நேரடி மாணவர் சேர்ப்பு முறைப்படி உயர்நிலைப்பள்ளிக்கு விண்ணப்பிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதாக கல்வி அமைச்சின் பள்ளிகள் துறை இயக்குநர் திருவாட்டி டான் சென் கீ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் 12,200 மாணவர்களிடம் இருந்து 31,800 விண்ணப்பங்கள் வந்ததாகவும் முடிவில் 3,900 மாணவர்களுக்கு இடம் கிடைத்ததாகவும் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிஎஸ்எல்இ-க்குப் பிந்திய விவேக பெற்றோர் இணையக் கருத்தரங்கில் கூறினார்.
இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு அளவைவிட அதிகம்.
கல்வி அமைச்சின் துணை தலைமை இயக்குநருமான திருவாட்டி டான், இப்படி விண்ணப்பங்கள் அதிகரித்து வருவது பாதகமான ஒன்றல்ல என்றார்.
நேரடிப் பள்ளி மாணவர் சேர்ப்பு என்ற செயல்திட்டம், தொடக்கப்பள்ளி மாணவர்கள் தங்களுடைய தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்கு முன்னதாகவே (பிஎஸ்எல்இ) விளையாட்டுகள், கற்பனை எழுத்தாற்றல் போன்ற துறைகளிலும் அறிவியல், மானிடவியல் போன்ற ஏட்டுக்கல்வி பாடங்களிலும் தங்களுக்குள்ள சீரிய ஆற்றலின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க வழிவகுக்கிறது.
சென்ற ஆண்டு நடப்புக்கு வந்த புதிய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறை பற்றியும் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேரும்போது அந்த ஏற்பாடு எப்படி பயன்படுத்தப்படும் என்பது பற்றியும் பெற்றோருக்கு விளக்கும் நோக்கத்தில் நடந்த இணையக் கருத்தரங்கில் திருவாட்டி டான் குறிப்பிட்டார்.