சிங்கப்பூர் சென்ற ஆண்டு (2023) புதிய நிறுவனங்களுக்கான முதலீடுகளை ஈர்ப்பதில் தென்கிழக்காசியாவில் முதலிடம் வகித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர், டீல்ஸ்டிரீட்ஏஷியா ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இத்தகைய முதலீடுகளில் 63.7 விழுக்காடு சிங்கப்பூரில் செய்யப்பட்டவை என்று அவ்வறிக்கை கூறியது. 2022ஆம் ஆண்டு 56.7 விழுக்காட்டு முதலீடுகளை சிங்கப்பூர் ஈர்த்தது.
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய நிறுவனங்கள் செழிப்படைந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆண்டு அடிப்படையில் இத்தகைய நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்கள் 31.4 விழுக்காடு அதிகரித்தன. ஆனால் அத்தகைய ஒப்பந்தங்களின் மதிப்பு 2023ல் 18.4 விழுக்காடு குறைந்து $2.07 பில்லியனாகப் பதிவானது.
இந்தப் புள்ளி விவரங்கள், இந்த வட்டாரத்தில் முதலீட்டுக்கும் புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் சிங்கப்பூர் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை தொடர்வதைக் காட்டுவதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கூறியது.
நிதி நெருக்கடி நிலவியபோதும் உலகளாவிய, வட்டார முதலீட்டாளர்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் மீது மிகுந்த ஆர்வம் காட்டுவதாக அறிக்கை தெரிவித்தது. அத்தகைய நிறுவனங்கள் வலுவான வர்த்தக அடிப்படைகள், புத்தாக்கத் தீர்வுகள், வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டிருப்பது அதற்குக் காரணம்.