‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனும் தங்களது நம்பிக்கைக்கு ஏற்ப, ஓராண்டிற்கு மேலாக மனிதகுலத்தைப் பாடாய்ப்படுத்தி வரும் கொவிட்-19 தொற்றுக்கு அழிவுகாலமாக, தங்களுக்கு விடிவுகாலமாக இவ்வாண்டு பொங்கல் திருநாள் அமையும் எனத் தமிழ்மக்கள் அனைவரும் உறுதியாக நம்புகின்றனர்.
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று தன் பாட்டிலும் உழவுத்தொழிலுக்கு முதலிடம் தந்தார் மகாகவி பாரதி. உழவில்லையேல் உணவில்லை. இதை உணர்ந்தே, உழவர்கள் மட்டுமின்றி தமிழர்கள் அனைவரும் உழவுத்தொழிலைப் போற்றும் விதமாக பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், சிங்கப்பூரிலும் ஆண்டுதோறும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டும். குறிப்பாக, லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் சாலையில் கட்டப்படும் ஒளி சிந்தும் வண்ணத் தோரணங்கள் காண்போரிடத்தில் பொங்கல் திருநாள் உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்யும்.
ஆனால், காலங்காலமாகக் கொண்டாடப்பட்டு வரும் அந்த நன்னாளை இம்முறை கொவிட்-19 நோய்ப் பரவல் கட்டுப்பாடுகளால் கோலாகலமாகக் கொண்டாட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருப்பினும், பிரம்மாண்டமாக இல்லாவிடினும் இம்மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமையன்று வரும் பொங்கல் திருநாளைக் கொண்டாட இம்முறை வித்தியாசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லிட்டில் இந்தியா சென்று பொங்கல் திருநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்தும் பொங்கல் வர்த்தகத்தில் மும்முரமாக இருக்கும் வணிகர்கள், பொருள்கள் வாங்க விரைந்த மக்கள் எனப் பலதரப்பினரின் கருத்துகளையும் அறிந்து வந்தது தமிழ் முரசு.
சவாலாக இருக்கும் பொருள்கள் இறக்குமதி
“கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இந்தியாவில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றை இறக்குமதி செய்வது கடினமாக இருக்கிறது. பொருள்களைக் கொண்டு வருவதும் சவாலாக இருக்கிறது,” என்று ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாளைக்குள் இந்தியாவில் இருந்து பொருள்கள் சிங்கப்பூருக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வானூர்திக் கட்டணம் பலமடங்கு கூடிவிட்டதால் இம்முறை பொருள்களின் விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்றிக்கொண்ட உற்சாகம்
காய்கறி வாங்குவதற்காக லிட்டில் இந்தியாவிற்கு வந்திருந்த திருமதி சாந்திக்குப் பொங்கல் பானைகளைப் பார்த்ததும் கொண்டாட்ட உற்சாகம் தொற்றிக்கொண்டது.
“ஒவ்வோர் ஆண்டும் விடுமுறை இல்லாவிட்டாலும் கிடைக்கும் நேரத்தில் குடும்பத்துடன் சேர்ந்து பொங்கலிட்டுக் கொண்டாடுவோம். எப்போதும்போல இவ்வாண்டிலும் பொங்கல் திருநாளன்று அதிகாலையில் எழுந்து, பொங்கல் வைத்து, கதிரவனுக்கு நன்றி கூறி, கணவருடனும் இரு பிள்ளைகளுடனும் கொண்டாடவிருக்கிறேன்,” என்றார் 53 வயதான திருமதி சாந்தி.
அடுத்த வாரம் கணவருடன் வந்து அரிசி, மஞ்சள், கரும்பு, பூ போன்றவற்றை வாங்கிச் செல்ல இருப்பதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு பொங்கல் திருநாளின்போதும் லிட்டில் இந்தியாவில் அமைக்கப்படும் மாட்டுத் தொழுவத்தைப் பார்க்கத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் திருமதி ரா.ஜெயா, 40.
“சிங்கப்பூரில் வேளாண்மை செய்யப்படுவதில்லை. ஆனாலும், உழவும் உழவர்களும் இல்லை எனில், நம்மில் எவருக்கும் உணவு கிடைக்காது. உழவுத்தொழிலுக்கு மிக முக்கியமாக விளங்கும் காளை மாடுகளின், பால் தரும் பசுக்களின் முக்கியத்துவத்தை நகர்ப்புறங்களில் வாழ்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகவே என் மகன்கள் இருவரையும் ஆண்டுதோறும் பொங்கல் திருநாள் சமயத்தில் லிட்டில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்வேன்,” என்று திருமதி ஜெயா சொன்னார்.
‘தமிழர் திருநாள்’
சமய வேறுபாடின்றி தமிழர்கள் என ஒன்றிணையும் நாளாக பொங்கலன்று தமிழர் திருநாள் கொண்டாடப்படுகிறது என்றார் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன்.
“சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் 1952ஆம் ஆண்டில் அன்றைய சமூகத் தலைவர் கோ. சாரங்கபாணியால் தமிழர் திருநாள் இங்கு தொடங்கப்பட்டது,” என்று டாக்டர் கோவிந்தன் நினைவுகூர்ந்தார்.
பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் தொடர்ந்து 21வது ஆண்டாக பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஆயினும், கொவிட்-19 பரவல் காரணமாக இவ்வாண்டு கொண்டாட்டம் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு இணங்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் அடங்கிய ஒன்றாக இருக்கும்.
“கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொண்டாட்டங்களின் பிரம்மாண்டமும் அவற்றில் கலந்துகொள்வோர் எண்ணிக்கையும் குறைவாக இருப்பினும் பொங்கல் திருநாள் உணர்வும் உற்சாகமும் எள்ளளவும் குறையாது,” என்றார் ‘லிஷா’ தலைவர் சி.சங்கரநாதன்.
‘லிஷா’ தலைமைப் பொறுப்பை ஏற்றபின் திரு சங்கரநாதன் வழிநடத்தவிருக்கும் முதல் பொங்கல் கொண்டாட்டம் இது.
“சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டங்கள் சற்று வேறுபட்டது. பிற இனத்தவரையும் சேர்த்துக்கொண்டு, ஒருங்கிணைந்து கொண்டாடுகிறோம். உணவு உண்ணும் ஒவ்வொருவரும் பொங்கல் திருநாளைக் கொண்டாடலாம். இது இனம், சமயம் சார்ந்ததல்ல என்பது என் கருத்து,” என்றார் அவர்.
சிறியவர் முதல் பெரியவர் வரை, பல இனத்தவரும் கலந்துகொண்டு மகிழும்படி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ‘லிஷா’ ஏற்பாடு செய்துள்ளது.
“ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கென மாட்டுத் தொழுவச் சுற்றுலா போன்ற பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாண்டிலும் அது தொடரும். தமிழர் திருநாளான பொங்கல் குறித்து இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என நம்புகிறேன்,” என்றார் திரு சங்கரநாதன்.
தீபாவளிப் பண்டிகையை கொரோனா தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் கொண்டாடியது போலவே, இப்போது பொங்கல் கொண்டாட்டங்களும் பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் மாறுபட்ட ஒன்றாக இருக்கப் போகிறது என்றார் ‘லிஷா’ ஆலோசகர் திரு ராஜ்குமார் சந்திரா.
இம்மாத இறுதி வரை நீடிக்கும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் பொதுமக்களையும் வர்த்தகர்களையும் உற்சாகத்துடன் வைத்திருக்கும் என்பதில் ஐயம்இல்லை.
தாயகம் செல்ல முடியாததால் விடுதியிலேயே கொண்டாட ஏற்பாடு
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள், இன, சமயம் பாராது எல்லாராலும் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகை, பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அதற்கு மறுநாள் காணும் பொங்கல் என நான்கு நாள்கள் கோலாகல கொண்டாட்டம் இடம்பெறும்.
அந்நன்னாளில் குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதற்காக இங்கு வேலை செய்து வரும் தமிழக ஊழியர்கள் பலரும் சொந்த ஊர் திரும்புவர். ஆனால், இம்முறை கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக அவர்கள் இங்கேயே பொங்கல் திருநாளைக் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
“ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளுக்குச் சொந்த ஊர் செல்ல வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் ‘தி லியோ’ வெளிநாட்டு ஊழியர்கள் விடுதியிலேயே பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். இவ்வாண்டும் அதேபோல பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக விடுதி நிர்வாகி கூறியிருக்கிறார். அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்,” என்றார் எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வரும் திரு வி.பிரபாகரன், 31.
சொந்த ஊரையும் குடும்பங்களையும் விட்டு வெளிநாட்டிற்கு வந்து வேலை செய்யும் தம்மைப் போன்றோருக்கு இதுபோன்ற சிறு கொண்டாட்டங்களே ஆறுதல் தருவதாக உள்ளன என்று திரு பிரபாகரன் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டு பலருக்கும் சவால்மிக்கதாக இருந்த நிலையில், இவ்வாண்டில் அனைவருக்கும் நல்ல வழி பிறக்கும் எனும் நேர்மறைச் சிந்தனையுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
கடந்த மூன்றாண்டுகளாக தமிழகம் சென்று, குடும்பத்தினருடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார் பொங்கோல் பிபிடி விடுதியில் தங்கியிருக்கும் 29 வயது திரு கர்ணன் ராஜா.
ஆனால், இம்முறை பொங்கல் திருநாளுக்குச் சொந்த ஊர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தமக்கு வருத்தமளிப்பதாக அவர் சொன்னார்.
“வீடுதோறும் வாசலில் வண்ணக் கோலம், திரும்பும் இடமெல்லாம் தித்திக்கும் செங்கரும்பு, புத்தாடை என ஊரே குதூகலமாக இருக்கும். குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடுவதே தனி இன்பந்தான். அது இம்முறை கிடைக்காது. இருப்பினும், எங்கள் விடுதியிலேயே பொங்கல் திருநாளைக் கொண்டாடும் எண்ணம் இருக்கிறது. விடுதியைவிட்டு வெளியே செல்ல அனுமதி இல்லாததால் தேக்கா சென்று பொங்கல் கொண்டாடுவதற்கான பொருள்களை வாங்க முடியாது. அதனால் எங்கள் விடுதியில் இருக்கும் பல்பொருள் அங்காடியிலேயே கரும்பு போன்றவை விற்கப்பட்டால் நன்றாக இருக்கும்,” என்றார் திரு ராஜா.