சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், அதன் இளையர் திட்டங்களில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் ஈடுபடும் இளையர்களை ஆண்டுதோறும், 'இளையர் விருது விழா' வழியாக அங்கீகரித்து வருகிறது. இவ்வாண்டு 150 இளையர்கள் விருது பெற்றனர். சிண்டாவின் வழிகாட்டு தல் திட்டம் (GAME-Guidance and Mentorship Programme), சிண்டா காற்பந்து அணி, 'யூத் எனேபள்' (Youth Enable), 'ஐடிஎனேபள்' (ITEnable), சக மாணவத் தலைமைத்துவத் திட்டம் (Peer Leadership Programme) ஆகியவற்றில் தங்களின் தனித்துவமான பங்களிப்புக்காக இளையர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகக் கணக்காய்வுத் துறையில் உயர் 'நைடெக்' பயிலும் மாணவர் சக்தி குமரன் செல்வகுமரன், 17, 'ஐடிஎனேபள்' திட்டத்தில் இணைந்து அப்பிரிவில் விருது பெற்றார்.
"கணக்காய்வுத் துறையில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. 'ஐடிஎனேபள்' திட்டத்தின் பயிலரங்குகள் மூலம் இத்துறை பற்றி மேலும் ஆழமாக அறிந்துகொண்டேன். பிடபுள்யூசி நிறுவனத்திற்குச் சென்றபோது அங்குள்ள ஊழியர்களையும் நிபுணர்களையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது," என்றார் அவர்.
பணியிடங்களுக்கு மேற்கொண்ட பயணங்கள் மூலம் எதிர்காலத்தில் தான் பணிபுரிய விரும்பும் துறை பற்றி அதிகம் அறிந்திட முடிந்ததாகவும் ஆர்வமும் ஆழ்ந்த புரிதலும் கூடித் தன்னைத் தயார்படுத்தி உள்ளதாகவும் மாணவர் சக்தி குமரன் கூறினார்.
சிண்டாவின் பல்வேறு இளையர் நிகழ்வுகளில் 2018ஆம் ஆண்டு முதல் தொண்டூழியம் புரிந்துவரும் 21 வயது தனுஷா கதிரேசன், இவ்வாண்டின் சிண்டா இளையர் விருதைப் பெற்றுள்ளார். தன்னுடைய 17வது வயதில் முதல்முதலாக சிண்டா இளம் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றார்.
அக்கருத்தரங்கின் மூலம் தனது சிந்தனைகளும் செயல்பாடுகளும் மேம்பட்டதை உணர்ந்த அவர், சிண்டாவுடன் தொண்டூழியராக இணைந்து சமூகத்திற்குத் தன்னால் முடிந்த பங்கை ஆற்றுகிறார்.
அதே கருத்தரங்கு 2019ல் நடைபெற்றபோது திட்டத்திற்குத் தலைமைத் தொண்டூழியராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து சிண்டா நடத்திய உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான இளையர் முனைப்பு முகாமுக்குத் திட்டமிட உதவியதோடு அதற்குத் தொண்டூழியத் தலைவராகவும் இருந்து குழுவை வழிநடத்தினார்.
தற்சமயம் சிண்டாவின் இளையர் அணி குழுவின் செயலாளராக இருக்கும் இவர், "இளையர்களை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் சிண்டாவின் அனைத்து நிகழ்வுகளும் மிகவும் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. அதிலும் தொண்டூழியராக இணைந்து பணியாற்றும்போது நானும் கற்றுக்கொண்டு பிறருடனும் அதனைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது," என்றார்.
சிண்டாவின் காற்பந்து அணித் திட்டத்தின் வழிகாட்டித் தொண்டூழியராக இருக்கும் 20 வயது ஆர். ஸ்ரீ வர்ஷினிக்கும் இளையர் விருது கிடைத்தது. சிறுவயது முதலே காற்பந்து விளையாட்டில் அதீத ஆர்வமுடைய இவர், சிண்டாவின் பெண்கள் காற்பந்து அணியான 'எஸ்எஃப்சி வாரியர்ஸ்' (SFC Warriors) அணியில் இடம்பெற்றுள்ளார்.
தொழில்நுட்பக் கல்விக் கழக (கிழக்கு) பயணிகள் சேவைகள் துறையில் உயர் நைடெக் பயிலும் வர்ஷினி, "சிண்டாவின் இளையர் திட்டங்களில் பங்குகொண்டதன் மூலம் தலைமைத்துவப் பண்புகளையும் குழுநிலையில் பணியாற்றும் திறன்களையும் வளர்த்துக்கொண்டேன்," என்று கூறினார்.
இந்நிகழ்வு குறித்து சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் கூறுகையில், "ஒவ்வோர் ஆண்டும் சிண்டாவின் இளையர் திட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட இளையர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் அதிக ஈடுபாட்டோடு தனித்து விளங்கிய இளையர்களை அங்கீகரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இத்திட்டங்களின் மூலம் இளையர்களின் தன்னம்பிக்கையும் எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்வும் சமூகம் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது," என்றார்.
செய்தி: மோனலிசா