பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த தகவல்களை சிங்கப்பூரும் எஸ்டோனியாவும் பகிர்ந்துகொள்ளலாம் என்று எஸ்டோனியாவின் கல்வி, ஆய்வு அமைச்சர் திருவாட்டி கிறிஸ்டினா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் முதல்முறையாக ஏற்று நடத்தும் ஆசிரியர் பணி தொடர்பான அனைத்துலக மாநாட்டில் திருவாட்டி கல்லாஸ் கலந்துகொண்டார்.
“செயற்கை நுண்ணறிவுக்கு சிங்கப்பூரிலும் எஸ்டோனியாவிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அதில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள இருநாடுகளும் விரும்புகின்றன என நம்புகிறேன்,” என்றார் அவர்.
பகுப்பாய்வு, பல்வேறு கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பு போன்ற 21ஆம் நாற்றாண்டுத் திறன்களை மக்களுக்குக் கற்பிக்கும் அவசியத்தை இருநாடுகளும் நன்கு புரிந்துவைத்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
கல்வி, ஆய்வு அமைச்சராக 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி ஏற்ற திருவாட்டி கல்லாஸ், சிங்கப்பூரிலும் எஸ்டோனியாவிலும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைச் சுட்டினார்.
வாழ்வில் வெற்றி பெற கல்வி மிகவும் அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
“சிங்கப்பூரும் எஸ்டோனியாவும் சிறிய நாடுகள். முன்பு ஏழை நாடுகளாக இருந்தவை. இருநாடுகளிலும் இயற்கை வளங்கள் இல்லை. கல்விக்கு இரு நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. சிங்கப்பூரர்களைப் போல உச்ச இலக்கிற்கு குறிவைத்து கல்வியில் சிறக்க கடுமையாக உழைக்கும் மனப்போக்கு எஸ்டோனிய மக்களுக்கும் உள்ளது,” என்று திருவாட்டி கல்லாஸ் கூறினார்.
“பள்ளிகளுக்கும் கல்வித்துறைக்கும் செயற்கை நுண்ணறிவு அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. அவற்றைப் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பள்ளி நடவடிக்கைகள், கற்பித்தல் முறை ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவை நடைமுறைப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில் மாணவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது,” என்றார் அமைச்சர் கல்லாஸ்.