மணவாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை மணவிலக்கு வரை வந்து,ஈராண்டுகளுக்குமுன் அதற்கான சட்ட நடைமுறைகள் தொடங்கின. மார்பகப் புற்றுநோய் நான்காம் கட்டத்தில் இருப்பது கடந்த ஆண்டு தெரியவந்தது. தாங்க முடியாத மனஉளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்ள இருமுறை முயற்சி செய்தார். அதிலிருந்து மீண்டு வர, அடுத்த அடியாக கொவிட்-19 நோய்ப் பரவல் நெருக்கடியால் ஊதியம் குறைக்கப்பட்டது.
இப்படி உடலாலும் உள்ளத்தாலும் பல வலிகளையும் பொருளியல் சிக்கல்களையும் எதிர்கொண்டு வந்தாலும், தான் வாழும் நாளில் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் விதமாக, மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் திருவாட்டி புவனேஸ்வரி கருணாநிதி, 47.
மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் செயலாளராக, உணவு விநியோகத் திட்டம், இணையம் மூலம் தீபாவளி நிகழ்ச்சி, அன்பளிப்புப் பை விநியோகம், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு 'மார்சிலிங்கேர்' திட்டத்தின்கீழ் மளிகைப் பொருள்கள் விநியோகம், கரவோக்கே எனும் பாடல் குழு, நடனக் குழுக்களுக்குப் பொறுப்பாளர் என பல பொறுப்புகளை ஏற்றும் திட்டங்களில் பங்கேற்றும் வருகிறார்.
"என்னைவிட பெரும் சிரமங்களைச் சுமப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்தால் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே நம் மனத்தைக் குளிர வைக்கும்," என்ற திருவாட்டி புவனேஸ்வரியின் குரலில் இருந்த உற்சாகமும் துடிப்பும் வியக்க வைத்தது.
சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் இவருக்கு முற்றிய நிலையில் புற்றுநோய் இருப்பதை உறுதிசெய்த மருத்துவர்கள், "இன்னும் ஓராண்டுதான் உயிரோடு இருப்பீர்கள்," எனக் கூறியதைக் கேட்டு இவருக்கு வாழ்க்கையே இருண்டுவிட்டது.
உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மனமுடைந்துபோன இவரை, மனநல ஆலோசகர்களும் நண்பர்களும் மீட்டெடுத்தனர். அதன்பின் நம்பிக்கையுடன் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள இவர் முடிவெடுத்தார்.
'உன்னைச் சுற்றி பல நண்பர்களை வைத்துக்கொள்' என்று தம் ஆலோசகர் சொன்ன சொற்களை உறுதியாகப் பற்றிக்கொண்டார்.
நண்பர்களை வீட்டிற்கு அழைத்து ஒன்றுகூடலை நடத்தினார். இவரது ஆலோசகரும் பங்கேற்ற அந்நிகழ்வில், இவர் வயதை ஒத்த பெண்களே பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி பகிரும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்ட அந்த நட்பு வட்டம், இவரை மெல்ல மீட்டெடுத்தது.
சவால்களை எதிர்கொண்டு வந்தவருக்கு கொவிட்-19 கிருமிப் பரவல் மீண்டும் சோதனையானது.
பாலர் கல்வித் துறை பயிற்சிப் பிரிவில் நிர்வாகப் பணியாளராக வேலை செய்யும் திருவாட்டி புவனேஸ்வரிக்கு கடந்த மே மாதம் முதல் 40% சம்பளம் குறைக்கப்பட்டது. இதனால் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறினார்.
இவ்வாண்டு தொடக்கத்தில்தான் 26 வயதாகும் இவரது ஒரே மகன் விக்னேஷ்வரன் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். அதற்கு முன்புவரை வீட்டில் வருவாய் ஈட்டியவர் இவர் மட்டும்தான்.
இத்தனை சிரமங்களுக்கு இடையில் தம் மகன்தான் தமக்கு உறுதுணையாகவும் ஊன்றுகோலாகவும் இருப்பதாக திருவாட்டி புவனேஸ்வரி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மக்கள் பணியில் கவனம்
உதவிநிதி, நண்பர்களின் உதவி மூலம் தன் வாழ்க்கையுடன் போராடி வந்த இவரது கவனத்தைத் திசைதிருப்பினர் 'நியூ லைஃப்' சமூக சேவை அமைப்பின் ஆலோசகர்கள்.
சமூகத்திற்குச் சேவையாற்றுவதில் இயல்பாகவே நாட்டமுள்ள திருவாட்டி புவனேஸ்வரி, முழுமையாக மக்களுக்காகப் பணியாற்றத் தொடங்கினார்.
ஈசூன் பகுதியில் வசித்தபோது நீ சூன் கிழக்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவில் சேவையாற்றிய அவர், கடந்த 2011ல் மார்சிலிங் வட்டாரத்திற்குக் குடிபெயர்ந்த பிறகு, மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவில் தொண்டாற்றி வருகிறார்.
"தன்னம்பிக்கையை எவரும் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிடக்கூடாது," என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இவர்.
"புற்றுநோய் நான்காம் கட்டத்தில் இருப்பது உறுதிசெய்யப்பட்டவுடன் எல்லாமே என்னை விட்டுப்போனது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் நண்பர்கள் மிகுந்த நம்பிக்கை அளித்தார்கள். அதுவே மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை என்னுள் விதைத்தது," என்றார் திருவாட்டி புவனேஸ்வரி.
"கீமோதெரபி செய்தவர்கள் சோர்வாக இருப்பார்கள் என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நான் புத்துணர்ச்சி பெற்றுவிடுவேன். வாரந்தோறும் வியாழக் கிழமை சிகிச்சைக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை மருத்துவ விடுப்பில் இருப்பேன். வார இறுதி நாள்களில் சமூக சேவைக்குப் புறப்பட்டுவிடுவேன்," என்றார் அவர்.
சென்ற ஆண்டு தொடங்கிய 'கீமோதெரபி' சிகிச்சை பலன் தராததால் தற்போது மாத்திரை மூலமே புற்றுநோயைக் கட்டுப்படுத்தி வருகிறார்.
புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை மக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும் என விரும்பும் திருவாட்டி புவனேஸ்வரி, இந்திய சமூகத்தினர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றார்.
"நான் பாதிக்கப்பட்டபோது எவரிடமும் நான் கேட்டு அறிய முடியவில்லை. அனைத்தையுமே தனி ஆளாக இருந்தே கற்றேன். என் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது," என்கிறார் இவர்.
"எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியம் இல்லை. வாழும் காலத்தில் பிறர்க்கு என்ன நன்மை செய்தோம் என்பதே முக்கியம்," என்று இவர் சொன்னார்.
"புற்றுநோயும் கொவிட்-19 தொற்றும் எனது முடியையும் பணத்தையும் எடுத்திருக்கலாம். ஆனால் என் மகிழ்ச்சி என்னிடம்தான் இருக்கிறது," என்று கூறிய அவர், பலகாரமோ மத்தாப்புகளோ புத்தாடைகளோ குறைவாக இருந்தால் என்ன, மனம் நிறைந்த தீபாவளியைக் கொண்டாடுவோம் என உற்சாகமாகச் சொல்கிறார்.