பிரீத்தி நாயருக்கும் அவரது சகோதரர் சுபாஷுக்கும் இந்த ஆண்டின் தீபாவளி தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. E-Pay விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட ‘பழுப்பு நிற முகம்’ எனும் சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டிருந்த பிரீத்தி, சுபாஷுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியன்று போலிசார் எச்சரிக்கை விடுத்தனர்.
தற்போது தீபாவளியைக் கருப்பொருளாகக் கொண்டு இருவரும் காணொளி வெளியிட்டுள்ளனர்.
“தீபாவளிக் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு காணொளி ஒன்றை நாங்கள் வெளியிட்டுள்ளோம். முறுக்கு சுடும் முறையைக் காணொளி காட்டுகிறது,” என்று சமூக ஊடகத்தில் பீரித்திபிலிஸ் என்றழைக்கப்படும் பிரீத்தி கூறினார்.
அண்ணனும் தங்கையும் வெளியிட்டுள்ள இந்தப் புதிய காணொளிக்குப் பிரபல தென்னிந்திய பலகாரமான ‘முறுக்கு’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் மாவு பிசைந்து முறுக்கு சுடும் முறையை வர்ணித்து இருவரும் பாடியுள்ளனர்.
“ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி யை முன்னிட்டு எங்கள் தாயார் முறுக்கு சுடுவார். அவருக்கு நாங்கள் உதவி செய்வோம். இதையே ஏன் காணொளியாக வெளியிடக்கூடாது என்ற யோசனை எங்களுக்குத் தோன்றியது,” என்றார் 25 வயது பிரீத்தி.
இந்தக் காணொளி கடந்த மாதம் 27ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
பதிவேற்றம் செய்யப்பட்டு பத்து நாட்களில் ஃபேஸ்புக்கில் மட்டும் அதை 48,000 பேர் கண்டு களித்
தனர். காணொளி குறித்து பல இன மக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன.
தீபாவளிக் கொண்டாட்டம் தங்கள் குடும்பத்துக்கு முக்கியமானஒன்று என பிரீத்தியும் 27 வயது சுபாஷும் தெரிவித்தனர்.
“எங்கள் வீட்டில் தீபாவளி பண்டிகை பல கலாசாரங்களைக் கொண்டாடும் ஒரு விழாவாக இருந்து வருகிறது. தீபாவளியன்று எங்கள் வீட்டிற்குப் பல நாடுகளைச் சேர்ந்த நண்பர்களும் பல்வேறு தரப்பினரும் வருகின்றனர். அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவோம்,” என்றார் பிரீத்தி.
“தீபாவளி என்று சொன்னாலே எனக்கு என் குடும்பம்தான் நினைவுக்கு வரும். அதற்கு முன்பு அந்த ஆண்டில் என்ன நிகழ்ந்திருந்தாலும் அவற்றை மறுந்து மகிழ்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துகிறது தீபாவளி. நிறைய உணவு
வகைகள், கொண்டாட்டங்களுடன் குதூகலத்தில் திளைத்திருக்கும் நன்னாள்.
“தீபாவளியை முன்னிட்டு எங்கள் நண்பர்களை வீட்டிற்கு வர
வழைப்போம். சமையலை அம்மா பார்த்துக்கொள்வார். அவரது சமையல் அற்புதமாக இருக்கும்.
“தீபாவளிக்கு முதல் நாள் இரவு நாங்கள் தூங்குவதில்லை. விடிய விடிய கண்விழித்து தீபாவளிக் கொண்டாட்டத்துக்காக தேவையானவற்றைத் தயார் செய்வோம். தீபாவளியன்று ஏறத்தாழ 100 பேர் எங்கள் வீட்டிற்கு வருவர்,” என்று சுபாஷ் கூறினார்.
பிரீத்தி-சுபாஷின் தாயார் திருவாட்டி செல்லம் நாயர் தீபாவளிக்கு முதல் நாள் இரவு தூங்குவதே இல்லை. தமது பிள்ளைகளுக்குப் பிடித்த உணவு வகைகளை ஆசை ஆசையாக சமைப்பார்.
“புஃபே முறையில் படைக்கப்படும் அனைத்து உணவுவகைகளையும் அவர் சமைப்பார்.
