கேளிக்கை நிலையங்கள், கேளிக்கை விளையாட்டுகளில் வெல்லப்படும் பரிசு மதிப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வெல்லப்படும் பரிசுகளின் மதிப்பு அதிகபட்சமாக 100 வெள்ளியாக இருக்கும்.
இது குறித்து இன்று (பிப்ரவரி 1) வெளியிட்ட அறிக்கையில் விளையாட்டாளர்களை ஈர்ப்பதற்காக கேளிக்கை நிலையங்கள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளின் பரிசு மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
உயர்மதிப்புள்ள திறன்பேசி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுவதாகவும் அது கூறியது.
“இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது சூதாட்டத்திலிருந்து மாறுபட்டதல்ல,” என்று அமைச்சு கூறியது.
இதனால் பரிசு மதிப்பின் உச்சவரம்பு, குறிப்பாக இளையர்கள் சூதாட்டத்தில் ஈடுபடும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கம் கொண்டது.
பல வெளிநாடுகளில் இது போன்ற பரிசுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அமைச்சு சுட்டிக்காட்டியது.
உதாரணமாக, பிரிட்டிஷ் சூதாட்ட ஆணையம், ‘கிடுக்கி’ கேளிக்கை விளையாட்டுகளுக்கு அதிகபட்சமாக 50 பவுண்ட் (S$84) உச்சவரம்பு வைத்துள்ளது.
நூறு வெள்ளி உச்ச வரம்பு தவிர இரண்டு கூடுதல் கட்டுப்பாடுகளும் மார்ச் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
அதன்படி இனி கேளிக்கை நிலையங்களும் கேளிக்கை விளையாட்டுகளை நடத்துபவர்களும் ரொக்கம், ரொக்கத்திற்கு ஈடான பரிசுகள், பற்றுச்சீட்டு, அன்பளிப்புச் சீட்டு (கூப்பன்) போன்றவற்றை பரிசுகளாக வழங்க முடியாது. அது மட்டுமல்லாமல் வெல்லப்படும் பரிசுகளை கேளிக்கை விளையாட்டுகளை நடத்துபவர்களிடமே விற்கவும் முடியாது.
இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து 2023 பிப்ரவரி 6ஆம் தேதியே நடத்துநர்களிடம் தெரிவிக்கப்பட்டு அதற்குரிய மாற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.