ஆ. விஷ்ணு வர்தினி
இளமைப் பருவம் கொண்டாட மட்டுமன்று! வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிப்போருக்கு ஆதரவு அளித்து, கைதூக்கிவிட ஆக்கபூர்வ செயல்களை மேற்கொள்வதற்கான அரும்பருவமும் அதுதான் என்றெண்ணி, சமூகத் தொண்டாற்றிவரும் இளையர் நால்வரை நேர்கண்டு, அவர்களின் அரும்பணிகளையும் அனுபவங்களையும் அறிந்து வந்தது
தமிழ் முரசு.
கப்பல் ஊழியர்களின்
மனநலம் பேணும் மித்திலா
கப்பலில் பணிபுரியும் ஊழியர்களின் மனநலத்தையும் உடல்நலத்தையும் காத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சியில் முழுநேரமாக ஈடுபட்டு வருகிறார் முனைவர் மித்திலா மகேஷ் (படம்).
இவரின் முன்னோர்கள் கப்பல் துறையில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகாலம் பணியாற்றியவர்கள். அவர்கள் மூலமாகக் கடல்துறை ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளைக் கண்டும் கேட்டும் வளர்ந்தவர் 30 வயது மித்திலா.
உளவியல் துறை படிப்பு, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனைப் பணி என்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் கொவிட்-19 நோய்ப்பரவல் சூழலில் சிங்கப்பூருக்குத் திரும்பியபோது, கப்பல் துறை ஊழியர்களின் பிரச்சினைகள் மீண்டும் இவரது காதுகளுக்கு எட்டின.
கொவிட்-19 சூழலால் கப்பல் துறை ஊழியர்களின் மனநல பாதிப்பு குறித்த செய்திகள் அதிகம் வெளியாகின. அச்சமயத்தில், உயிர்மாய்ப்பு போன்ற எண்ணங்களால் பாதிக்கப்பட்ட கப்பல் துறை ஊழியர்களின் எண்ணிக்கை பத்து மடங்காக, அதாவது நான்கு விகிதத்திலிருந்து நாற்பது விகிதமாகக் கூடியிருந்தது. அப்போது கப்பல்துறை ஊழியர்களுக்கு உதவும் எண்ணம் மித்திலாவுக்கு ஏற்பட்டது. அதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 'டிரான்ஸ்வோர்ல்ட் வெல்னஸ்' என்ற சமூக நிறுவனத்தை இவர் தொடங்கினார்.
"முழுநேர வேலையை விட்டுவிட்டு இந்நிறுவனத்தைத் தொடங்கியபோது பல ஐயப்பாடுகள் எழுந்தன. ஆனால், இச்சேவைக்கு ஊழியர்களும் நிறுவனங்களும் அளித்து வரும் வரவேற்பு எங்களுக்குப் பெரும் உந்துசக்தியாக உள்ளது," என்றார் முனைவர் மித்திலா.
ஆலோசனை சேவை, அடிப்படை மனநலப் பயிற்சி, கப்பல் சூழலில் செய்யக்கூடிய உடற்பயிற்சி வழிகாட்டிக் காணொளிகள், பயிலரங்குகள் ஆகியவற்றை வழங்குகிறது 'டிரான்ஸ்வோர்ல்ட் வெல்னஸ்'.
"பிற சமூகத்தினரைவிடவும் அதிக அளவு புறக்கணிக்கப்பட்ட சமூகமாகக் கப்பல் துறை ஊழியர்கள் உள்ளனர் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மொழிச் சிக்கல்கள், கடலில் இருப்பவர்களைத் தொடர்புகொள்ள இயலாதது எனப் பல்வேறு சவால்களால் கப்பல் ஊழியர்களுக்கென்றே தனித்துவமான மனநல சேவைகள் இல்லை," என்று இச்சேவையைத் தொடங்குவதற்கான காரணத்தை விவரித்தார் முனைவர் மித்திலா.
கப்பல் ஊழியர்களிடத்தில் மனநலம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதும், தனிமனிதராக மனநல உதவி நாடுவதற்கு தயங்குவதும் சவால்களாக இருப்பதை முனைவர் மித்திலா குறிப்பிட்டார். இதை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு முதலாளிகள், நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முற்பட்டுள்ளது 'டிரான்ஸ்வோர்ல்ட் வெல்னஸ்'.
எதிர்காலத்தில் கப்பல் துறையில் மேலும் பல பிரிவினரையும், சமூகத்தில் புறக்கணிக்கப்படுவோரையும் அணுகத் திட்டமிடுவதாகக் கூறினார் முனைவர் மித்திலா.
கலையால் துயர் களையும் உளவியல் வல்லுநர்
ஆழ்மனத்தில் உறைந்திருக்கும் ஆறாத் துயரங்களைப் போக்க கலை ஒரு சிறந்த வடிகால் என்பது உளவியல் நிபுணரான 36 வயது புவனேஸ்வரி பிரகாசத்தின் (படம்) அனுபவம்.
