இருநூறுக்கும் மேற்பட்ட கொப்புள்கொடி ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ய ஓராண்டு காலம் தேவைப்படும் என்று கார்ட்லைஃப் நிறுவனம் கூறுவது ‘முற்றிலும் நியாயமற்றது’ என்று அனைத்துலக ரத்த வங்கி நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
தொப்புள்கொடி ரத்த மாதிரிகளின் ஆற்றலையும் நம்பகத்தன்மையையும் பரிசோதிக்க ஆறு முதல் 10 வாரங்களே போதுமானவை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் தொப்புள்கொடி ரத்த மாதிரிகளை கார்ட்லைஃப் தனியார் நிறுவனம் சேமித்து வைக்கிறது.
அந்நிறுவனத்தின் ஐந்து வெவ்வேறு சேமிப்புக் கலன்களில் இருந்த முப்பது ரத்த மாதிரிகள் சுயேச்சையான மூன்றாம் தரப்பு சோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் அவை நம்பகத்தன்மை சோதனையில் தேறின.
அந்தக் கலன்களில் உள்ள கிட்டத்தட்ட 14,000 யூனிட் ரத்த மாதிரிகள் வெப்பமயமாதல் நிகழ்வுகளால் குறைந்த பாதிப்பை எதிர்நோக்குவதை அந்த முடிவு உணர்த்தியது.
ஆயினும், பரிசோதனை முடிவுகள் புள்ளிவிவர ரீதியில் முக்கியமானவை என்பதால், மேலும் 200 மாதிரிகளை மூன்றாம் தரப்பு பரிசோதனைக் கூடத்தில் சோதிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அந்தச் சோதனை முடிவுற ஒராண்டு காலம் ஆகும் என்று கார்ட்லைஃப் கூறுகிறது. அந்த அறிவிப்பு குழந்தைகளின் பெற்றோர்களிடையே கவலையை அதிகப்படுத்துவதாக உள்ளது. அவர்கள் ஏற்கெனவே 2023 நவம்பர் முதல் மனவேதனையில் உள்ளனர்.
கார்ட்லைஃப் நிறுவனத்திலுள்ள 22 தொப்புள்கொடி சேமிப்புக் கலன்களில் 7ன் வெப்பநிலை உகந்தநிலையில் இல்லாததால் அந்த நிறுவனம் விசாரிக்கப்படுவதாக 2023 நவம்பர் 30ஆம் தேதி சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, கார்ட்லைஃப் நிறுவனத்தின் ஓராண்டு அவகாசம் குறித்து மூன்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். 200 ரத்த மாதிரிகளைப் பரிசோதித்து முடிவைத் தெரிந்துகொள்ள அவ்வளவு காலம் தேவைப்படாது என்று அவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினர்.