கொவிட்-19 கிருமிப்பரவல் தொடர்பான தனிநபர் தொடர்பு தடமறிதல் தரவுகள் அனைத்தும் ‘டிரேஸ்டுகெதர்’, ‘சேஃப்என்ட்ரி’ மின்னிலக்கச் செயல்முறைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
அவற்றின் செயல்பாடுகள் இனி தொடராது என்று பிப்ரவரி ஐந்தாம் தேதி அறிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு மே மாதம் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பான ‘டிரேஸ்டுகெதர்’ தரவுகளைத் தவிர, பிப்ரவரி 1ஆம் தேதி நிலவரப்படி, மற்ற தரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவார்ந்த தேசக் குழுமம் கூறியது.
கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த இரண்டு செயலிகளும் அதிகாரபூர்வ கைபேசி ‘ஆப் ஸ்டோர்’லிருந்து நீக்கப்பட்டுள்ளன.
கவலைக்குரிய புதிய வகை கிருமி என்றால், உடனடியான உருவாக்கத்திற்காகவும் பதிவுக்காகவும் முன்னதாக வைக்கப்பட்டிருந்த விவரங்களும் நீக்கப்பட்டுள்ளன.
அதோடு, அந்தச் செயல்முறைகளுக்குத் துணையாக இருந்த மின்னிலக்க உள்கட்டமைப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதோடு, இரண்டு இணையத்தளங்களும் மூடப்பட்டன.
கொலை வழக்கு தொடர்பான தரவுகளைப் பொறுத்தவரை, காவல்துறை அவற்றைக் காலவரையின்றி வைத்திருக்கும்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங்குடன் கலந்தாலோசித்த பிறகு, மின்னிலக்க அரசாங்க, பொதுத் துறை தரவு நிர்வாகத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரும், மூத்த அமைச்சருமான டியோ சீ ஹியன், கொவிட்-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தவோ தவிர்க்கவோ இந்த மின்னிலக்கத் தொடர்பு தடமறிதல் செயல்முறைகள் ஜனவரி 5ஆம் தேதிக்குப் பிறகு தேவைப்படமாட்டா என்று உறுதிசெய்தார்.
‘டிரேஸ்டுகெதர்’, ‘சேஃப்என்ட்ரி’ (வர்த்தகம்) செயலிகளை நீக்க விரும்புவோர் அவ்வாறு செய்துகொள்ளலாம்.
தீவு முழுவதிலும் உள்ள எந்தவொரு ‘மூன்றில் ஒன்று’ மின் குப்பைத்தொட்டிகளில் பொதுமக்கள் ‘டிரேஸ்டுகெதர்’ கருவியை மறுபயனீடு செய்யலாம்.
“கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான நமது போராட்டத்தில், ‘டிரேஸ்டுகெதர்’ திட்டத்திற்கும், நமது மின்னிலக்கத் தொடர்பு தடமறிதல் முயற்சிகளுக்கும் ஆதரவு கொடுத்த பொதுமக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அறிவார்ந்த தேசக் குழுமம் கூறியது.