இவ்வாண்டு தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ) எழுதிய 37,095 மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளி செல்ல தகுதிபெற்றுள்ளனர்.
இவர்களில் 68.4% மாணவர்கள் விரைவுநிலைக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவை கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை ஒத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிசயிக்க வைத்த சர்வினி
தேர்ச்சி பெற்றவர்களுள் கவனக்குறை மிகைச்சுறுதி குறைபாட்டினால் (ADHD) பாதிக்கப்பட்டுள்ள 12 வயதான சர்வினி திருமுருகனும் ஒருவர். சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதும் விரைவு நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளார் இவர்.
இவர் தொடக்கநிலை மூன்றாம் ஆண்டு படித்தபோது வகுப்பறையில் கவனச் சிதறல், மிகைச் செயல்பாடு, அன்றாட வேலைகளில் மறதி, பொறுமையின்மை போன்ற அறிகுறிகள் தென்படுவதை கவனித்த ஆசிரியர், பெற்றோரிடம் இதனைத் தெரிவித்தார். பள்ளி பரிந்துரையின் பேரில் மருத்துவ மதிப்பீட்டை மேற்கொண்ட இவருக்கு குறைபாடு உறுதிசெய்யப்பட்டது.
தற்போது பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் தொடக்கப் பள்ளிமாணவியான இவர் ஆரம்பத்தில் இக்குறைபாடுடையோரால் கல்வியிலும் பிறவற்றிலும் சாதிக்க இயலாது என தாமாகவே நினைத்து துவண்டு போனார். இதன் காரணமாக தொடக்கநிலை ஐந்தில் எல்லாப் பாடங்களிலும் தோல்வி அடைந்தார். அப்போது நிகழ்ந்த இவரது நெருங்கிய தோழியின் மரணம் இவரை மேலும் பாதித்தது.
இதனால் வழக்க நிலையிலிருந்து அடிப்படை நிலைக்கு மாற்றப்படும் சூழலில் சர்வினிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அளித்த ஆதரவினாலும் ஊக்கத்தினாலும் தக்க சிகிச்சை முறைகளின் உதவியுடனும் தன்னம்பிக்கை பெற்றார்.
படிப்படியாக ஒரே ஆண்டில் பாடங்களிலும் பிற செயல்பாடு
களிலும் தொடர்ந்து முன்னேறி தொடக்கநிலை ஆறில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
"இக்குறைபாடு ஒரு நோய் அல்ல, இளம் வயதிலேயே கண்டறியப்பட்டால் தகுந்த சிகிச்சை முறைகளை தொடர்ந்து பின்பற்றினால் அனைத்து செயல்பாடுகளிலும் முன்னிலை வகிக்க முடியும்," என்று கூறினார் சர்வினியின் தாயார் முத்தழகி முனியாண்டி.
இன்பப்புகழுக்கு இளம்
வயதில் கிடைத்த ஊக்கம்
இளம் வயதிலேயே உடலிலும் மனதிலும் உறுதிபெறுவது அவசியம் என்ற தன்னுடைய தந்தையின் அறிவுரைப்படி விளையாட்டு, கல்வி என இரண்டிலுமே சிறந்து விளங்குகிறார் 12 வயதான இன்பப்புகழ் குமரப்பன். ராடின் மாஸ் தொடக்கப் பள்ளி மாணவரான இவர், ஒரு ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார்.
இவ்வாண்டின் தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு எழுதியிருந்த இவர் விரைவு நிலையில் தேர்ச்சிபெற்று விளையாட்டு ஒதுக்கீட்டின் வழியாக நேரடிப் பள்ளிச் சேர்க்கை மூலம் விக்டோரியா பள்ளியில் சேர அனுமதி பெற்றுள்ளார். இவர் தன்னுடைய பள்ளியைப் பிரதிநிதித்து 2022ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு வீரர் விருதினை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் ஆக விரும்பும் ஹசானா
சக மனிதரைப் புரிந்துகொண்டு கருணையுடன் நடந்துகொள்வது ஒவ்வொரு தனிமனிதரின் கடமை என தன் வயது மீறிய முதிர்ச்சியுடன் கூறுகிறார் 12 வயதான ஹசானா. தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வில் விரைவு நிலையில் தேர்ச்சி பெற்றுள்ள இவர் எதிர்
காலத்தில் மருத்துவராக விரும்பு
கிறார்.
செயின்ட் அந்தோணி தொடக்கப் பள்ளி மாணவரான இவர் தன்னுடைய வகுப்பின் சட்டாம்பிள்ளையாக இருந்துள்ளார்.
தன்னுடைய தோழி ஒருவர் தமிழ்மொழிப் பாடத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தபோது தானாக முன்வந்து அவருக்கு பாடங்களை எளிய முறையில் கற்றுக்கொடுத்துள்ளார் ஹசானா. தமிழை மற்ற பாடங்களைப்போல கருதாமல் தாய்மொழி மீது அவரின் ஆர்வத்தை தூண்ட முயற்சித்துள்ளார். இவர் தந்த ஊக்கத்தினாலும் பாடங்களில் உதவியதாலும் அந்தத் தோழி தற்போது தமிழை அதிக ஆர்வத்துடன் படிப்பதாக இவருடைய ஆசிரியர் பகிர்ந்தார்.
இவருடைய பள்ளியில் சேவையிலும் சமூக அக்கறையிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'கேர் க்வெஸ்ட் விருதை' இவ்வாண்டு இவர் பெற்றுள்ளார். மேலும் 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான கல்வி அமைச்சின் 'எடுசேவ் நற்குண விருதை' ஹசானா வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.