ஆ. விஷ்ணு வர்தினி
ஹர்ஷிதா பாலாஜி
தெளிவாக வகைப்படுத்த இயலாததொரு வளர்ச்சிக் குறைபாடான மதியிறுக்கம் (ஆட்டிசம்), ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்துப் பேசாமல் இருப்பது, காரணம் இல்லாமல் அழுவது அல்லது அடம்பிடிப்பது முதலிய குணங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் கண்டறியப்படுகிறது. ஆனாலும், மதியிறுக்கம் ஒரு குறைபாடல்ல, அதிலும் நிறைவான வாழ்க்கை இருக்கின்றது என்பதைக் கண்டும் கேட்டும் அறிந்து வந்தது தமிழ் முரசு.
பற்றுக்கோடாக விளங்கும் படகோட்டம்
பிறந்த சில ஆண்டுகளிலேயே மதியிறுக்க பாதிப்பு கண்டறியப்பட்ட மகன் அஷ்வினுக்குப் பிடிமானம் இல்லாததுபோல் உணர்ந்தார் திரு சீர்னாளி கணேசராவ் சேஷாச்சலா, 50. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அஷ்வினைப் பராமரித்து வரும் தாமும் தம் மனைவியும் வாழ்க்கைப் பாதையில் வெறுமனே மிதந்துகொண்டிருந்ததாய்க் குறிப்பிட்டார்.
ஒரே மகனான அஷ்வினுக்குத் தூண்டுகோலாக, மனத்திற்கு மருந்தாக விளங்கவேண்டி 'டிராகன்' படகோட்டும் பொழுதுபோக்கில் இணைந்தனர் தந்தையும் மகனும். மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கும் வண்ணம் மக்கள் கழகம் வழங்கும் விளையாட்டுப் பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
இது தங்களது வாழ்வில் மீண்டும் நம்பிக்கையை ஒளிர வைத்து இருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு சீர்னாளி.
"டிராகன் படகோட்டுவது கடினமான விளையாட்டுத்தான். குழு ஒற்றுமையே வெற்றியையும் தோல்வியையும் முடிவுசெய்யும். அஷ்வினுக்கும் பெற்றோரான எங்களுக்கும் ஆதரவளிக்கும் நல்ல சமூகத்தை இப்பொழுதுபோக்கு எங்களுக்குத் தந்துள்ளது ஒரு வரமே. அஷ்வின் தனது படகுக் குழுவினருடனும் பயிற்றுவிப்பாளர்களுடனும் நன்கு பழகுவது மகிழ்ச்சி அளிக்கின்றது," என்றார் இவர்.
வழிமுறைகளைக் கேட்டுச் செயல்படுவது வளர்ச்சியில் முக்கியமானதொரு திறன். அத்திறனானது நேரடியாக, அனுபவக்கல்வியின் மூலம் மேம்படுவதாகும். அவ்வகையில், மகன் அஷ்வினின் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் டிராகன் படகோட்டுவது பயனுள்ளதாய் இருப்பதாக திரு சீர்னாளி குறிப்பிட்டார்.
"ஒரு தந்தையாக, இப்பயணம் எளிதானதாக இருக்கவில்லை. அஷ்வினைக் கரைசேர்ப்பதே இத்தனை ஆண்டுகளாக எனது முதன்மையான குறிக்கோளாய் இருந்துள்ளது. இத்தகைய தளங்களின் மூலம், மதியிறுக்கப் பிள்ளைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத எனக்கு, அஷ்வினுடன் நேரடியாகப் பழகி மகிழும் நல்ல வாய்ப்பும் கிட்டியுள்ளது," என்றார் தந்தை திரு சீர்னாளி.
வெளித்தோற்றத்தில் இயல்பாகக் காணப்படும் அஷ்வின், இயல்பிற்கு மாறாக நடந்துகொண்டபோது பொதுமக்கள் பலர் அவரைக் கேலி செய்ததை திரு சீர்னாளி நினைவுகூர்ந்தார்.
அச்சமயங்களில் எல்லாம் அவர் ஒவ்வொருவரிடமும் சென்று விளக்கம் கூறி மன்னிப்பு கேட்க முற்படுவார்.
கடந்த மார்ச் 26ஆம் தேதி அன்று நடந்தேறிய டிராகன் படகு செஞ்சுரி போட்டியில் முதன்முறையாகக் கலந்துகொண்ட 23 வயது அஷ்வினுக்கு இது ஒரு மைல்கல் எனப் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார் திரு சீர்னாளி.
'புண்படுத்தாதீர்கள், புரிந்துகொள்ளுங்கள்!'
காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை ஒரே இடத்தில் அமர்ந்து, சுகாதார அமைச்சின் நிர்வாகப் பிரிவில் வேலை பார்த்து சோர்வடைந்த திரு சாராயணன் மாரியப்பன், 50, 1999ஆம் ஆண்டில் தமது 28வது வயதில் வேலை மாற முடிவெடுத்தார். அப்போது, இவருக்கு செய்தித்தாள் விளம்பரம் ஒன்றின் வழியாக 'ஆட்டிசம் அசோசியேஷனில்' வேலை வாய்ப்பு இருப்பதைப் பற்றித் தெரியவந்தது.
அதுவரை மதியிறுக்கத்தைப் பற்றி இவர் கேள்விப்பட்டதில்லை. இருப்பினும், 'என்னதான் என்று பார்க்கலாமே' என்ற நம்பிக்கையுடன் விண்ணப்பம் செய்து, வேலையில் சேர்ந்தார்.
தொடக்கத்தில் மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட இளையர்களுக்கான பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிந்த திரு சாராயணன், பிறகு 2010ஆம் ஆண்டில் பெரியவர்களுக்காக திறக்கப்பட்டிருந்த புதிய நிலையத்தில் சேர்ந்தார்.
"அதுவரை மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட, 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு உதவி வழங்கிய நிலையங்களும் நிறுவனங்களும் மிகக் குறைவாகவே காணப்பட்டன. அதனால், அவர்களுக்கு மேலும் ஆதரவளிக்க பெரியவர்களுக்கான நிலையம் தொடங்கப்பட்டது," என்று இவர் நினைவுகூர்ந்தார்.
இருப்பினும், அவர் பல இன்னல்களைச் சந்தித்தார். மதியிறுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பார்த்துக்கொண்டபோது, ஒருமுறை அவரது கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் இவர் தவித்தார். அந்த மனிதர் இவரை கடித்துக் கீறினார்.
"அதன்பிறகு நான் தொடர்ந்து இந்த வேலையை செய்ய வேண்டுமா? வேறு ஏதாவது வேலையை செய்யலாமா? போன்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்தன. ஆனால், என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் எனக்கு ஆறுதல் அளித்தனர், இன்னும் எப்படி எனது திறன்களை நான் மேம்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கினர்," என்றார் திரு சாராயணன்.
22 ஆண்டுகளுக்குமுன் வேலைக்குச் சேர்ந்தபோது பலருக்கும் மதியிறுக்கம் பற்றித் தெரியவில்லை என்றும் இப்போது பலருக்கும் அதைப் பற்றிய விழிப்புணர்வு இருப்பதால் புரிந்துணர்வுடன் நடந்துகொள்வதைப் பார்த்துள்ளேன் என்றும் இவர் கூறினார்.
மேலும், மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நண்பர்களும் அதிகமாக இதைப் பற்றித் தங்கள் நண்பர்களுடனும் தெரிந்தவர்களுடனும் வெளிப்படையாகப் பேசுவதால் அதனைப் பற்றிய சரியான புரிந்துணர்வு வளர்கின்றது என்றும் இவர் குறிப்பிட்டார்.
"ஆனாலும், சிலர் மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரை மனநலம் குன்றியவர்கள் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இதுபோன்று அவர்களைப் புண்படுத்தும் வகையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்," என்கிறார் திரு சாராயணன்.
அச்சம் போக்கவும் அரவணைக்கவும் உதவும் சக்தி
தனக்கு என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூற முடியாமல் தவித்தபோதும் சத்தமான இடங்களுக்குச் சென்றபோது அளவிற்கதிகமாக அடம்பிடித்து அழுதபோதும் தன் மூன்று வயது மகளுக்கு என்ன பிரச்சினை என்று 31 வயது திருவாட்டி சக்தி தர்ஷனால் (உள்படம்) சரியாகக் கணிக்க முடியவில்லை.
அப்போது, தன் மகளால் சரியாகப் பேசமுடியவில்லை என்று குழந்தைகளுக்கான வளர்ச்சித் தேர்வில் கண்டறியப்பட்டபோது அவளுக்கு ஒருவேளை மதியிறுக்கம் இருக்குமோ என்ற ஐயம் திருவாட்டி சக்திக்கு ஏற்பட்டது. விரைவில் அந்த ஐயத்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
தொடக்கத்தில் தன் மகளுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளச் சிரமப்பட்ட இவர், பிறகு தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டார்.
