ஆர்த்தி சிவராஜன்
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நோயாளி சேவைக்கான மூத்த உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார் திருமதி மாதேஸ்வரி அரியகிருஷ்ணன், 51. தம் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து 19 ஆண்டு சேவைக்குப் பிறகு வேலையிலிருந்து விலகினார். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி கடந்த ஏழு ஆண்டுகளாக கற்றுஉணர்ந்து, இன்று உடல் எடை குறைவதற்கான ஒரு வழிகாட்டியாகவும் குழுநிலை உடலுறுதிப் பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிகிறார்.
'ஸ்லிப் டிஸ்க்' (slipped disc), கருப்பையில் கட்டி (fibroid), ஒற்றைத் தலைவலி (migraine) போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட திருமதி மாதேஸ்வரி, இவை மோசமடையாமல் இருப்பதற்காக உடற்பயிற்சியைத் தவிர்த்து வந்தார். ஆனால் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால்தான் இத்தனை பிரச்சினைகள் என்பதைப் பின்னர் புரிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டார்.
உடற்பயிற்சி நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதற்காக ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி நடத்திய சத்துணவு பயிற்சி வகுப்பில் பயின்றார்.
கொவிட்-19 சூழலில் அதிகாரிகளின் அனுமதியுடன் இவர் வெளிப்புற உடற்பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.
வாரத்திற்கு மூன்று வெள்ளியே கட்டணம். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 முதல் 10 மணி வரை தோ பாயோ நகரப் பூங்காவில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளில் பானமும் வழங்கப்படுகிறது.
பெரும்பாலும் இந்திய மாதர் இந்த வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். சீன, மலாய் பெண்களும் ஆண்களும் வருகின்றனர்.
அனைவரது உடல் நிலையைச் சரியாக புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற பயிற்சிகளைக் கற்று தருகிறார் திருமதி மாதேஸ்வரி.
கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியவாறு இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்வதில் திருமதி மாதேஸ்வரியின் மகள், 21 வயது அமிர்தா மூர்த்தி உதவி வருகிறார்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து திருமதி மாதேஸ்வரி, "நாம் தினமும் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதைக் கவனித்தபடி நமது கேலரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும். நம் உடலில் இருக்கும் கொழுப்பு அளவை அறிந்து அதைக் கரைப்பதற்கு ஏற்ற உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
"சிலர் காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கின்றனர். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் கேலரிகளும் கொழுப்பு அளவும் அதிகரிக்கும். பின்பு, நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். இந்நிலையைத் தவிர்க்க தினமும் உடற்பயிற்சி செய்து சத்துணவைச் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு இதுவே வழி," என அறிவுறுத்தினார்.
திருமதி மாதேஸ்வரியின் வெளிப்புற உடற்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ள திருமதி சாவித்திரி, 60, தமது வெற்றிப் பயணத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.
89 கிலோ எடையில் இருந்த அவர், திருமதி மாதேஸ்வரியின் உடற்பயிற்சி வகுப்பில் சேர்ந்தபோது ஆரம்பத்தில் சிரமப்பட்டதாகவும் விடாமுயற்சியுடன் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ததால், 12 கிலோ குறைக்க முடிந்ததாகவும் கூறினார்.