பெர்ல்ஸ் ஹில் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு கட்டடங்கள் இடிக்கப்பட்டு, அங்கு புதிய குடியிருப்புக் கட்டடங்கள் அமைக்கப்படவிருக்கினறன. அந்தப் பகுதியில் அடுத்த பத்தாண்டுகளில் புதிதாக 6,000 வீடுகளைக் கட்டும் அரசாங்கத் திட்டத்தின் ஓர் அங்கம்தான் இது.
240 ஊட்ரம் ரோடு எனும் முகவரியில் தற்போது காலியாக உள்ள மலேசியா செல்வதற்கு தேவையான முன்னாள் சிங்கப்பூர் கடப்பிதழ் நிலையம் அவற்றில் ஒன்று. அது முன்பு மரண விசாரணை நீதிமன்றமாகவும் செயல்பட்டது.
மற்றொன்று, 175A சின் சுவீ ரோட்டில் அமைந்துள்ள முன்னாள் பெர்ல்ஸ் ஹில் பள்ளி. இவ்விரு இடங்களில் குடியிருப்பு வசதிகள் அமைக்கப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏப்ரல் 19ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட நகர மறுசீரமைப்பு ஆணையப் பெருந்திட்டத்தின் உத்தேச திருத்தத்தின்படி, அந்தப் பகுதியில் மூன்று குடியிருப்பு வசதிகளும் ஒரு வணிக, பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு வர்த்தக வசதியும் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மூன்றாவது குடியிருப்பு வசதி, சின் சுவீ ரோடும் ஊட்ரம் ரோடும் சந்திக்கும் பகுதியில் அமையும். அது நிலத்தடியில் அமைந்துள்ள ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையத்தின் தரைப்பகுதியாகும்.
பெர்ல்ஸ் ஹில் பகுதியில் மூன்று குடியிருப்பு வசதிகளுடன் கலப்பு பயன்பாட்டு வசதிகளும் அமைக்கப்படும் என்று ஆணையத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது. பொது, தனியார் குடியிருப்புக் கட்டடங்களுடன் சமூகத்தை மையமாகக்கொண்ட அக்கம்பக்க வசதிகள் அங்கு அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அங்கு இரண்டு தனியார் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. முன்னாள் பெல்ர்ஸ் பேங்க் அடுக்குமாடி வீடுகள் அமைந்திருந்த நிலத்தில் 774 வீடுகள் கொண்ட ‘ஒன் பெல்ர்ஸ் பேங்க்’ அமையும். முன்னாள் பெர்ல்ஸ் ஹில் பள்ளி அமைந்திருந்த நிலத்தில் 396 வீடுகளைக் கொண்ட ‘தி லேண்ட்மார்க்’ அடுக்குமாடி குடியிருப்பும் அமையும்.
240 ஊட்ரம் ரோட்டில், பொதுப் பணித் துறை தனது கட்டுமானத்தை முடித்தவுடன், 1956 செம்டம்பரில் செயல்படத் தொடங்கியது மரண விசாரணை நீதிமன்றம். பின்னர் 1975ல் எண் 1, ஹாவ்லாக் ரோட்டில் புதிதாகக் கட்டப்பட்ட கீழ் நீதிமன்றக் கட்டடத்துக்கு மரண விசாரணை நீதிமன்றம் இடம் மாறியது.
பின்னர் அந்தக் கட்டடத்தை 1976 ஜூலையிலிருந்து குடிநுழைவுத் துறை எடுத்துக்கொண்டது. அங்கு சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பயணம் செய்வதற்கான கட்டுப்படுத்தப்பட்ட கடப்பிதழ் நிலையம் நிறுவப்பட்டது.
அனைத்துலக கடப்பிதழைப் பெற அதிகமானோர் விண்ணப்பிக்கும் பட்சத்தில், சிங்கப்பூரின் கட்டுப்படுத்தப்பட்ட கடப்பிதழுக்கான விண்ணப்பங்கள் குறைந்தன. 1995ல், சவுத் பிரிட்ஜ் ரோட்டில் இருந்த, தற்போது இடிக்கப்பட்ட பிடேம்கோ செண்டருக்கு அந்தக் கடப்பிதழ் நிலையம் இடம் மாறியது.
அதன் பின்னர் 240 ஊட்ரம் ரோடு கட்டடத்தில் சூப்பர்லேண்ட் பாலர்பள்ளி உட்பட மேலும் பல பாலர் பள்ளிகள் செயல்பட்டன. 2023 இறுதியில் அந்தக் கட்டடத்துக்கான குத்தகை காலம் முடிந்தவுடன் அந்த இடம் இப்போது காலியாக உள்ளது.
175A சின் சுவீ ரோட்டில் 1971 முதல் டிசம்பர் 2001 வரை செயல்பட்ட 120 ஆண்டு பழமை வாய்ந்த பெர்ல்ஸ் ஹில் பள்ளி தனது கதவுகளை மூடிய பின், அந்த இடத்தில் ‘ஹோட்டல் ரே’ தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் உள்ள பழைமையான கட்டடங்களில் காலக்கெடு அவ்வப்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் மறுமேம்பாட்டுக்கு அந்த இடங்கள் தயாரானவுடன் அது குறித்து அறிவிக்கப்படும் என்று ஆணையம் விவரித்தது.
195 பெர்ல்ஸ் ஹில் டெரசில் உள்ள இடத்தில் ‘இன்டி ஆர்ட்ஸ் அண்ட் லைஃப்ஸ்டைல்’ கலைக்கூட வளாகம் செயல்படுகிறது. அதன் குத்தகை காலம் 2025 மார்ச்சுடன் முடிவடைகிறது. ஆனால் அந்தக் கலைக்கூட வளாகத்தில் வாடகைக்கு செயல்படும் அமைப்புகள் தங்களின் குத்தகை காலத்தை நீடிக்க அரசாங்கத்திடம் விண்ணிப்பித்துள்ளன.