சிங்கப்பூரின் ஆக உயரிய கல்வி விருதான அதிபர் கல்விமான் விருது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கழித்து, உள்ளூர் இந்தியப் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தை மருத்துவரான டாக்டர் பெலிண்டா முருகேசு 1976ஆம் ஆண்டில் அதிபர் கல்விமான் விருதைப் பெற்றார். 46 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்விருதினைப் பெற்றிருக்கும் இரண்டாவது உள்ளூர் இந்தியப் பெண் எனும் பெருமை 19 வயது கோவிந்தன் சோலைவள்ளியைச் சேரும்.
அதிபர் கல்விமான் உபகாரச் சம்பளம், சிங்கப்பூர் ஆயுதப் படையின் உபகாரச்சம்பளம் என இரட்டை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ள சோலைவள்ளி, நெதர்லாந்திலுள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டக்கல்வியில் அனைத்துலக உறவுகள், அமைப்புகள் தொடர்பான கல்வியை மூன்றாண்டுகளுக்குப் பயிலவுள்ளார்.
நெதர்லாந்தில் மேற்படிப்பு
லிட்டில் இந்தியாவின் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் இருக்கும் சோலைவள்ளியின் வீட்டுக்குச் சென்றபோது வாசலில் பசுமையான செடிகளும் மலர்ந்த முகங்களும் வரவேற்றன.
அன்றிரவு நெதர்லாந்து செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தார் சோலை. பயணப் பெட்டிகள் வரவேற்பு அறையில் தயாராக இருந்தன. வீவக குடியிருப்பில் வளர்ந்தது பல இனிமையான நினைவுகளைத் தந்தது என்றும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் உறவினர்கள் போல் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதாகவும் சோலை கூறினார்.
“எனக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாளன்று பக்கத்துவீட்டில் உள்ளவர்கள் எனக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் வீட்டுக்கு வந்து கேக் வெட்டி கொண்டாடினர். பல ஆண்டுகளாக இதே புளோக்கில் வசித்து வருவதால் இன்ப துன்பங்களில் அனைவரும் பங்கெடுத்து கொள்வோம்” என்று நெகிழ்வுடன் கூறினார் சோலை.
“சோலைக்கு வழங்கப்பட்டுள்ள அதிபர் கல்விமான் விருது அவரது கடின உழைப்பிற்கும் மனத்திடத்திற்கும் கிடைத்த அங்கீகாரம். இவ்விருதின் முக்கியத்துவமும் ஆழமும் பெற்றோர் என்ற முறையில் இன்னும் முழுவதுமாக எங்களுக்கு புலப்படவில்லை,” என்று பூரித்தனர் சோலையின் பெற்றோர்.
ஆங்கிலோ சீனத் தொடக்கக் கல்லூரியில் படித்த காலத்தில் தற்காப்பு அமைச்சு நடத்திய மெய்நிகர் அனுபவ நிகழ்ச்சிகளில் பங்கேற்றது வருங்காலப் பணியினைத் தேர்ந்தெடுக்க அவருக்கு உதவியது.
“என்னுடைய எண்ணத்திற்கும் சுபாவத்திற்கும் திறனிற்கும் சிங்கப்பூர் ஆயுதப் படையில் இணைவது சரியானதொரு தேர்வாக இருக்கும் என்று தோன்றியது. தற்சமயம் நான் சிங்கப்பூர் ஆயுதப் படையில் ராணுவப் பயிற்சி அதிகாரியாக இருக்கிறேன். என்னுடைய படிப்பு முடிந்த பிறகு சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணிபுரிவேன்,” என்றார் சோலை மிகுந்த ஆவலுடன்.
கல்வி என்பது மதிப்பெண் சார்ந்தது மட்டும் அல்ல என்பதற்கு சோலைவள்ளி ஓர் எடுத்துக்காட்டு. பள்ளி காலங்களில் அவர் சாராசரி மாணவியாகவே தேர்ச்சி பெற்றார்.
