அடுத்த இரு ஆண்டுகளில் சிங்கப்பூர் பொருளியல் வேகமாக வளர்ச்சியடையும் என ஏடிபி வங்கி ஏப்ரல் 11ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. நாட்டின் வலுவான ஏற்றுமதி திறன் இதற்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் அதே வேளையில் பணவீக்கம் குறையும் என்றும் அவ்வங்கியின் அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு 1.1 விழுக்காடாக இருந்த சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டு 2.4 விழுக்காடாக உயரும் எனப் பிலிப்பீன்ஸ் தலைநகரான மணிலாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஏடிபி வங்கி கூறியது.
மேலும், இவ்வாண்டு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 விழுக்காட்டிற்கும் 3 விழுக்காட்டிற்கும் இடையே வளர்ச்சி காணும் என சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு கணித்துள்ளது.
சிங்கப்பூரின் வளர்ச்சி இவ்வாண்டு 2.1 விழுக்காடாக இருக்கும் என அனைத்துலக பண நிதியம் (எம்டிஐ) முன்னுரைத்துள்ளது.
2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை முன்கூட்டியே மதிப்பீடு செய்து எம்டிஐ வரும் ஏப்ரல் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நாளில், சிங்கப்பூர் பண ஆணையமும் வெள்ளி கொள்கை நிலைப்பாடு குறித்துக் காலாண்டு அறிக்கையை வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
தீவின் உற்பத்தி வளர்ச்சி அனைத்துலக மின்னணு தேவையைப் பொறுத்து படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏடிபி வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
இவ்வாண்டு சூடுபிடிக்கும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2025ஆம் ஆண்டும் தொடரும் என்றும் அவ்வங்கி தெரிவித்தது.