தமிழ் முரசு நடத்திய பயிலரங்குவழி ஒரு செய்தியாளரின் பணியைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொண்டனர். பின்னர், தாங்கள் கற்றுக்கொண்ட உத்திகளைப் பயன்படுத்தி தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்களைப் பேட்டி கண்டனர். அவ்வாறு குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இளம் செய்தியாளர்களின் படைப்புகள் இவ்வார இளையர் முரசில் இடம்பெறுகின்றன.
செய்தித் தொகுப்பு: ஹர்ஷிதா பாலாஜி
பள்ளி நாட்களில் விளையாட்டுத்தனமாக இருந்து, பின்னர் பெற்றோர் மற்றும் ஆசிரியர் அறிவுரை
களாலும் உதவியாலும் சாதாரண நிலைத் தேர்வில் சிறப்பாகச் செய்து, இன்று கப்பல் பொறியியல் துறையில் சிறந்து விளங்குகிறார் குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு அஃப்ரிடி. குவின்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது அவருக்குப் பதினைந்து வயது. அந்த வயதில்தான் அவர் தன்னுடைய குடும்பத்தாருடன் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்திருந்தார்.
சிலருக்குத் தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்குச் செல்வது சவாலாக இருக்கலாம். ஆனால், தான் பிறந்து வளர்ந்த நாட்டிலிருந்து புதிதாக ஒரு நாட்டுக்குப் புலம்பெயர்வோர் சந்திக்கும் சவால்கள் அதிகம் என்று நினைவுகூர்ந்தார் திரு அஃப்ரிடி. இருப்பினும், அஃப்ரிடி தன்னால் முடிந்த அளவுக்கு முயன்று அச்சவால்
களைக் கடந்து வந்துள்ளார் என்பதே எங்களின் எண்ணம்.
திரு அஃப்ரிடி உயர்நிலைப் பள்ளி சாதாரண நிலைத் தேர்வை 2017ல் எழுதினார். உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை தன் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளதாக அவர் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். பள்ளியில் அவர் பெற்ற அனு
பவங்களும் நண்பர்களும் ஆசிரியர்களும் தனக்குப் பசுமையான நினைவுகளைத் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உதவி தேவைப்பட்டபோது, அவர் தம்முடைய ஆசிரியர்களையும் நண்பர்களையும் அணுகியபோது அவர்கள் ஆலோசனை வழங்கிப் பக்கபலமாக இருந்ததாக அவர் கூறினார். பெரும்பாலும், அஃப்ரிடியின் குண இயல்பை அவரின் ஆசிரியர்கள் நன்குப் புரிந்துகொண்டு அக்கறையுடன் வழிகாட்டியதாக அவர் சொன்னார்.
சராசரி மாணவர்களைப்போல திரு அஃப்ரிடியும் தன் நண்பர்
களுடன் சேர்ந்து அவ்வப்போது சிறு சிறு சேட்டைகள் செய்து ஆசிரியரின் செல்லக் கோபத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தனக்குப் பிடித்தமான பாடம் எது என்று நாங்கள் கேட்டதற்கு, தமிழ்தான் என்று உறுதியாகக் கூறினார். தமிழ் வகுப்பில் இருக்கும்போதெல்லாம் அவர் தன் வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெற்றதாக அவர் கூறினார். தமிழ் வகுப்பு எப்போதுமே மிக சுவாரசியமாகவும் கலகலப்பாகவும் இருந்தது என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
விடாமுயற்சி, மீள்திறன், கடமைகளைச் செவ்வனே செய்து முடித்தல் போன்ற சிறந்த பண்புகளை உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை தனக்குக் கற்றுத்தந்ததாகக் கூறும் திரு அஃப்ரிடி, பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சென்ற பிறகுதான் உயர்நிலைப்பள்ளியில் தாம் பெற்ற அனுபவங்களின் அருமையை உணர்ந்ததாகக் கூறுகிறார்.
தன் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்ற பிறகு அவருக்கு எந்த துறையைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, அவர் பள்ளி ஆசிரியர்களின் உதவியை நாடினார். ஆசிரியர்கள் ஆலோசனையில் தனக்குச் செயல்முறை நடவடிக்கைகளில் ஈடுபாடு உள்ளதை அவர் உணர்ந்தார். மேலும், அவர் வடி
வமைப்பு, தொழில்நுட்பப் பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்ததால் அது தொடர்பான கப்பல் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்கினார்.
இன்று கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனம் ஒன்றில் திரு அஃப்ரிடி பணிபுரிகிறார்.
தனது உயர்நிலைப் பள்ளியில் சில சிரமமான காலகட்டங்களும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதுபோன்ற நேரங்களில் தன் நண்பர்களை அதிகம் நாடினார். இன்பத்தைப் பகிர்ந்தால் இரட்டிப்பாகும்; துன்பத்தைப் பகிர்ந்தால் பாதி ஆகும் என்பதுபோல் அவர் வாழ்வின் இன்பதுன்பங்களை தன் நண்பர்களுடன்தான் அதிகம் பகிர்ந்துகொள்வார்.
தற்போதைய வேலை தொடர்பாக நாங்கள் கேட்டபோது ஆரம்பத்தில் சில சவால்களைத் தான் எதிர்நோக்கியதாக அவர் கூறினார். தயக்கத்துடன் தன் வேலையைச் செய்யத் தொடங்கியவர், நாளடைவில் அதன் நுணுக்கங்களைத் திறம்படக் கற்றுக்கொண்டு மிகுந்த தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுகிறார். தனது வேலை மிகுந்த திருப்தியைத் தனக்கு அளிப்பதாகவும் கூறுகிறார்.
நேரத்தை விவேகத்துடன் திட்டமிடுவதே அறிவுடைமை என்பதை வலியுறுத்திய திரு அஃப்ரிடி, பள்ளிப்பருவத்தின்போது வழிகாட்டிகளாக விளங்கும் ஆசிரியர்களின் உதவியை நாடத் தயங்கக்கூடாது என்றும் எங்களுக்கு ஆலோசனை கூறுகிறார்.
இன்று கப்பல் துறையில் தான் சிறந்து விளங்குவதற்கு, உயர்
நிலைப் பள்ளியில் பெற்ற அனுபவங்கள்தான் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தன என்றார் அவர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் வேலை அனுபவத்தைப் பெற்ற பிறகு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பைத் தொடர வேண்டும் என்பது இவரின் கனவாகும்.
ஒவ்வொருவரும் தங்களின் பள்ளிப் பருவத்தில் சிறந்த நூல்களை வாசிக்கும் பழக்கத்தையும் வெளிப்புற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் உற்சாகத்தையும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்பது திரு அஃப்ரிடியின் அறிவுறுத்தலாகும். இதனால், தன்னை மேம்படுத்திக்கொண்டு எதிர்காலச் சவால்களை எளிமையாகக் கையாளமுடியும் என்பதும் அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
பேட்டி கண்ட மாணவர்கள்:
தியானா கணேஷ்
கீர்த்தி கோவிஷ்
முருகு சுப்ரமணியன் பிரகதா