பாலியிலிருந்து இர்ஷாத் முஹம்மது துணைச் செய்தி ஆசிரியர்
இந்தோனீசியாவின் பாலித் தீவில் நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் லீ சியன் லூங் நேற்று அங்கு சென்றுள்ளார்.
ஜி20 தலைமைப் பொறுப்பை இவ்வாண்டு இந்தோனீசியா ஏற்றுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோவின் அழைப்பை ஏற்று பிரதமர் லீ அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
உணவு, எரிசக்திப் பாதுகாப்பு, சுகாதாரம், மின்னிலக்க உருமாற்றம் ஆகிய அம்சங்கள் குறித்த கலந்துரையாடல்களில் பிரதமர் லீ பங்கெடுப்பார். மற்ற தலைவர்களுடன் இருதரப்புச் சந்திப்புகளையும் அவர் நடத்தவுள்ளார்.
'ஒன்றிணைந்து மீள்வோம், வலுவாக மீள்வோம்' எனும் கருப்பொருளில் கொவிட்-19 நோய்ப் பரவலுக்குப் பிந்தைய உலகளாவிய மீட்சியை, வலுவாகவும் மேம்பட்ட மீள்திறனுடனும் செயல்படுத்துவது குறித்து உச்சநிலை மாநாட்டில் கலந்துரையாடப்படும்.
சவால்மிக்க அரசியல், பொருளியல் சூழலில் இவ்வாண்டின் ஜி20 உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது. துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு, நிதி அமைச்சின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் பிரதமர் லீயுடன் இந்தோனீசியா சென்றுள்ளனர்.
ஜி20 நாடுகளின் அமைப்பில் சிங்கப்பூர் இடம்பெறாவிட்டாலும் உலகின் ஆகப் பெரிய பொருளியல்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் மாநாட்டில் குறைந்தது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் சீ ஜின்பிங், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கலந்துகொள்ளவில்லை.
உக்ரேனியப் பிரதமர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி மெய்நிகர் முறையில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் லீ நாளை வரை பாலியில் இருப்பார். அதுவரை இடைக்காலப் பிரதமராக மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் செயல்படுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.