அனுஷா செல்வமணி
சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றுபட்ட நெறிகளையும் நம்பிக்கைகளையும் மையப்படுத்தி ஒன்றிணைய வேண்டும் எனக் கூறிய அதிபர் ஹலிமா யாக்கோப், பன்முகத்தன்மையைக் கொண்டாடும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா பலதரப்பட்டோரையும் இலக்கியப் பரிமாற்றங்களில் இணைக்கிறது என்றார்.
நேற்று மாலை சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் இடம்பெற்ற சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் தொடக்க விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
உலகில் வெகு சில பன்மொழி விழாக்களில் ஒன்றாக இருக்கும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் உள்ளூர் எழுத்தாளர்களையும் இணைப்பதாக அவர் சொன்னார்.
விழாவில், ஆர்ட்ஸ் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் வில்சன் டான், விழா இயக்குநர் பூஜா நேன்சி, கலாசார, சமூக, இளையர் துறை துணையமைச்சர் ஆல்வின் டான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நேரடியாக நடைபெறும் இவ்வாண்டின் விழா, இம்மாதம் 20ஆம் தேதி வரை இடம்பெறும்.
இவ்வாண்டு முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள 'ஃபெஸ்டிவெல் வில்லேஜ்', குடியிருப்புப் பகுதிகள், விக்டோரியா அரங்கம், ஆர்ட்ஸ் ஹவுஸ் ஆகியவற்றுக்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.
இலக்கியம், கலை எனப் பலவற்றிலும் பங்குபெற எல்லா வயதினருக்கும் இந்த முயற்சி வாய்ப்பு அளிக்கும் என்றார் பூஜா நேன்சி.
உள்ளூர்ப் படைப்பாளர்கள் 220 பேர், வெளிநாட்டுப் படைப்பாளர்கள் 60 பேர் என ஏறத்தாழ 280 பேச்சாளர்கள் இந்நிகழ்வில் பங்குபெறவுள்ளனர்.
இந்நிகழ்ச்சி, சிங்கப்பூர்ப் படைப்பாளர்களை உலகப் பார்வையாளர்களுக்கும் உலகளவில் சிறப்பு பெற்றுள்ள படைப்பாளர்களை சிங்கப்பூர் இலக்கியவாதிகளுடன் இணைக்கவிருப்பதாகத் திரு வில்சன் டான் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமிப்பரவலில் இருந்து மீண்டுள்ள நிலையில், 'எனில்' எனும் தலைப்பிலான இவ்வாண்டு விழாவில், பயிலரங்குகள், கதை சொல்லுதல், உரையாடல்கள், கண்காட்சிகள் என இலக்கியத்தையும் மொழியையும் சார்ந்த 19 தமிழ் நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்துகொள்ளலாம்.
நிகழ்ச்சிகளைப் பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் நுழைவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொள்ளவும் விரும்புவோர் www.singaporewritersfestival.com எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.