எனினும், உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்து பொதுக் கொள்கைகள், அனைத்துலக உறவுகள் தொடர்பான தலைப்புகளில் பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு கலந்துரையாடல்களிலும் விவாதங்களிலும், பட்டிமன்றங்களிலும் பங்கெடுத்தார்.
பக்கபலமாக நிற்கும் பெற்றோர்
சோலைவள்ளி ஆபத்துகள் நிறைந்த ராணுவப் பணியைத் தேர்ந்தெடுத்ததை அடுத்து, மகள் அறிவியல் துறையில் மேற்படிப்பைத் தொடர வேண்டும் எனத் தாயார் திருவாட்டி ருக்மணி விரும்பினார். எனினும், சோலை தமது முடிவில் உறுதியாக இருந்ததால், அவரது பெற்றோர் இந்தத் துறையில் எதிர்காலம் எப்படி இருக்கும், வேலைச் சூழல், வருமானம் போன்றவை பற்றி குடும்பமாக கலந்துரையாடிய பின்னர் சோலையின் விருப்பத்திற்கு துணை நிற்க உறுதிகொண்டனர்.
“சோலை மிகுந்த தைரியசாலி. தன்னிச்சையாக செயல்படக்கூடியவர். தம்முடைய வேலைகளை தாமே செய்ய விரும்புபவர். அவரது சொல், எண்ணம், சிந்தனை மற்றும் செயலில் என்றுமே எனக்கு நம்பிக்கை உண்டு,” என்று தலைமை நிர்வாகியாகப் பணிபுரியும் சோலையின் தந்தை திரு கோவிந்தன், 60, தெரிவித்தார்.
சித்தார் இசையிலும் திறமைசாலி
வீட்டில் ஆங்காங்கே சோலை தன்னுடைய பெற்றோர், அண்ணனுடன் எடுத்துக்கொண்ட குடும்ப நிழற்படங்கள் இனிமையான நினைவுகளின் சான்றுகளாக கம்பீரமாய் தொங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலும் ராணுவ உடையில் மிடுக்காகக் காட்சியளிக்கும் சோலை பட்டுப்பாவாடை கட்டி ஒரு புகைப்படத்தில் சித்தார் வாசித்துக்கொண்டிருந்தார்.
எட்டு வயது முதல் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சித்தார் கற்ற சோலை, தேசிய கலைகள் மன்றத்தின் சில இசைப் போட்டி களிலும் பங்கேற்றுள்ளார். பயிற்சி வகுப்பு கள், போட்டிகள், பரிசுகளைத் தாண்டி இந்தியக் கலைகளை ரசித்து பாராட்டுவதற்கான கலை ஞானம் வேண்டும் என்பது சோலையின் கருத்து. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இவருடைய அண்ணன் கோ. லெட்சுமணன், 24 தபேலா இசைக்கருவி வாசிப்பதில் பயிற்சி பெற்றவர்.
“எங்கள் பிள்ளை கள் இருவருக்கும் படிப்பு, கலை, விளையாட்டு ஆகிய மூன்று துறைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணினோம். பெற்றோராக இவற்றை அறிமுகப்படுத்துவதும் இதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதும் எங்கள் கடமை என்று நினைத்தோம். கட்டுப்பாடும் ஆர்வமும் இருந்தால் அதில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவர்,” என்று கூறினார் 55 வயதான சோலையின் தாயார் திருவாட்டி ருக்மணி.
மென்பந்தாட்டம்
சோலை சிறந்த மென்பந்து (Soft ball) விளையாட்டாளர். 2019ஆம் ஆண்டின் தேசிய பெண்கள் மென்பந்தாட்ட போட்டி யில் மூன்றாவது இடம்பிடித்த தஞ்சோங் காத்தோங் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் மென்பந்தாட்டக் குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார். மேலும் ஆங்கிலோ சீனத் தொடக்கக் கல்லூரியில் படித்த காலத்தில் அக்கல்லூரியின் மென்பந்தாட்டக் குழுவின் தலைவியாகவும் அவர் இருந்தார். தேசிய அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் தன் அணியைப் பிரதி
நிதித்து பல பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.
