அனுஷா செல்வமணி
இளையர்நலப் பணி நிபுணத்துவ ஊழியர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் புதிய கல்விக்கழகம் அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கிறது.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நேற்று நடைபெற்ற இளையர்நலப் பணி தினம் தொடர்பான நிகழ்ச்சியில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.
இளையர்நலப் பணித் துறையில் புதிதாகச் சேரும் ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், நிபுணத்துவ ஊழியர்களுக்கான சட்டரீதியான வளங்கள் ஆகியவை குறித்தும் நேற்றைய நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.
இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர் இளையர்நலப் பணிச் சங்கம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஆதரவோடு ஏற்பாடு செய்திருந்தன. சங்கத்தின் 10ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது இளையர்க்கு ஆதரவு அளித்த இளையர்நலப் பணி வல்லுநர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
"சவால்களை எதிர்நோக்கும் இளையர்களுக்கு இவர்கள் ஆதரவாக விளங்குகின்றனர். நோய்த்தொற்றுச் சூழல் நம்மைப் புரட்டிப் போட்டிருந்தாலும் இளையர்களுக்கு மன ஆதரவு தந்து, நிதி சார்ந்த உதவி நாடுவதற்கான வசதிகளையும் இவர்கள் ஏற்பாடு செய்து தந்தனர்," என்றார் அவர்.
இந்தத் துறையில் புதிதாகச் சேரும் ஊழியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்பு அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கப்படும்.
துறை சார்ந்த அடிப்படைப் புரிதல், வேலை முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் குறித்த தகவல்கள், மற்ற நிபுணர்களுடன் கலந்து பழகுவதற்கான வாய்ப்புகள் போன்றவற்றை இது வழங்கும்.
முன்னர் இத்துறையில் பணிபுரிந்த, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆசிரியர்கள் இதில் கற்பிப்பர்.
புதிய பட்டதாரிகள் பலர் இத்துறையில் சேரும்போது அனுபவம் இருக்காது. மிகுந்த ஆர்வத்துடன் வேலையில் சேரும் அவர்களில் சிலருக்கு, சவால்மிக்க நடத்தை கொண்ட இளையர்களை எதிர்கொள்ளும்போது அவர்களைச் சமாளிக்கும் திறன்கள் இருக்காது என்பதால் இத்தகைய பயிற்சி மிகவும் முக்கியம் என்று கூறப்பட்டது.
பாய்ஸ் டவுன் இல்லத்தின் குடியிருப்புக் காப்பகத் துணைத் தலைவர் சந்திரன் இளவரசன், "ஐந்து ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரியும் எனக்கு, இந்தப் பணி பலவற்றைக் கற்றுத் தந்துள்ளது. இளையர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கேட்பதற்கான பொறுமையை நான் வளர்த்துக்கொண்டேன்," என்று கூறினார்.
சிங்கப்பூர் இளையர்நலப் பணிச் சங்கம், சிங்கப்பூர் பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தோடும் ஆலன் & கிளெட்ஹில் எனும் சட்ட நிறுவனத்தோடும் இணைந்து இளையர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இணையம்வழி சட்ட ஆலோசனைகளை வழங்கும்.
நேற்றைய நிகழ்ச்சியில் சமூக சேவை அமைப்புகள், பள்ளிகள், சமூகக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளையர் நலப் பணித் துறை வல்லுநர்கள், சமூக சேவை மாணவர்கள், பங்காளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.