செங்காங் வெஸ்ட் அவென்யூவில் அமைந்துள்ள கார் நிறுத்துமிடம் ஒன்றிலிருந்து மோட்டார்சைக்கிளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை அவர்மீது குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை கூறியது. அவரிடமிருந்த மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதன்கிழமை அந்தத் திருட்டுச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
கண்காணிப்பு கேமராப் பதிவுகளின் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் திருடியதாக நம்பப்படும் ஆடவரை அடையாளம் கண்டனர். வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த வட்டாரத்தில் மேலும் சில வாகனத் திருட்டுகளில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை வெளிச்சமான பகுதியில் நிறுத்திவைக்கும்படியும் திருட்டுக்கு எதிரான எச்சரிக்கை ஒலிக்கருவியைப் பொருத்தும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றும்படி அவர்களுக்குக் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.