திருமணத்துக்குப் பின்பு சிங்கப்பூரில் குடிபெயர்ந்தனர் வீரமகேந்திரன்-சுமதி தம்பதியினர்.
முன்பின் அறியாத புதிய நாட்டில் தங்களது வாழ்வைத் துணையின்றி நிறுவ வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு. நிதி வசதியும் குறைவாக இருந்த நிலை. அத்தகைய சூழலிலும், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு விட்டுக்கொடுத்துப்போக முயன்றனர் இருவரும்.
சேமிப்புகளே இல்லாமல், நெருக்கடியில் இருந்த காரணத்தினால் இருவரும் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தனர்.
இருவரும் முழுநேரப் பணியில் இருந்ததால், தங்களது மகளை கவனித்துக்கொள்வது பற்றிய கவலை இவர்களைத் தொற்றி யது.
"வேறு வழியின்றி குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் பகுதிநேரமாக மகளைச் சேர்க்கவேண்டி இருந்தது. தொடக்கநிலை ஆறாம் வகுப்புவரை அவள் அங்கேதான் இருந்தாள். இன்றுவரை அவளை அவ்வாறு தனித்துவிட்டது என்னை உறுத்துகின்றது," என்றார் வாடிக்கையாளர்க சேவைப் பிரதிநிதியாகப் பணிபுரியும்
திருமதி மணியன் சுமதி, 38.
மனைவியின் கருத்தில் திரு வீரமகேந்திரனும் பங்குகொண்டிருந்தார்.
நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், முடிந்தவரை மனைவியையும் மகளையும் கவனித்துக் கொள்ள அவர் பெரிதும் முயன்றார். வீட்டுவேலைகளைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள இருவரும் தவறியதில்லை.
"எல்லா இடங்களிலும் அமைதி காக்கும் எனது சுபாவத்தை அவர் விரும்பவில்லை. எளிதில் கோபப்பட்டு, மனம் மாறாமல் இருக்கக்கூடிய அவரது போக்கை நான் விரும்பவில்லை.
"இருப்பினும், சூழலுக்கேற்ப ஒருவரையொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம்," என்றார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான திரு பாரிஜாதம் வீரமகேந்திரன், 46.
வெவ்வேறு விதமான குடும்பச் சூழல்களில் இருவரும் வளர்ந்ததனால், இருவரது குணாதிசயங்களும் வேறுபட்டு இருந்ததை அவர்கள் உணர்ந்தனர்.
இருப்பினும், அவரவர் சுயநல எண்ணங்களை ஒதுக்கி வைத்து விட்டு, குடும்ப அமைப்பின் நலனைக் கருதி தங்களைத் தாங்களே மறுபரிசீலனை செய்துகொண்டனர். திருமணத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே ஒருவரையொருவர் கண்டுகொண்ட போதிலும், தாங்கள் எதிர்நோக்கியுள்ள இலட்சியம்வாய்ந்த பல்லாண்டுகால வாழ்க்கையை அது என்றும் பாதிக்காது என்பது இவர்களது நிலைப்பாடு.
ஒருவரையொருவரை மகிழ்விக்கும் நல்ல சூழலைத் தினமும் உருவாக்க முயல்வதாக வீரமகேந்திரன்-சுமதி தம்பதியினர் பகிர்ந்து கொண்டனர்.