கல்வியில் பின்தங்கியிருந்த இந்திய மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் தமிழர் பேரவை 1982ஆம் ஆண்டில் தொடக்கநிலை, உயர்நிலை, தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல், தமிழ் போன்ற பாடங்களுக்கு இலவச துணைப்பாட வகுப்புகளைத் தொடங்கியது.
கிட்டத்தட்ட 120 பெரியவர்களும் 80 உயர்கல்வி நிலைய மாணவர்களும் இந்த வகுப்புகளை நடத்தினர். இப்பாடங்கள் 1994ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தீவு முழுதும் உள்ள 20 பள்ளிகளில் நடத்தப்பட்டதாகவும் அக்காலக்கட்டத்தில் ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 2,000லிருந்து 2,500 மாணவர்கள்வரை இந்த வகுப்புகளின் மூலம் பயன்பெற்றதாகவும் சிங்கப்பூர் தமிழர் பேரவையின் தலைவர் திரு வெ பாண்டியன், 60, தெரிவித்தார்.
சிண்டாவின் 'ஸ்டெப்' துணைப்பாட வகுப்புகள்
அதன்பின்பு, 1992ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் (சிண்டா) 'ஸ்டெப்' துணைப்பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி உதவியை வழங்க வேண்டுமென்ற நோக்குடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் தேர்ந்த ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த தொடங்கினர்.
அண்மையில், வசதியற்ற இந்திய மாணவர்கள் இலவசமாகவும் மற்ற இந்திய மாணவர்கள் $10 கட்டணம் செலுத்தியும் இப்பாடங்களில் பங்கேற்கலாமென சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி, திரு அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்தார்.
தற்போது, இத்திட்டத்தின் மூலம் சுமார் 4,000 மாணவர்கள் பயனடைந்து வந்தாலும், சில பெற்றோர்கள் தனியார் துணைப்பாட வகுப்புகளை நாடும் போக்கு அதிகரித்து வருகிறது என அவர் கூறினார்.
பல பெற்றோர்கள் பிள்ளைகளின் மதிப்பெண்கள் மீது மட்டும் அதீத கவனம் செலுத்துவதால் இந்த சூழ்நிலை நிலவுவதாக அவர் கருதுகிறார்.
இவ்வாறு செய்வதன் மூலம், பிள்ளைகளின் மன உளைச்சல் அளவை சில பெற்றோர்கள் கவனிக்க தவறிவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
'ஸ்டெப்' துணைப்பாட வகுப்புகள் மாணவர்களின் மதிப்பெண்களையும் தாண்டி அவர்களது மனநலனையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதென அவர் தெரிவித்தார்.