“விளையாட்டு என்னுடைய உடலையும் மனதையும் வலிமையுடன் வைத்துக்கொள்ள உதவியது. தக்க நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும் வெற்றி தோல்விகளை பக்குவத்துடன் கையாளவும் பழக்கியது. மேலும், குழுவுடன் இணைந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படும் அனுபவத்தையும் எனக்கு வழங்கியது,” என்று விளையாட்டின் வழி கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்களைப் பகிர்ந்துகொண்டார் சோலை.
பொதுப்பணிகளும் விருதுகளும்
பதின்மவயதில் பொதுச் சேவையில் சோலை கவனம் செலுத்த பின்னணியாக அமைந்தது அம்மாவின் தொண்டூழிய முனைப்பு.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் (சிண்டா) பல ஆண்டுகளாகத் தொண்டூழியம் செய்து வருகிறார் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான திருமதி ருக்மணி. தமது பிள்ளை களும் தொண்டூழியத்தில் ஈடுபட வேண்டும் என அவர் விரும்பினார். உயர் நிலைப் பள்ளிக் காலத்தில் அம்மாவுடன் தொண்டூழியம் செய்ய ஆரம்பித்தார் சோலை. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘கோடிங்’ எனப்படும் நிரலிடுதல் கற்றுக்கொடுத்தார்.
சோலைவள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரதிநிதியாகவும் செயல்பட்டுள்ளார். ஆங்கிலோ சீனத் தொடக்கக் கல்லூரியில் படித்தபோது 2022, 2021 ஆண்டுகளுக்கான சிறந்த கலைப் பிரிவு மாணவியாகத் திகழ்ந்த இவர், இரண்டாம் ஆண்டில் பள்ளித் தலைமையாசிரியரின் சிறந்த மாணவர் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் இளம் தலைவர் விருது, சிறந்த கல்வித் தேர்ச்சிக்கான ‘எடுசேவ்’ விருது, சிறந்த தலை மைத்துவ விருது போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் இவர். இந்திய சமூகத்தில் மூத்தோருக்கும் இளம் தலைமுறையினருக்கும் பல வழிகளில் தொண்டூழியம் புரிந்துவரும் இவர், தடுப்பூசித் தூதராகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இளம் போதைப் புழங்கித் தடுப்பாளராகவும் விளையாட்டுத் துறையில் தேசிய தொண்டூழிய இயக்கத்தில் ஆக்ட்டிவ் சிங்கப்பூருடன் (Active Singapore) தொண்டூழியராகவும் சோலைவள்ளி பங்காற்றியுள்ளார்.
படிப்பு, இசை, விளையாட்டு, தொண்டூழியம் என பலவற்றிலும் சிறந்து விளங்கும் சோலைவள்ளி தன்னுடைய நேரத்தை மிகுந்த நேர்த்தியுடன் திட்டமிடுகிறார்.
அவ்வப்போது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவழிக்கிறார். புத்தகம் வாசிப்பது, திரைப்படம் பார்ப்பது, பாடல்களைக் கேட்பது போன்றவைத் இவரது பொழுதுபோக்குகள்.
போதுமான ஓய்வு உடலளவிலும் மனதளவிலும் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தும் என்று தான் அனுபவபூர்வமாக உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
“எனக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பை முழுவதுமாகப் பயன்படுத்தி, வருங்காலத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணிபுரிய விரும்புகிறேன். அரசாங்கம் சார்ந்த கொள்கை உருவாக்கங்களிலும் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதிலும் சமுதாய வளர்ச்சிக்கு உகந்த முடிவுகளை எடுப்பதிலும் அதிகம் பங்களிக்க ஆவலாய் உள்ளேன்,” என்றார் சோலைவள்ளி.