தந்தையின் இழப்பால் ஆறு மாதங்களுக்கும் மேலாக மனம் ஒடிந்துபோயிருந்த உளவியல் துறை சிகிச்சையாளரான புவனேஸ்வரி, அத்துயரத்திலிருந்து மீள கலை உளவியலின் மூலம் தம்மைத் தேற்ற நினைத்தார்.
கற்றல் குறைபாடு உள்ளோருக்கான சிங்கப்பூர் டிஸ்லெக்சியா சங்கத்தில் பார்த்துவந்த முழுநேரப் பணியைக் கைவிட்ட குமாரி புவனேஸ்வரி, லாசால் கலைக் கல்லூரியில் கலை உளவியலில் முதுகலைப் படிப்பை மேற்கொண்டார். அப்படிப்பு இவரது துயரங்களுக்கு அருமருந்தாய் அமைந்தது.
2017ஆம் ஆண்டில் முழுநேர கலை உளவியல் நிபுணராகப் பரிமாணம் கண்ட குமாரி புவனேஸ்வரி, துயரத்தில் தவிக்கும் மற்றவர்களுக்கு உதவ, 'சோலஸ் ஆர்ட் தெரப்பி' எனும் சமூக நிறுவனத்தைத் தொடங்கினார்.
கலை உளவியல் பயிற்சிகள் எல்லாருக்குமே எட்டக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது இவரது இலக்கு. தொடக்கத்தில் அரசாங்க அமைப்புகள், சிறைச்சாலையுடன் இணைந்து செயல்பட முற்பட்ட இவர், பின்னர் பொதுமக்கள், மாணவர்கள் சார்ந்து தமது சேவைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
"மனநலம் குறித்துப் பலரும் தவறான புரிதலைக் கொண்டுள்ளனர். கலை உளவியலை ஏறெடுத்தும் பார்க்காத போக்கு, உற்றார் உறவினர்கூட ஆதரவளிக்காதது எனப் பல சவால்கள். இருப்பினும், சோலஸ் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கின்றது," என்றார் குமாரி புவனேஸ்வரி.
சில நேரங்களில், 200 மின்னஞ்சல்கள் அனுப்பியும் ஒருவர் மட்டுமே விருப்பம் காட்டும் நிலையும் இவருக்கு ஏற்பட்டுள்ளது. சமூக நிறுவனப் பணியில் முக்கிய சவாலாக இருப்பது, பிறர்க்குதவும் நோக்கத்தையும் வணிகக் கண்ணோட்டத்தையும் சமமாகக் கருதுவதுதான் என்றார் குமாரி புவனேஸ்வரி. வகுக்கப்படும் விலை மிகக் குறைவாக இருந்ததைத் தொடர்ந்து நிறுவன ரீதியாக சமாளிக்க முடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க, விலை, சேவை மாற்றங்களை 'சோலஸ்' புரிய வேண்டியிருந்தது.
இளையர்களுக்கும் பெரியோருக்கும் கலை சிகிச்சை வகுப்புகளை நடத்துவதோடு, கலை உளவியல் பயிலரங்குகளையும் நடத்துகிறது 'சோலஸ்'. இதுவரை 245 பேர் தனிப்பட்ட முறையில் இந்த நிறுவனத்தின் சேவைகளின் மூலம் பயனடைந்துள்ளனர்.
தமது மற்றொரு வணிகமான 'கார்ட் அட்டலியே'வை இந்தியாவில் வன்முறைக்குள்ளாகும் பெண்களுக்கான சமூக நிறுவனமாக்கும் திட்டம் கொண்டுள்ளார் குமாரி புவனேஸ்வரி.
பொழுதுபோக்காகக் கற்றது பொருளுதவிக்குக் கைகொடுக்கிறது
சிறுவயதிலிருந்து பொழுதுபோக்காக கற்ற 'பேக்கிங் (baking)' மூலம் சமூக சேவை செய்யலாமே என்று தம் அக்கா கூறிய யோசனையால் 2020ஆம் ஆண்டில் உதித்தது 17 வயது இமான் ஜூமாபாயின் (படம்) 'ஜூமா பேக்ஸ்'.
"கொவிட்-19 நோய்ப்பரவல் சூழலில் குடும்பத்தைப் பிரிந்து இங்கு தவித்த வெளிநாட்டு ஊழியர்களின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தினேன். அவர்களுக்கு என்னால் எப்படி உதவ முடியும் என்று சிந்தித்தேன். அப்போது அக்கா கூறிய யோசனையால் இத்தொழிலைத் தொடங்க முடிவுசெய்தேன்," என்றார் செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையத்தில் பயிலும் குமாரி இமான்.
