கொவிட் -19 கிருமிப் பரவலைத் தடுக்க முடக்கநிலை நடப்பில் இருந்த காலம் பலருக்கும் சிரமமானதாக இருந்தாலும் கவிதாவின் கனவை நனவாக்கியது அந்தக் காலகட்டம்தான்.
திருமதி கவிதாவுக்கு சில காலமாகவே, குழந்தைகளுக்காகக் கதை சொல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தது. தொடக்கத்தில் ஏற்படும் தயக்கத்தினாலும், நேரம் இல்லாததாலும் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
"கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த எனக்கு, தாத்தா பாட்டியின் கதைகளைக் கேட்டு அறியும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் எனது இரு பிள்ளைகளுக்குமே என்னால் கதை சொல்ல முடிவதில்லை. கொவிட்-19 கிருமிப் பரவல் மோசமாக இருந்த நேரத்தில், அதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது," என்றார் 43 வயது திருமதி கே. என். கவிதா.
வெளியே சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ, விளையாடவோ முடியாத பிள்ளைகளுக்காக 'கவிதா அத்தை குட்டீஸ் கதைகள்' என்ற யூடியூப் ஒளிவழியை இவர் தொடங்கினார். விரைவில் இவரது கதைகள் பிரபலமாயின. பிள்ளைகளோடு பிள்ளையாக மாறி குதூகலத்துடன் கதை சொல்லும் கவிதா அத்தைக்கு பிள்ளை ரசிகர்கள் ஏராளம். தமது யூடியூப் ஒளிவழிக்காகப் பல பரிமாணங்களை திருமதி கவிதா ஏற்றுள்ளார். பிள்ளைகளை ஈர்க்க, ஒப்பனை, காணொளிப் பதிவு, படத்தொகுப்பு, வசனம் எழுதுவது ஆகியவற்றில் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.
திருமதி கவிதாவின் பிள்ளைகளும் இவருக்குப் பலவழிகளில் உதவினர். தனது மூத்த மகனின் வழிகாட்டுதலில் யூடியூப் தளத்தில் செயல்படும் முறைகளைக் கற்றுக்கொண்டு சுயமாகக் காணொளிகளைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார்.
"தொடர்ந்து கதை சொல்வதற்கு என்னை ஊக்குவிப்பவர்கள் பிள்ளைகளும் அவர்களின் பெற்றோரும்தான். 'ஐ கவிதா அத்தை!' என்று பிள்ளைகள் செல்லமாக ரசிப்பதும், என்னைப்போல் கதை சொல்லவேண்டும் என்று மற்றவர்கள் ஆசைப்படுவதும் எனக்கு மனநிறைவைத் தருகின்றன," என்றார் திருமதி கவிதா.
கதைகளுக்குப் பஞ்சமே இல்லை என்றாலும், கதை சொல்பவர்கள் குறைவாக இருப்பதைத் திருமதி கவிதா சுட்டினார். வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்ட சூழலில் தம்மைப் போன்றவர்களின் எளிமையான முயற்சிகள் பிள்ளைகளைத் தமிழ் மொழியின்பால், இலக்கியத்தின்பால் ஈர்க்கும் என்று இவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.