கடந்த 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றம் புரிந்த 13 வயது சிறுவர், 2022ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை வெவ்வேறு சம்பவங்களில் மேலும் ஐந்து சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் குற்றங்களைப் புரிந்துள்ளார்.
குற்றம் நடைபெற்ற சமயத்தில் 12 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டிருந்த ஆறு வயது குறைந்த சிறுமிகளுக்கு எதிராக அவர் பாலியல் குற்றங்களைப் புரிந்துள்ளார்.
தற்போது 16 வயதாகும் அந்த இளைஞர், மானபங்கம், 16 வயதுக்குக் குறைந்த பெண்களுடன் பாலியல் உறவு கொண்டது உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை ஏப்ரல் 1ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
அந்த இளைஞர் 18 வயதுக்குக் குறைவானவர். எனவே, சிறுவர், இளையர் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுவதால் அவரது பெயரைக் குறிப்பிட முடியாது.
மேலும் பதினேழு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில்கொள்ளப்படும்.
முதலில் 2021, மார்ச் 28ஆம் தேதி பொதுவான நண்பர் மூலம் அப்போது 13 வயதாக இருந்த சிறுமியைச் சந்தித்தார். இருவரும் உறவில் இருக்க ஒத்துக்கொண்டனர். மறுநாள் சிறுமி வசிக்கும் அடுக்குமாடிக் கட்டடப் படிக்கட்டுகளில் அவர்கள் சந்தித்து, உறவுகொண்டனர். பின்னர் தனது அனுமதியின்றி, இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை அந்த இளைஞர் சமூக ஊடகத்தில் பதிவேற்றியதை அறிந்த சிறுமி அவருடன் சண்டையிட்டுப் பிரிந்தார்.
அதன்பிறகு அடுத்தடுத்து ஐந்து பெண்களிடம் மானபங்கம், பாலியல் உறவு குற்றங்களைப் புரிந்துள்ளார்.
நன்னடத்தை, சீர்திருத்தப் பயிற்சி இரண்டிற்கும் குற்றம் புரிந்தவர் ஏற்றவர்தானா என்பதை மதிப்பிடுவதற்கான அறிக்கைகளை ஏப்ரல் 1ஆம் தேதி நீதிமன்றம் கோரியது.
சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்படும் இளம் குற்றவாளிகள் பயிற்சிகள், ஆலோசனை ஆகியவற்றை உள்ளடக்கிய கண்டிப்பான விதிமுறையைப் பின்பற்றும் வகையில் ஒரு நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள்.
மே 27ஆம் தேதி இளைஞருக்குத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.