மக்கள் கழக அடித்தள அமைப்புகளின் ஏற்பாட்டில், புத்தாண்டை வரவேற்க சிங்கப்பூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
மரினா பே சேண்ட்ஸ், செந்தோசா, கிளார்க் கீ போன்ற இடங்களில் வாணவேடிக்கையைப் பார்க்க மக்கள் திரண்டனர்.
சிங்கப்பூரைச் சுற்றிலும் 28 குடியிருப்புப் பேட்டைகளில் நடந்த புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிகளில் 70,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்.
அடித்தளத் தலைவர்கள், ஆலோசகர்கள், குடியிருப்பாளர்களுடன் இணைந்து புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
செம்பவாங்கில் முதல் சாலையோரப் புத்தாண்டு விழா
இவ்வாண்டு முதன்முறையாக செம்பவாங் குழுத்தொகுதி, உட்லண்ட்ஸ் ரிங் ரோடு அருகே நடத்திய சாலையோரப் புத்தாண்டு வரவேற்பு விழாவில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
வீடுசார்ந்த வணிகங்கள், தெருக்கூத்து, கேளிக்கை அங்கங்கள், மேடை நிகழ்ச்சிகள் என நால்வகையாகப் பிரிக்கப்பட்ட கொண்டாட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
‘கம்பத்து’ உணர்வை நினைவுபடுத்திய ‘சொங்காக்’, ‘ஹாப்ஸ்காட்ச்’ போன்ற விளையாட்டுகளோடு 23 மீட்டர் நீள வைக்கிங் கப்பல், ரயில் சவாரிகள் போன்ற விளையாட்டுகளும் இடம்பெற்றன.
2024ல் முழுமையாகத் திறக்கப்படவிருக்கும் உட்லண்ட்ஸ் மருத்துவமனை, முதியோருக்கான புதிய வசதிகள் போன்று உட்லண்ட்ஸ், செம்பவாங் பகுதிகளில் பல வளர்ச்சித் திட்டங்கள் அமையவிருப்பதாகக் கூறினார் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர்.
“2024ல் சிறுவர்கள் முதல் முதியோர் வரை உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்கள் பல சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.
“இளையர்க்கு விளையாட்டு, கற்பனைத் திறன், பொது அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக தரமான முறையில் நேரத்தைச் செலவிடவும் பிற இனத்தவரின் பழக்க வழக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
“முதியவர்களை, குறிப்பாக தனியாக வாழ்வோரை முதுமைக்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பலவற்றையும் எதிர்பார்க்கலாம்,” என்றார் உட்லண்ட்ஸ் வட்டாரம் 9ன் குடியிருப்பாளர் தொடர்புக் கட்டமைப்புத் தலைவர் மரியாம் நாட்சியார்.
“2023ல் திறக்கப்பட்ட புக்கிட் கேன்பரா ஒருங்கிணைந்த விளையாட்டு, சமூக நடுவம் மூலம் குடியிருப்பாளர்கள் உடற்பயிற்சி செய்ய புதிய இடம் பெற்றனர். இவ்வாண்டும் குடியிருப்பாளர்களுக்காக பல திட்டங்கள் கொண்டுள்ளோம்,” என்றார் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபார்.