வேலையிடத்தில் சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுவது ஏன், மாற்று விடுமுறையை சிலருக்கு நீட்டிப்பது ஏன் என்று உத்தேச வேலையிட நியாயமான நடைமுறை சட்டம் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
சிலருக்கு மட்டும் சிறப்பு ஏற்பாடுகளுடன் வேலைகளை வழங்குவது பாகுபாடு காட்டு வதுபோல உள்ளது என்று சிலர் குறைபட்டுக் கொண்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் மனித வளத் துறையினர், முதலாளிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உத்தேச வேலையிட நியாயமான நடைமுறை சட்டம் ஏற்படுத்தும் விளைவுகள், செயல்பாடுகள், நன்மைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.
மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணை தலைமைச் செயலாளர் சாம் ஹுய் ஃபோங், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் கௌரவ செயலாளர் எட்வின் இங் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்று கலந்துரையாடினர். மூவரும் முத்தரப்புக் குழுவில் உறுப்பினர்கள் ஆவர்.
சென்ற பிப்ரவரி 13ஆம் தேதி இடைக்கால அறிக்கையில் உத்தேச சட்டம் குறித்த பரிந்துரைகளை குழு வெளியிட்டிருந்தது.
நாடு, வயது, இதர காரணங்கள் அடிப்படையில் பேதம் பார்க்காமல் ஊழியர்களைப் பாதுகாப்பது உத்தேச சட்டத்தின் நோக்கமாகும். ஒழுங்கற்ற ஊழியர் களுக்கு விதிக்கப்படும் ஒழுங்கற்ற நடவடிக்கைகளும் கலந்துரையாடலில் அலசப்பட்டது.
சில ஊழியர்களுக்கு மட்டும் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிப்பது மற்றவர்களுக்கு காட்டும் பாகுபாடு என்றும் சிலர் கூறினர். சிங்கப்பூர் மேரியட் டேங் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மனிதவள நிபுணர்கள் பயிலகத்தின் தலைமை நிர்வாகி அஸ்லாம் சர்தார் கருத்தரங்கை வழி நடத்தினார். சிலருக்கு மட்டும் சலுகை வழங்கப்படுவது ஏன் என்பது ஊழியர்களுக்கு முதலாளிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று அமர்வில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.