“அதுமட்டுமல்லாது, பலகாரங்
களையும் தயாரிப்பார். தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போது பலகாரங்கள் தயாரிப்பதை அவர் தொடங்கிவிடுவார்,” என்றார் சுபாஷ். தீபாவளிக்காக என் அம்மா கிட்டத்தட்ட 500 முறுக்குகளைச் சுடுவார். ‘சுஜி’ போன்ற பல்வேறு பலகாரங்களையும் தயாரிப்பார்.
“அவர் தயாரிக்கும் பலகாரங்களில் பெரும்பாலானவை இந்தியப் பலகாரங்கள் அல்ல. ஆனால் தீபாவளிக்காக இவைதான் எங்கள் வீட்டில் வழக்கமாக தயாரிக்கப்படும் பலகாரங்கள். இவையெல்லாம் இந்தியப் பலகாரங்கள் என எங்கள் நண்பர்கள் நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.
“நாங்கள் சுடும் முறுக்குகளை அனைவருக்கும் கொடுப்போம். நினைவில் வருபவர்களுக்கெல்லாம் என் அம்மா முறுக்குகளைப் பொட்டலம் கட்டுவார். நாங்கள் வசிக்கும் கட்டடத்தைத் துப்புரவு செய்யும் ஊழியர்களுக்கும் பேரங்காடிகளில் பணிபுரியும் காசாளர்களுக்கும் முறுக்குகளை அவர் கொடுப்பார்,” என்று பீரித்தி கூறினார்.
பதின்மவயதில் தங்களுக்கு ஏற்பட்ட சல சவால்களை மறந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட தீபாவளி ஒரு முக்கிய பண்டிகையாக பிரீத்திக்கும் சுபாஷுக்கும் இருக்கிறது. பிரீத்திக்கு 15 வயதாக இருந்தபோது அவரது தந்தை அவர்களை விட்டுச் சென்றார்.
தனி ஆளாக இருந்து பிரீத்தியையும் சுபாஷையும் அவர்களது தாயார் வளர்த்தார். குடும்பத்தைக் கட்டிக்காக்க பல பகுதிநேர வேலை களைச் செய்தார் சுபாஷ். அவர்
களது குடும்பம் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இடம் மாறி
உள்ளது. பல்வேறு நிதியுதவித் திட்டங்களைப் பயன்படுத்தி பிரீத்தியும் சுபாஷும் கல்வி பயின்றனர்.
‘முறுக்கு’ காணொளிக்கு முன்பு ஒப்பனை செய்துகொள்ளும் முறை பற்றி பிரீத்தி காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் முதல்முறையாக அனைவரின் முன்னால் தமிழில் பேசியுள்ளார்.
உடன்பிறப்புகள் இருவரும் பள்ளியில் சீனமொழியை இரண்டாம் மொழியாகப் பயின்றவர்கள்.
“நாங்கள் பள்ளியில் சீனமொழி பயின்றதற்கான காரணம் எனக்கு முதலில் தெரியவில்லை. அதை அப்படியே ஏற்றுக்கொண்டோம்.
“இதுகுறித்து பிறகு எங்கள் பெற்றோரிடம் கேட்டோம். சீனமொழி பயின்றால் எதிர்காலத்தில் அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் கூறினர்,” என்றார் பிரீத்தி.
ஹுவா சோங் கல்விக் கழகத்தில் உயர் சீனமொழியைப் பாடமாக படித்தார் சுபாஷ். அதையடுத்து, யேல்-என்யுஎஸ் கல்லூரியில் சேர்ந்து நகரவியலில் இளங்கலைப் பட்டத்தை அவர் பெற்றார்.
ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளியில் பயின்ற பிரீத்தி, அதனை அடுத்து தமது அண்ணனைப் போலவே நியூ டவுன் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றார். அதன் பிறகு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மக்கள் தொடர்பு துறையில் அவர் படித்தார். அங்கு அவர் காணொளி தொகுப்பு போன்ற திறன்களைக் கற்றுக்கொண்டார்.
E-Pay விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொளி வெளியிட்டதை அடுத்து, யாரும் தங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை என்று பிரீ்த்தியும் சுபாஷும் தெரிவித்தனர்.
“வெளியே செல்லும்போதெல்லாம் எங்களைப் பார்த்து பலர் நட்புணர்வுடன் தலையசைப்பார்கள். எங்கள் நிலைப்பாட்டுக்கு அவர்கள் தரும் அங்கீகாரமாக நான் கருதுகிறேன்,” என்றார் சுபாஷ்.