காக்கி புக்கிட் வட்டாரத்து தங்குவிடுதி ஒன்றில் வசிக்கும் ஸ்ரீராம் பிரகாஷ், ஒருநாள் காலை எழுந்தபோது பக்கத்து அறையில் தங்கி இருந்த பங்ளாதேஷியர் முஜிபுர் ரகுமான், புத்தாடைகளை அணிந்து தயாராவதைப் பார்த்தார்.
எதற்கு இந்த ஆடை அலங்காரம் என்று முஜிபுரிடம் வினவிய ஸ்ரீராமிற்கு, அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருந்தது. முஜிபுர் ரகுமானுக்கு ஜூன் மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குத் திருமணம். அதுவும் தங்குவிடுதியில் இருந்தவாறே திருமணம். மணப்பெண் பங்களாதேஷில் உள்ளார். 'ஸூம்' தளம் வழி நண்பர்களும் குடியிருப்பாளர்கள் சிலரும் சூழ நிக்காஹ் செய்துகொண்டார் முஜிபுர்.
அவரின் திருமணம் கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலால் தள்ளிப்போனது. அவரின் பெற்றோரும் நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தால் திருமணத்தை நடத்திவிடவேண்டும் என்று முடிவெடுத்தனர்.
நிச்சயம் செய்து பல காலம் ஆன நிலையில் பெண் வீட்டாரின் நெருக்குதலுக்கும் ஆளாகினர் மாப்பிள்ளை வீட்டார். தற்போதைய கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இங்கிருந்தபடியே பங்ளாதேஷின் முன்ஷிகஞ் மாநகரில் இருக்கும் பெண்ணை மணந்துகொண்டார் முஜிபுர்.
கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுத்திய சஞ்சலங்கள் எண்ணிலடங்கா.
"எங்களால் எங்குமே செல்ல முடியாதது மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது. தேக்காவிற்குச் சென்று மற்றவர்களைச் சந்தித்துப் பொருட்கள் வாங்கி வருவதில் கிடைக்கும் இன்பம் இப்போது இல்லாமல் போய்விட்டது," என்று கூறினார் ஸ்ரீராம், 35.
அவர் எட்டு ஆண்டுகளாக இங்கு மின்சாரத் துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், மூன்றாண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு சிங்கப்பூர் திரும்பினார்.
அவரது முதல் குழந்தை பிறந்தபோதுகூட அவர் அங்கு இல்லை. தன் மகனை இதுவரை திறன்பேசியில் வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மூலமே பார்த்துவரும் அவர், தம் கையில் மகனைத் தூக்கிக் கொஞ்ச ஏங்குகிறார்.
"வெளியே சென்று என் பிள்ளைக்கு ஆடைகளையோ விளையாட்டுப் பொருட்களையோ வாங்கி இந்தியாவிற்கு அனுப்புவதற்குக்கூட என்னால் முடியவில்லை. அந்த அளவிற்கு முடங்கிக் கிடக்கவேண்டியுள்ளது. கட்டுக்குள் கொரோனா இருக்கும் நேரத்திலாவது எங்களை வெளியே செல்ல அனுமதிக்கலாம் அல்லவா," என்று சொன்ன அவர், முன்னோட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி கொண்டார்.
"இருப்பினும் நாங்கள் லட்சக்கணக்கில் இருக்கிறோம். வெறும் 500 பேர் மட்டும்தான் போக முடியும் என்கின்றனர். இந்தத் திட்டத்தின்படி எப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை," என்கிறார் அவர்.
இதுபோன்ற நேரத்தில் முஜிபுரின் திருமணம் பக்கத்து அறையில் நடந்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாகவும் தம் சொந்த ஊரில், தம் வீட்டில் இருந்தது போன்ற உணர்வைத் தந்ததாகவும் அவர் கூறினார்.
முஜிபுர் ரகுமான் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் சாயம் பூசும் பணியைச் செய்பவர். மாதம் $1,300 சம்பளம் வாங்கும் அவர், செலவுகள் போக 400 வெள்ளியை வீட்டிற்கு அனுப்புகிறார்.
"முதலாளி எங்களுக்கு என்னதான் சலுகை வழங்கினாலும், அரசாங்க விதிமுறைகளால் எங்குமே எங்களால் போகமுடியவில்லையே! இச்சூழலிலும் திருமணம் நடந்ததில் மகிழ்ச்சி.
"என் நாட்டைச் சேர்ந்த ஒரு சிலர் இந்த முறையிலேயே திருமணம் செய்துள்ளனர். உறுதிமொழி எடுத்தால் திருமணமானதாக பொருள்படுவதால் எங்களால் இப்படி வேறோர் இடத்தில் இருந்தவாறு திருமணம் செய்துகொள்ள முடிகிறது," என்றார் முஜிபுர்.