கேக் முதலிய இனிப்பு வகைகளை இன்ஸ்டகிராம் மூலம் விற்கும் குமாரி இமான், கிடைக்கும் வருவாயில் பாதியைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். மீதமுள்ள தொகையைத் தேவையான கருவிகளையும் உணவுப்பொருள்களையும் வாங்குவதற்குப் பயன்படுத்துகிறார்.
இதுவரை $4,000க்கும் மேலாக நிதி திரட்டி தேவைப்படுவோருக்கு வழங்கியுள்ளார் இவர்.
இந்தியாவில் மருத்துவ உயிர்வாயுக் கலன்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது, அவற்றை வாங்க நன்கொடை வழங்கினார். டெக்கத்லான் நிறுவனத்தோடு இணைந்து, எஸ்11 விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டுச் சாதனங்களும் தண்ணீர்ப் புட்டிகளும் வழங்க உதவினார்.
பழைய சேலைகள்வழி பலருக்கு வேலைவாய்ப்பு
ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை இருப்பதைப்போல ஒவ்வொரு சேலைக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது என்று நம்பும் 16 வயது மாணவிகள் இருவர், அந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு சேலையும் ஒரு கதையைக் கொண்டுள்ளது. அக்கதைகளுக்கு நிலைத்தன்மையையும், ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வாதாரத்தையும் அமைத்துத் தரும் வகையில், அவர்கள் இருவரும் சேர்ந்து 'சேரீ ஸ்டோரீஸ்' என்ற சமூக நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.
சிங்கப்பூரில் பயிலும் ஸ்லோகா ஸ்ரீராமும் (படம்) சென்னையில் பயிலும் ஆனந்தி விவேக்கும், சென்னையிலுள்ள மாற்றுத் திறனாளி பெண்களின் நலனை முன்னிட்டு நடத்தி வரும் இந்நிறுவனம், இரு வழிகளில் இயங்குகின்றது.
சிங்கப்பூரிலும் சென்னையிலும் வேண்டப்படாத சேலைகளைச் சேகரிக்கிறார்கள். பின் அவற்றில் பயன்படுத்தக்கூடியவற்றை ஆதரவற்ற பெண்களுக்கு நன்கொடையாக வழங்குகின்றனர்.
மற்றவற்றை 'போட்லி' எனப்படும் சுருக்குப்பைகளாக்குகின்றனர்.
சென்னையில் இயங்கும் 'சேரீ ஃபார் நாரீ' என்ற அமைப்பு மூலம் இவர்கள் ஆதரவற்ற பெண்களுக்குச் சேலைகளை விநியோகிக்கிறார்கள்.
சென்னையைத் தளமாகக் கொண்ட 'பை ஆர்யாஸ்' நிறுவனரின் வடிவமைப்பில், பயன்படாத சேலைகளைக் கொண்டு 'போட்லி' சுருக்குப்பைகளைத் தயாரிக்கின்றனர் 'பெட்டர் வோர்ல்ட்' அமைப்பிலுள்ள மாற்றுத் திறனாளி பெண்கள்.
"வாழ்வாதாரத் திறன்களை அளிப்பதோடு, இது அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தையும் கொடுக்கின்றது," என்றார் குமாரி ஸ்லோகா.
இதன்மூலம் திரட்டப்படும் நிதி உடற்குறையுள்ளோருக்கு உதவும், 'பெட்டர் வோர்ல்ட்' அமைப்பின் துணை அமைப்பான 'ஸ்டோரெட்' எனும் கடைக்கு வழங்கப்படுகிறது.
"நான் சிங்கப்பூரில் இருந்து செயல்படுவதால், எங்களது முயற்சியின் தாக்கங்களை படங்களின் மூலமாகவே அறிய முடிகின்றது. இருப்பினும், பயனடையும் பெண்களின் மகிழ்ச்சியையும், அவர்கள் சுதந்திரமாகப் பணிபுரிவதையும் காணும்போது மனநிறைவாக உணர்கிறோம்," என்றார் யுனைடெட் வோர்ல்ட் கல்லூரியில் பயிலும் குமாரி ஸ்லோகா.
இவர்களின் சமூகப் பணி 2021ஆம் ஆண்டில் தொடங்கியது. 2021ல் கொவிட்-19 நோய்த்தொற்றினால் உறவினர் இருவர் உயிரிழந்தபோது, இந்தியாவின் நோய்ப்பரவல் சூழலுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் குமாரி ஸ்லோகாவின் மனதில் ஆழப்பதிந்தது. அச்சமயத்தில் 'பெட்டர் வோர்ல்ட்' அமைப்பைப் பற்றி அறிந்த இவர், அவர்கள் தயாரித்த முகக்கவசங்களை விற்கவும் உதவினார்.
புதிதாகத் தொடங்கப்பட்ட தங்களது சமூக சேவை நிறுவனத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில், இவ்வாண்டு சென்னையில் 'போட்லி' கண்காட்சிக்கு இம்மாணவிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.