மதியிறுக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள புத்தகங்களையும் ஆய்வுகளையும் புரட்டிப்பார்த்தார். சமூக ஊடகங்களில் மதியிறுக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் சிலர், மதியிறுக்கம் தொடர்பான தங்கள் சொந்த அனுபவங்களைப் பதிவிடுவதையும் இவர் கவனித்தார். அப்பக்கங்களிலிருந்து மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் அன்றாட வாழ்க்கை, நடவடிக்கைகள் போன்றவை எப்படி இருக்கும் என்பதை இவர் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
2020ஆம் ஆண்டில் கொவிட்-19 பரவலை தடுக்க முடக்கநிலை நடைமுறைக்கு வந்தபின் ஒருவருக்கு மதியிறுக்கம் தொடர்பான சிகிச்சையும் உதவியும் கிடைப்பது தாமதமானதை திருவாட்டி சக்தி கவனித்தார். ஆகையால், புதிதாக மதியிறுக்கம் இருப்பதாக கண்டறியப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்கு உதவும்வண்ணம் தமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் 'அன்புடன் ஆட்டிசம்' என்ற பக்கத்தை அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இவர் தொடங்கினார்.
"மதியிறுக்கம் பற்றி வெளிப்படையாகப் பேசினால்தான் பெற்றோர்களிடம் அச்சம் குறைந்து, தேவையான உதவியும் ஆதரவும் கிடைக்கும்.
"குறிப்பாக, தமிழில் மதியிறுக்கம் பற்றிய வலைப்பதிவுகளை நான் பார்த்ததில்லை என்பதால் ஆங்கிலத்துடன் தமிழிலும் பதிவிடத் தொடங்கினேன்," என்று திருவாட்டி சக்தி விளக்கினார்.
தற்போது 800க்கும் மேற்பட்டவர்கள் திருவாட்டி சக்தியின் பதிவுகளைப் படித்து, பயன்பெற்று வருகின்றார்கள். பெற்றோர்களுடன் பல கல்வியாளர்களும் நண்பர்களும் மதியிறுக்கத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டு, அது தொடர்பான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளதாகவும் இவர் குறிப்பிட்டார்.
"குறிப்பாக, சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கான உதவித் திட்டங்கள் நடப்பிலிருக்க வேண்டும், அவ்வுதவித் திட்டங்களை வழக்கமானவையாக மாற்றவேண்டும்," என்கிறார் திருவாட்டி சக்தி.
'அவர்களை அவர்களாகவே பாருங்கள்!'
மாணவர் ஒருவர் விட்ட குத்தால் தமது மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தபோதும், திருவாட்டி ரா. விக்னேஸ்வரி (படம்) தமது ஆசிரியப் பணியை வெறுக்கவோ கைவிடவோ இல்லை. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக சிறப்புத் தேவை மாணவர்களுக்கான ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் 36 வயதான திருவாட்டி விக்னேஸ்வரி.
சிங்கப்பூர் கடற்படையில் தமது வாழ்க்கைத்தொழில் பயணத்தைத் தொடங்கிய இவர், மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுடன் உறவாடிய சமயங்களில் தமது விருப்பத்தைக் கண்டறிந்தார். தேசிய கல்விக்கழகத்தில் பின்னர் சிறப்புக் கல்வியில் பட்டயமும் பெற்றார்.
மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களைப் புரிந்துகொள்வது எளிதன்று. எதிர்பாரா வகையில் அவர்களது மனநிலை மாறக்கூடும். இத்தகைய சூழலிலும், எத்துறையை காட்டிலும் இத்துறையில் அதிக மனநிறைவடைவதாகக் கூறினார் திருவாட்டி விக்னேஸ்வரி.
"சிலர் அவ்வப்போது வன்முறையில் ஈடுபடுவர். நகத்தால் கீறுவது, அடிப்பது போன்றவை அவர்களது இயல்பான செயல்பாடுகள். மேலும் சிலர் திடீரென கட்டி அணைப்பர். இவை அனைத்தையுமே நோயாகக் கருதாமல் அவரவர் குணநலன்களாகக் கருதி, அவர்களை இயல்பாக நடத்தினால்தான் அவர்களது தேவைகளைப் புரிந்துகொள்வதற்கான மனப்பக்குவம் ஏற்படும்," என்றார் இவர்.
சாதாரண பள்ளி ஆசிரியர்களின் பணிகளை மேற்கொள்வதோடு, ஒவ்வொரு மாணவரது மனநலப் பராமரிப்பையும் ஏனைய மருத்துவ விஷயங்களையும் சிறப்புத் தேவை ஆசிரியர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். கூடுதல் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு உதவ, சமூக ஊழியர்கள், பள்ளி மனநல நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து பழக்கவழக்கங்களுக்கான திட்டம் வகுப்பதும் அதில் அடங்கும்.
மேலும், பிள்ளைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மாணவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று, அவர்களின் பெற்றோருக்கும் கற்றுத்தந்துள்ளதாக திருவாட்டி விக்னேஸ்வரி சொன்னார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பராமரிப்பது குறித்து குடும்பங்களுடன் இவர் அதிகம் உரையாடியுள்ளார்.
