44 குடியிருப்புத் திட்டங்களுக்கு ‘ஏபிஎஸ்டி’ எனும் கூடுதல் முத்திரை வரிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அந்தக் குடியிருப்புகளில் இன்னும் விற்கப்படாத வீடுகளை விற்க கூடுதல் நேரம் தரும் நோக்குடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தக் குடியிருப்புகளில் உள்ள வீடுகள் அனைத்தையும் விற்பனை செய்ய முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு 2021ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்திற்குள் இருந்தது.
காலக்கெடு நீட்டிப்புடன் இந்தக் குடியிருப்புகளுக்கு கொவிட்-19 தற்காலிக நிவாரண நடவடிக்கைகளின்கீழ் மற்ற நீட்டிப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக திரு வோங் ஏப்ரல் 2ல் தெரிவித்தார்.
கஸ்கெடன் ரிசர்வ் சொகுசு கூட்டுரிமைக் குடியிருப்புக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு நீட்டிப்பு குறித்து பொத்தோங் பாசிர் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தோ யி பின், செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் சுவா ஆகியோர் எழுப்பியிருந்த கேள்விகளுக்குத் துணைப் பிரதமர் வோங் பதிலளித்தார்.
கஸ்கெடன் ரிசர்வ் கூட்டுரிமைக் குடியிருப்பு 192 வீடுகளைக் கொண்டது.
2023ஆம் ஆண்டில் இன்னும் விற்கப்படாத 180 வீடுகளை விற்பதற்கான காலக்கெடு 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மார்ச் 8ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
காலக்கெடு நீட்டிப்புக்கு கோரிக்கை விடுத்து அந்த 44 குடியிருப்புத் திட்டங்களின் மேம்பாட்டாளர்கள் சமர்ப்பித்த மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக திரு வோங் ஏப்ரல் 2ஆம் தேதியன்று தெரிவித்தார்.
தற்போது நடப்பில் உள்ள விதிமுறையின்கீழ், குடியிருப்புத் திட்டங்களுக்காக சொத்து மேம்பாட்டாளர்கள் நிலம் வாங்கும்போது 40 விழுக்காடு ‘ஏபிஎஸ்டி’ முத்திரை வரி செலுத்த வேண்டும்.
நிலத்தை வாங்கி ஐந்து ஆண்டுகளுக்கும் அனைத்து வீடுகளையும் விற்பனை செய்துவிட்டால் அந்த 40 விழுக்காடு ‘ஏபிஎஸ்டி’ முத்திரை வரியில் 35 விழுக்காடு அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்.