சிங்கப்பூரின் ஆகப் பெரிய கிருமித் தொற்றுக் குழுமமாக கடந்த 3 வாரங்களில் சாங்கி குழுமம் உருவெடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி சாங்கி விமான நிலைய ஊழியர்கள் 43 பேருக்கும் பொதுமக்கள் 61 பேருக்கும் கொவிட்-19 தொற்றியுள்ளது. ஆக இந்தக் குழுமத்தில் 104 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறு ஏற்பட்டது இந்த நிலை?
ஏப்ரல் 22ம் தேதி அன்று, அதற்கு முந்திய 14 நாட்களில் இந்தியா சென்றிருந்த, நீண்டகால அனுமதி வைத்திருப்போரும் குறுகியகால பயணிகளும் இங்கு வரத் தடை விதித்தது அரசாங்கம். ஏப்ரல் இறுதியில் இக்கட்டுப்பாடுகள் பங்ளாதேஷ், நேப்பாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாட்டுப் பயணிகளுக்கும் விரிவாக்கப்பட்டது.
கட்டுப்பாடுகளை விதித்தபோதும் தொற்றுகளை தடுக்க முடியவில்லை. கடந்த 5ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றும் துப்புரவு ஊழியர் ஒருவருக்கு முதன்முதலில் கிருமி தொற்றியது கண்டறியப்பட்டது. சில நாட்கள் கழித்து குழுமத்தில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் பி1617 உருமாறிய கிருமி இருப்பது அடையாளங்காணப்பட்டது.
தெற்காசியாவிலிருந்து வந்த ஒரு குடும்பத்துக்கு உதவிய ஊழியர் மூலம் அந்த உருமாறிய கிருமி இங்கு பரவியிருக்கலாம் என்று சாங்கி விமான நிலையமும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
உலகளாவியப் பொருளியலையும் வெளிநாட்டு ஊழியர்களையும் நம்பி சுழன்றுவரும் சிங்கப்பூர் அதன் எல்லைகளை மூடுவது மிகவும் கடினம். அதிலும் தொற்றுகள் எல்லை தாண்டி வருவதைத் தடுக்க முடியாது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சோ சுவீ ஹொக் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் நட்டாஷா ஹவ்ர்ட் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
அதிலும், சிங்கப்பூர் தொற்றுகளுக்குப் பின்னர்தான் பி1617 கவலைம்குரிய கிருமி வகை என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்ததைச் சுட்டிக்காட்டினார் அப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியரான சூ லி யாங்.
கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
முதல் சில கிருமித்தொற்றுகள் ஏற்பட்டவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மளமளவென்று எடுக்கப்பட்டன. அதன் கரங்கள் விரிய விரிய நடவடிக்கைகள் கூடின.
முனையங்கள் 1, 3 மற்றும் ஜுவல் சாங்கி கடைத்தொகுதியில் பணியாற்றும் எல்லா ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. கிருமி பரவியிருக்கக்கூடிய இடங்களில் ஒன்றான 3ஆம் முனையத்தின் 2ம் அடித்தளம் பொதுமக்களுக்கு மூடப்பட்டது. அதிக ஆபத்துள்ள இடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏழு நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை என்றானது.
தொற்றுகள் 25ஐ தாண்டியதும், 1, 3 ஆகிய முனையங்களும் ஜுவல் சாங்கி கடைத்தொகுதியும் பொதுமக்களுக்கு மூடப்பட்டன.
பின்னர், பி1617யின் வேகம் இன்னும் தெளிவானபோது, கிருமித்தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகள், குறிப்பாக தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.
அவர்கள் வருகைதரும் பகுதிகளில் ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதுவரை தொற்றுப் பரவலைத் தடுக்க, விமான நிலைய ஊழியர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என கிட்டத்தட்ட 10,000 பேருக்குக் கிருமிப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுவிட்டன.
முனையங்கள் 1, 3 ஆகியவற்றுடன் ஜுவல் சாங்கி கடைத்தொகுதியும் மேலும் இரு வாரங்களுக்குப் பொதுமக்களுக்கு மூடப்படும்.
இருப்பினும், மிகப் பெரிய இடமான விமான நிலையத்தில் குளிர்சாதனங்கள் வழியாக கிருமி பரவலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முழு பாதுகாப்புக் கவசம், முகக்கவசம் ஆகியவற்றை நீண்ட நேரம் அணிந்திருப்பது சிரமம்.
கிருமி தொற்றிய ஊழியர்களில் 13 பேர் துப்புரவுப் பணியாளர்கள். பத்து பேர் பாதுகாப்பு அதிகாரிகள். மற்றவர்களைவிட இவர்கள் கூடுதல் இடங்களில் நடமாட வேண்டியிருக்கலாம். சில துப்புரவாளர்கள் வயதாவனர்கள்.
ஆனாலும் இங்குள்ள வலுவான பொதுச் காதாரக் கட்டமைப்பும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி காப்பது போன்ற நடவடிக்கைகளும் பாதிப்பைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மூன்று வாரங்களில் 100 பேர்
மே 5 - 88 வயது துப்புரவு ஊழியருக்கு முதன்முதலில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
மே 8 - மேலும் மூவருக்கு தொற்று உறுதியானது.
மே 9 - மேலும் நால்வருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து குழுமம் உருவானதாக அறிவிக்கப்பட்டது.
மே 11 - ஊழியரது குடும்பத்தாருக்கும் கொவிட்-19 பரவியது. சாங்கி குழுமத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டனர்.
மே 12 - 26 பேருக்குத் கிருமித்தொற்று.
மே 13 - கிருமித்தொற்று 46 ஆகியது. எண்மருக்கு பி1617 உருமாறிய கிருமி இருப்பதாக முன்னோட்ட முடிவுகள் காட்டின.
மே 14 - 59 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.
மே 15 - 10 நாளில் 68 பேருக்கு கிருமித்தொற்று.
மே 20 - சாங்கி குழுமத்தில் 104 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. இதில் 43 பேர் விமான நிலைய ஊழியர்கள்.