"சிறப்புத் தேவை மாணவர்கள் இயல்பற்றவர்களோ விசித்திரமானவர்களோ கிடையாது. அவர்களை அவர்களாகவே பார்க்கும்போதுதான் அவர்களுக்கான உதவியை நாம் வழங்கி, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர முடியும்," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்த ஆசிரியை.
மதியிறுக்கம் ஒரு நோயல்ல!
பிற மனநலச் சிக்கல்களைக் காட்டிலும் 'ஆட்டிசம்' எனும் மதியிறுக்கமானது உடல், தோற்றம் ரீதியாக வெளிப்படையாகத் தெரியக்கூடியதல்ல. தோற்றத்தில் இயல்பாக இருப்பினும், மதியிறுக்கத்தால் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளைப் பேணுவதில் வேறுபட்ட கண்ணோட்டங்கள் அவசியம் என்கிறார் மூத்த உளவியல் விரிவுரையாளரும் ஆய்வாளருமான முனைவர் திவ்ஜியோத் கோர்.
இயல்பாகத் தோற்றமளிக்கும் பிள்ளைகளின் வித்தியாசமான செயல்பாடுகளைக் கண்டு சமூகத்தினர், தங்களின் வளர்ப்பைக் குறைகூறுவரோ என்று அஞ்சி, பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்ல பெற்றோர்கள் தயங்குகின்றனர். ஆனால், சமூகத்தில் இயங்குவதற்கான வாய்ப்புகளைப் பிறர் ஏற்படுத்தித் தருவதும் குடும்பத்தார் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதும் மிகவும் அவசியம் என்கிறார் முனைவர் திவ்ஜியோத்.
மதியிறுக்கம் என்பது பொதுப்படையான ஒரு நோயாக சிலர் கருதக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாறாக, 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் விரிவான நிரலில் பல நிலைகளில் உள்ள மதியிறுக்கத்தால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர், தொடக்கநிலை, நடுநிலை, தீவிரநிலை மதியிறுக்கம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றனர். இருப்பினும், மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட எந்த இரு தனிமனிதர்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளும் பராமரிப்பு முறையும் இருப்பதில்லை என்றார் அவர்.
மதியிறுக்கத்தைக் கண்டறியும்போது, சமூகத் தொடர்பு, தொடர்ச்சியான குணவியல் மாற்றங்கள் என இரு முக்கியக் கூறுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. 'ADOS' எனப்படும் மதியிறுக்கம் அறியும் கண்காணிப்பு அட்டவணையைப் பயன்படுத்தியும், பெற்றோருடனான விரிவான நேர்காணலாலும் மதியிறுக்கம் கண்டறியப்படுகின்றது.
சிறுவயதுப் பிள்ளைகளில் மதியிறுக்கம் குறித்த அறிகுறிகளைக் கவனிக்க சிறப்புத் தேவை ஆசிரியர்கள் மட்டுமன்றி, மழலையர், பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுவதாக முனைவர் திவ்ஜியோத் கூறினார்.
இயல்பான பிள்ளைகளுக்கென்றும் சிறப்புத் தேவையுள்ள பிள்ளைகளுக்கு என்றும் தனித்தனியே நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யாமல், எல்லாப் பிள்ளைகளும் ஒரே சூழலில், ஒன்றாக இணைந்து உரையாடுவது அவசியம் என்று தமது எண்ணத்தையும் முனைவர் திவ்ஜியோத் முன்வைத்தார்.
இவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்!
'ஆட்டிசம்' எனப்படும் மதியிறுக்கம், நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் குறைபாடாகும். இதனை முழுமையாகக் குணப்படுத்த முடியாது.
சில நேரங்களில், வெறும் 18 மாதங்களிலேயே மதியிறுக்கத்தைக் கண்டறியலாம். ஆயினும், நடை, பேச்சு போன்ற திறன்களை கற்றுக்கொள்ள குழந்தைகள் சிரமப்படுவதைக் கவனித்தால் பெற்றோர்கள் மருத்துவரை நாடும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூரில் 150 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மதியிறுக்கம் ஏற்படுகின்றது.
ஐன்ஸ்டைன், டார்வின், நியூட்டன், மொஸார்ட் போன்ற பல மேதைகளுக்கும் மதியிறுக்கம் இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பெற்றோரின் நடவடிக்கைகளுக்கும் குழந்தைகளுக்கு மதியிறுக்கம் ஏற்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், நாய்களைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது நன்மை தரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மதியிறுக்கத்தால் ஏற்படும் கோபத்தைக் குறைத்து, குழந்தைகளை அமைதிப்படுத்த நாய்கள் உதவுகின்றன.