உருவாகி, ஏற்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
கடந்த சில மாதங்களிலேயே கிட்டத்தட்ட 50 ஊழியர்கள் வெவ்வேறு பிரிவுகளுக்குப் பணி மாற்றம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஏதுவான, தங்களின் திறன்களுக்கேட்ப புதிய பிரிவுகளில் தற்போது வேலை செய்கின்றனர்.
இவ்வாறான உத்திகளால் ஊழியர்கள் மறுபயிற்சி பெற்று தங்களுக்குத் தகுந்த வேலைகளைச் செய்து நிறுவனத்திலேயே நிலையாய் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
மகிழ்ச்சியாய் உள்ள ஊழியர்கள் நிறுவனத்தின் நலனுக்காகக் கூடுதலாக உழைப்பார்கள் என்றும் அதன் விளைவாகக் கூடுதல் உற்பத்தித் திறனும் மேம்பட்ட விளைவுகளும் கிடைக்கும் என்றும் கூறினார் குமாரி டே.
மூன்று ஜப்பானிய கப்பல் நிறுவனங்களை இணைத்து 2018ஆம் ஆண்டு முதல் ‘ஒன்’ நிறுவனம் இயங்கிவருகிறது. உலகின் ஆறாவது சிறந்த பெரிய கொள்கலன் கடல் போக்குவரத்து நிறுவனமாக விளங்கிவரும் ‘ஒன்’, அதீத வளர்ச்சியின் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 புதிய வேலைகளையும் உருவாக்கியுள்ளது.
ஊழியரணியின் எல்லா நிலைகளிலும் பயிற்சி வழங்கிவரும் இந்நிறுவனம், மேலாளர்களுக்கும் தனிப்பயிற்சித் திட்டங்களை வகுத்துள்ளது. சிங்கப்பூர் ஊழியரணியில் 70 விழுக்காட்டினர் உள்ளூர் ஊழியர்கள் என்றும் அவர்களில் 25 விழுக்காட்டினர் மேலாளர்கள் என்றும் நிறுவனம் கூறியது.
தலைமைத்துவம், தொடர்பு, உலகளாவியப் பார்வை, குழுக்களை எப்படி வழிநடத்துவது போன்ற அம்சங்களில் மேலாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த மேலாளர்கள் மற்ற ஊழியர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாக அமையவேண்டும் என்பது நிறுவனத்தின் விருப்பம் என்றார் உலகளாவிய மனிதவள மேலாளர் பெலிண்டா வோன், 43.
ஊழியர்களுடனான தொடர்புகளை மேம்படுத்தி, அவர்கள் நிறுவனத்தின்மீதும் அதன் கொள்கைகள் மீதும் அதிக நாட்டம் கொள்ள வைப்பது அவசியம் என்கிறார் அவர்.
பயிற்சிகளையும் தொடர்புகள் குறித்த திட்டங்களையும் முக்கியமாகக் கருத்தில்கொண்டு அதில் செயல்படுவது அவரது முதன்மை இலக்கு.
வட்டாரத்திலுள்ள இதர சக ஊழியர்களுடன் இணைந்து அணுக்கமான பங்காளித்துவத்தில் ஈடுபட்டு பலதரப்பட்ட உலகளாவிய திட்டங்களில் பெலிண்டா ஈடுபட்டுவருகிறார். மனிதவளத் துறையில் அவரது அனுபவம் 16 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
தனிநபராகவும் வாழ்க்கைத் தொழிலில் முன்னேற்றம் அடையவும் ‘ஒன்’ மேலும் வாய்ப்புகள் அளிக்கும் என்ற நம்பிக்கையில் உற்சாகத்துடன் உள்ளார் சேஜால். ‘ஒன் கோட்’, ‘ஒன் சர்வீஸ் நவ்’ ஆகிய நிறுவனத்தின் இரண்டு முக்கிய மின்னிலக்கமயமாதல் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அவர், நிறுவனம் தம்மை மேம்படுத்திக்கொள்ள பல வாய்ப்புகளை வழங்கிவருவதாகதத் தெரிவித்தார்.
அண்மையில் தொடர்புகள், தலைமைத்துவம், நம்பகத்தன்மை உருவாக்குதல், மனிதவள நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கிய பட்டறையில் கலந்துகொண்டு பலனடைந்ததாக அவர் தெரிவித்தார். தமது பணிகளில் மேலும் சிறப்பாக விளங்கும்விதம் அதில் கற்றுகொடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இன்றைய சவால்களுக்கு எதிர்காலத்தை உருமாற்றுவோம்
இன்றைய சவால்களையும் நடப்பில் இருக்கும் பிரச்சினைகளையும் தீர்வுகளையும் ஆராய்ந்து செயல்படுத்தும் வகையில் தரம்வாய்ந்த வேலைவாய்ப்புகளைப் புதிய வளர்ச்சித் துறைகளில் உருவாக்குவதை முக்கிய கூறாகச் சில நிறுவனங்கள் கொண்டுள்ளன. அவற்றில், ஊழியர்களை மேம்படுத்துவதிலும் அவர்களின் திறன்கள் தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் அமைவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன. ஊழியரணியின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கு உகந்த மேம்பாடுகளைச் செயல்படுத்துவதும் அவசியம். நிறுவனப் பயிற்சி மூலம் மேம்பட்ட வேலை வாய்ப்புகளை ஊழியர்களுக்கு உருவாக்கித் தருவதில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் நிறுவன பயிற்சிக் குழு முக்கிய பங்கு வகிக்கிறது.