மாதங்கி இளங்கோவன்
சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர் பி. கிருஷ்ணன் வானொலிக்காக உருவாக்கிய ‘நச்சுக்கோப்பை’ நாடகம், மலாக்காவின் 15ஆம் நூற்றாண்டு அரச வரலாற்றுச் சூழலை கற்பனை செய்து எழுதப்பட்டது. இக்கதையை திரைப்பட வடிவில் படைத்து, இக்கால சிங்கப்பூரர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடு கடுமையாக உழைத்தனர் ‘சிட்ஃபி (SITFE)’ குழுவினர்.
அத்துடன், சேலையின் மகத்துவத்தையும் அதன் உள்ளூர் வரலாற்றையும் மக்களுக்குத் தெரிவிக்கும் விதம் ‘நூல் கதைகள்’ என்ற மற்றொரு திரைப்படத்தையும் அவர்கள் தயாரித்துள்ளனர்.
இவ்விரு திரைப்படங்களும் நவம்பர் 12ஆம், 13ஆம் தேதிகளில் கார்னிவல் திரையரங்கில் திரையிடப்பட்டது.
‘நச்சுக்கோப்பை’ திரைப்படத்தின் வசனங்கள், நாடகத்தில் இடம்பெற்றது போலவே இருக்க வேண்டும் என்ற திரு பி.கிருஷ்ணனின் கோரிக்கைக்கு ஏற்ப, பல நீளமான, சவால்மிக்க வசனங்களை திரையில் சொல்வது சற்று கடினமாக இருந்தது என்றார் இளம் நடிகர் சஞ்சீவி கணேசன், 27. “என்னைப் பெரிய அரங்கில், திரையில் காண முதலில் அஞ்சினேன். ‘லூசிஃபர்’ எனும் ஆங்கில நாடகத்தில் கதாநாயகனின் நடிப்பை உன்னிப்பாக கவனித்து, அவரைப்போல சில நுணுக்கங்களைப் புகுத்த முயற்சிசெய்தேன்,” என்றார் அவர்.
நச்சுக்கோப்பையில் நடித்த இன்னொரு நடிகரான சிலம்பரசன் பருசப்புலி, 31, சிங்கப்பூரின் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து 2015ஆம் ஆண்டில் வந்தவர்.
நடிப்பிலும் பேரார்வம் காட்டி வரும் அவர், நச்சுக்கோப்பையில் துன் முதாஹிக் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சக நடிகர்களின் ஆதரவு தமது தன்னம்பிக்கையை அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இத்திரைப்படத்தைப் பார்த்து பெருமிதம் அடைந்ததாகக் கூறினார் திரு பி.கிருஷ்ணன். “நம் மக்கள், சிங்கப்பூர், மலாயா வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களை எழுதினேன்,” என்றார் அவர்.
வரலாற்றுத் தழுவல்கொண்ட கதைக்களத்தில் அமைந்த ‘நூல் கதைகள்’ திரைப்படத்தில் மேடை நாடக அங்கங்களைப் புகுத்தியது சுவாரசியமாக இருந்தது என்றார் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன். ஆயினும், கதை மூன்று வெவ்வேறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டதால் கதையோட்டத்தைப் புரிந்துகொள்வது சற்று சவாலாக இருந்தது என்றும் அவர் சொன்னார்.