மருத்துவமனையில் வலி மாத்திரைக்காகக் காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்த நோயாளி ஒருவர், இணையம் வழியாக பெனடால் வாங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒவ்வொரு நோயாளியையும் உரிய நேரத்தில் கவனிக்க உறுதிபூண்டுள்ளோம் என்று செங்காங் பொது மருத்துவமனை ஃபேஸ்புக் பதிவில் அறுதியிட்டு கூறியுள்ளது.
ஃபுட்பாண்டா செயலி வழியாக நோயாளி ஒருவர் பெனடால் வாங்கிய காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதை அறிந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அவசரமற்ற மருத்துவப் பராமரிப்பைவிட அவசரமான பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அது கூறியது. மருத்துவமனையின் நோயாளிகள் பராமரிப்புக் குழு, உரிய நேரத்தில் தேவையான சேவைகள் வழங்குவதை உறுதிப்படுத்துவோம். ஒவ்வொரு நோயாளிக்கும் உரிய நேரத்தில் சேவை வழங்கப்படும் என்று மருத்துவமனை மேலும் தெரிவித்தது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட டிக்டாக் காணொளியில் ஜோம்படோக் என்பவர், வலி நிவாரண மாத்திரைக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த பிறகு ஃபுட்பாண்டா செயலி மூலமாக ‘பெனடால்’ மாத்திரையை வரவழைத்ததாகத் தெரிவித்துள்ளார். இவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் விளக்கப்படவில்லை.
“சிறிது கற்பனை செய்து பாருங்கள். நான் வலிக்காக பெனடால் கேட்கிறேன். ஆனால் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையில் என்னால் வலி மாத்திரையைப் பெற முடியவில்லை. அபத்தமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
மருத்துவமனை வரவேற்பு அறையில் ஃபுட் பாண்டா விநியோகிப்பாளரிடமிருந்து வலி மாத்திரை பெறுவதையும் அவர் படம்பிடித்து பதிவேற்றியிருந்தார்.
ஆச்சரியப்பட்ட விநியோகிப்பாளரிடம் தன்னுடைய சூழ்நிலையை அவர் விளக்கியிருந்தார்.
ஆனால் இணையம் வழியாக வரவழைக்கப்பட்ட மாத்திரை எவ்வளவு நேரத்தில் கிடைத்தது என்பது பற்றிய தகவல் இல்லை.