திருவாட்டி கிருஷ்ணவேணி தெரசா போஸும் அவரது இரண்டு குழந்தைகளும் கடந்த ஏழு மாதங்களாக நிம்மதியாக தூங்கவில்லை. ஏனெனில், அவர்களது ஓர் அறை வாடகை வீட்டில் இருந்த ஒரே மின்விசிறி பழுதடைந்து விட்டது.
குழந்தைப் பராமரிப்பு ஆசிரியராகவும் குடும்பத்தின் ஒரே ஆதாரமாகவும் இருக்கிறார் அந்த 46 வயது தாயார். ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு மகன்களும் வீட்டில் வசதியாக ஓய்வெடுக்க ஒரு புதிய மின்விசிறிக்காக ஏங்கினார்.
"எனது குழந்தைகள் என்னிடம் புதிய மின்விசிறியைக் கேட்டனர், ஏனென்றால் அவர்கள் வீட்டில் வெப்பமாக உள்ளது என்றும் தூங்க முடியவில்லை என்றும் என்னிடம் சொன்னார்கள்," என்று திருவாட்டி தெரசா கூறினார்.
ஃபிலோஸ் சமூக சேவைகள் அமைப்பின் சமூக சேவகர்
ஒருவரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அந்த அதிகாரி அதைச் சிறுவர் படையிடம் தெரிவித்தார். திருவாட்டி தெரசாவின் ஆசை விரைவில் நிறைவேறும்.
இந்த ஆண்டு சிறுவர் படையின் ஷேர்-எ-கிஃப்ட் திட்டத்தில் இருந்து பயனடைந்த 44,167 பேரில் திருவாட்டி தெரசாவும் ஒருவர். இதுவே அதிகபட்ச பயனாளிகளின் எண்ணிக்கையாகும்.
கடந்த ஆண்டு, இத்திட்டத்தில் 43,421 பயனாளிகள் இருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு 43,276 பேர் இருந்தனர். 34வது ஆண்டாக நடைபெறும் இந்த வருடாந்திர அறப்பணி நிகழ்ச்சி நேற்று ஹார்ட்பீட்@ பிடோக்கில் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், "கொவிட்-19 தொடர்ந்து நம்மை எடைபோடுகிறது, நாம் வாழும், வேலை செய்யும், விளையாடும் முறையை மேம்படுத்துகிறது. நமது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடையே ஆதரவு தேவைப்
படுபவர்கள் உள்ளனர். சமூகம் அவர்களின் தேவைகளுக்கு உதவ முன்வரும்போது, இது நிறைய அர்த்தமுள்ளதாக இருக்கும்," எனக் கூறினார். பெருந்தொற்றுடன் வாழ்வதில் சவால்கள் இருந்தபோதிலும், அதன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஆர்வத்துடன் இருப்பதற்காகவும் தன்னார்வலர்கள், பயனாளிகளின் நலனை முதன்மைப்படுத்தியதற்காகவும் அவர் சிறுவர் படையைப் பாராட்டினார். திரு ஹெங்கும் ஆதரவு அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிறுவர் படை அறப்பணித் திட்டத்தின் அன்பளிப்புப் பைகளில் பொருட்களை வைத்ததுடன் அவற்றைப் பயனாளிகளுக்கும் கொடுத்தனர்.