அண்மை மாதங்களில் சிங்கப்பூரில் எலித் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டேங்ஸ் சந்தையில் இருக்கும் ஓர் உணவகத்தின் மேசையிலிருந்த உணவுத்தட்டில் இரண்டு உணவுக் கிண்ணங்களுக்கு அருகில் எலி ஒன்று இருந்த காணொளி பரவலாகப் பரவியது. அச்சம்பவம் நடந்த ஒரு மாதம் கழித்துச் சுவா சூ காங்கில் இருக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்கு வளாகத்தில் உள்ள உணவகத்தில் எலி ஒன்று பிடிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், எலிகளின் சிறுநீர் மூலம் வரவும் நுண்ணுயிரி தொற்றான ‘லெப்டோஸ்பிரோசிஸ்’ நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் கால்நடை மருத்துவர்கள் ஜனவரியில் தெரிவித்தனர். இது மனிதர்களையும் மிருகங்களையும் பாதிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மனிதர்களில், இந்நோய்த் தொற்று அதிகக் காய்ச்சல், தசை வலி போன்ற அறிகுறிகள் மிதமான நோய்த் தொற்றுக்கும் நுரையீரலில் இரத்தப்போக்கு, மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மிகவும் தீவிரமான நோய்த்தொற்றுக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஹவ்காங்கில் வசிக்கும் மக்கள், அவென்யூ 8இல் இருக்கும் கார் நிறுத்தத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எலித் தொல்லை இருப்பதாகப் புகார் கூறியுள்ளனர். அந்த எலிகள் தங்களுடைய கார்களின் விசைப்பொறிக் கம்பிகளைக் கடித்து சேதப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில், ஒவ்வொரு இரண்டு மாத கண்காணிப்பு சுழற்சியின் போது தீவின் பொது இடங்களில் கண்டறியப்பட்ட எலி வளைகளின் சராசரி எண்ணிக்கை முறையே 4,300 மற்றும் 3,900 ஆகும்.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் எலித் தொல்லை குறித்த புகார்கள் 25 விழுக்காடு அதிகரித்துள்ளன என்று பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் இவ்வாண்டு ஜனவரியில் தெரிவித்தன என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. எலிகள் அதிகரிப்புக்குப் பல காரணிகள் இருக்கின்றன.
அண்மை காலமாக சிங்கப்பூரில் நிலவும் வானிலை மாற்றம் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம் என ‘பெஸ்ட்பஸ்டர்ஸ்’ எனும் பூச்சிக் கட்டுப்பாடு நிறுவனத்தில் பணியாற்றும் திரு லீ கூறினார்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்த மழையை அவர் குறிப்பிட்டார்.
எலிகளைக் கண்டறிந்து அதைப் பிடிப்பதால் மட்டும் நாம் எலித் தொல்லையிலிருந்து விடுபட முடியாது என்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பூச்சி மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள், பயனுள்ள பூச்சி மருந்து தெளிப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் தான் நாம் இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் தெரிவித்தன.